உலகம் (World)

இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது: பதிலுக்கு ஹில்புல்லா சரமாரி ஏவுகணை வீச்சு

Published On 2024-09-24 04:02 GMT   |   Update On 2024-09-24 04:02 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள்.
  • இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர்.

பெய்ரூட்:

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.

சமீபத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா, அந்நாடு மீது ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள். இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது.

இந்த தாக்குதலை ஒடுக்கும் விதமாக நேற்று லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உள்ள பகுதிகளில் தீவிர வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.

தலைநகர் பெய்ரூட், தெற்கு லெபனான் உள் ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 274 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, லெபனான் மக்களுக்கு நான் செய்தி ஒன்றை சொல்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர். நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.

உங்கள் வீட்டு அறைகளில் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் பதுக்கி வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் எங்களது நகரங்களை குறிவைக்கின்றன. எங்களது மக்களை ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டும்.

லெபனானியர்கள் ஹிஸ்புல்லாவின் நோக்கத்திற்காக தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. தயவு செய்து, இப்போது ஆபத்து வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். நாங்கள் போர்களைத் தேடவில்லை. அச்சுறுத்தல்களை களையப் பார்க்கிறோம் என்றார்.

இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 200 ஏவுகணைகளை வீசினர். இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

Tags:    

Similar News