முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
- தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்தமுறையும் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.