பிரதமர் மோடியுடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சந்திப்பு
- அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாதம் , பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்து, பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் மற்றும் இந்தியாவில் இருந்து மின்சார வாகனங்களுக்கான பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, சான் ஜோஸ் நகரில் எலான் மஸ்க்கை சந்தித்ததுடன் அவரது டெஸ்லா நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.