உலகம்

காதலன் ஏமாற்றியதால் அரசிடம் ரூ.87 லட்சம் கேட்ட பெண்

Published On 2025-02-06 14:45 IST   |   Update On 2025-02-06 14:45:00 IST
  • காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
  • பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன். 33 வயதான இவருக்கு ஆன்-லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேமன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். ஆனால் மேமனின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். எனவே காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.

ஆனால் அவர் அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. மாறாக பாகிஸ்தானிலேயே இருக்க போவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானை புனரமைக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக எனக்கு அரசாங்கம் ரூ.1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.87.39 லட்சம்) வேண்டும். இந்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தர வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இங்குள்ள தெருக்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்கு புதிய பஸ்கள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News