உலகம்

சிரியா உள்நாட்டு போர்: 745 அப்பாவி பொது மக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published On 2025-03-09 06:48 IST   |   Update On 2025-03-09 10:01:00 IST
  • இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய அதிபர் பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் மற்றும் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலைகளில் இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுத படையை சேர்ந்த 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.

கடலோர பகுதிகளான லடாகியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் சிறிய ரக உணவகங்களும் மூடப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு சவால் விடும் வகையில், கடந்த வியாழன் கிழமை தொடங்கிய தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளது. முன்னாள் அதிபர் பஷார் ஆசாத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆயுதப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News