இந்தியா

உயர் கல்வி கற்க ஜெர்மனியை விரும்பும் இந்திய மாணவர்கள்

Published On 2024-03-08 19:05 IST   |   Update On 2024-03-08 19:12:00 IST
  • மாணவர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு மாற்றாக கனடா செல்ல தொடங்கினர்
  • தரமான பேராசிரியர்கள் உள்ளதால் ஜெர்மனிக்கு மாணவர்கள் விரும்பி செல்கின்றனர்

இந்திய மாணவர்களில் பலர், இளநிலை, முதுநிலை மற்றும் உயர் தொழிற்கல்வி படிப்புகளுக்காக அமெரிக்கா அல்லது இங்கிலாந்து செல்வது வழக்கமாக இருந்தது.

கடந்த 10 வருடங்களாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியர்கள் உள்ளிட்ட அயல்நாட்டினர் அதிகளவில் அங்கு வருவதை தடுக்கும் பொருட்டு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ஆதரவளித்தது வருகின்றனர்.

இதனால், இரு நாடுகளுக்கு மாற்றாக கனடாவிற்கு இந்தியர்கள் பெருமளவில் செல்லத் தொடங்கினர்.

இந்நிலையில், கனடாவை விட ஜெர்மனியில் இந்திய மாணவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதாக இணையவழி கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

32.6 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்காக ஜெர்மனி செல்வதையே விரும்புகின்றனர்.

ஜெர்மனியின் புள்ளியியல் துறை தகவலின்படி கடந்த 5 வருடங்களில் ஜெர்மனிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை 146 சதவீதம் அதிகரித்துள்ளது.


ஜெர்மனியில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் தற்போது 12 சதவீதம் பேர் இந்தியர்கள். 2019ல் 20,562 என இருந்த எண்ணிக்கை, இந்த வருடம் 42,600 என அதிகரித்துள்ளது.

உயர்ந்து வரும் விலைவாசியும், சர்வதேச மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசின் திட்டங்கள் இல்லாததாலும் கனடாவை மாணவர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இத்துடன், கடந்த வருடம், இந்திய-கனடா உறவுகள் நலிவடைந்ததாலும் இந்தியர்களின் பாதுகாப்பில் அச்சம் நிலவுவதாலும், அங்கு செல்ல தயங்குகின்றனர்.

ஆனால், இதற்கு நேர்மாறாக ஜெர்மனியில் உயர்வான கல்வித்தரம், குறைந்த கட்டண விகிதம், உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் தரமான பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி கூடங்கள் போன்ற ஈர்க்கும் அம்சங்கள் உள்ளதால் இந்திய மாணவர்களின் உயர் கல்விக்கு அயல்நாடுகளில் முதல் தேர்வாக ஜெர்மனி மாறி விட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News