தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் அல்வா கடை..! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு பதிவு

Published On 2025-02-07 15:39 IST   |   Update On 2025-02-07 16:45:00 IST
  • அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பிறகு, திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.

அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். அவர்கள் வழங்கிய அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் அல்வா வகைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

*கல்விக்கடன் தள்ளுபடி

*பயிர்க்கடன் தள்ளுபடி

*5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி

*சிலிண்டர் ரூ.100 மானியம்

*டீசல் விலை ரூ.4 குறைப்பு

*மாதம் ஒருமுறை மின்கட்டணம்

*100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்

*நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2500

*கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ. 4000

*இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

*அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்

*காலியாக உள்ள 3.50.000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

*பழைய ஓய்வூதிய திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News