இன்று ஒரு துக்கமான நாள்: பிரதமர் நேதன்யாகு உருக்கம்
- இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிக்க உள்ளது.
- வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 6 பேரை சனிக்கிழமை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை 4 பேரின் உடல்களை திருப்பி அனுப்புகிறோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் மொபைல் வீடுகள், கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பிணைக்கைதிகள் இவர்கள் ஆவர்.
ஒப்பந்தத்தின் படி முதல் கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என இஸ்ரேல் கூறியது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் அரசுக்கு நாளை (இன்று) மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஒரு துக்கமான நாள், துக்கத்தின் நாள். இறந்த எங்கள் அன்பான பிணைக்கைதிகள் 4 பேரை வீட்டிற்கு அழைத்து வருகிறோம். நாங்கள் குடும்பங்களை அரவணைக்கிறோம், முழு தேசத்தின் இதயமும் கிழிந்துவிட்டது. என் இதயமே கிழிந்துவிட்டது. உங்களுடையதும் அப்படித்தான் என பதிவிட்டுள்ளார்.