போர் நிறுத்தத்துக்கு நடுவே பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா, உக்ரைன்
- உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
- இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.
ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.