search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதல்வருக்கான வீட்டை காலி செய்ய உள்ளார்.
    • மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி அருகிலேயே வீடு பார்த்து வருகிறார்.

    டெல்லி மாநில முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க, ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், மக்கள் தன்னை கலங்கமற்றவர் எனக் கூறும்வரை முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    இதனால் கெஜ்ரிவால் பிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அலுவலக வீட்டை காலியும் செய்யும் நிலையில் உள்ளார். நவராத்திரி காலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரசு அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக புதிய வீட்டை தேடிவருகிறார்கள்.

    "அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இதனால் மிகவும் தீவிரமாக புதிய வீடு தேடப்பட்டு வருகிறது. நியூடெல்லியான அவரது தொகுதி பக்கத்தில் வீடு பார்க்க கெஜ்ரிவால் முன்னுரிமை காட்டுகிறார். அவரது தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவரது நோக்கம்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுக்கள் தங்களுடைய வீடுகளை அவருக்கு ஒதுக்க முன்வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

    கெஜ்ரிவால் தனது வயதான பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    • பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வார் போட்டியிட்டார்.
    • 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழுவின் கடைசி உறுப்பினருக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் நிலைக்குழுவில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநகராட்சியில் மிகவும் அதிகாரம் படைத்த அமைப்பாக இருப்பது உள்ளாட்சி நிலைக்குழு. இந்தக் குழு தான் மாநகராட்சிக்குட்பட்ட திட்டங்களை ஒதுக்கும் முடிவை எடுக்கும். மொத்தம் 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர் கமல்ஜித் ஷெராவத் லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதன் காரணமாக அந்த இடம் காலியானது.

    அந்த காலியிடத்திற்கான தேர்தல் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாரும், ஆம் ஆத்மி சார்பில் கவுன்சிலர் நிர்மலா குமாரியும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் 115 பா.ஜ.க. கவுன்சிலர்களின் ஓட்டு, அக்கட்சியின் வேட்பாளர் சுந்தர் சிங் தன்வாருக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால், இரவில் நடந்த தேர்தல் என்பதால், 125 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பெற்றிருந்த ஆம்ஆத்மியும், 9 கவுன்சிலர்களைக் கொண்ட காங்கிரசும் தேர்தலை புறக்கணித்தனர். இதன்மூலம், பா.ஜ.க. வேட்பாளர் சுந்தர் சிங் தன்வார் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இரவில் நடந்த இந்த திடீர் தேர்தலுக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால், மன்றத்தை கூட்டுவதற்கு மேயருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், மன்றம் கூடுவதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.

    டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவின் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு கிடைக்காதது, புதிய முதல்வராக பொறுப்பேற்ற அதிஷிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

    • மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
    • நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை கோரியுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்களை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.

    லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விரிவான தடயவியல் அறிக்கையையும் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ஒய்.வி. சுப்பா ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை கோரியுள்ளார்.

    முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை பிரசாதமாக தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் ‘சத் பூஜை’ கொண்டாடப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை தொடங்குகிறது. அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் 'சத் பூஜை' கொண்டாடப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். 4 நாட்கள் விரதம் இருந்து புனித நீராடி சூரிய கடவுளை வழிபடுவது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

    துர்கா பூஜை, மேற்கு வங்காளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதனால், இந்த பண்டிகை காலத்தில், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம்.

    இதை கருத்தில்கொண்டு, பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 975 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்மூலம் 1 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல முடியும்.

    இதுதவிர, பயணிகள் நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12 ஆயிரத்து 500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    • வீடியோவை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.

    டாக்டர் ஆக வேண்டும் என்பது மாணவர்கள் பலரது கனவாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். எனினும் டாக்டர் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

    இவ்வாறு போட்டி போட்டு சேரும் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

    அந்த வீடியோவில் இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரியான எய்ம்ஸ் மாணவர் விடுதியை சுற்றிக் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், விசாலமான படுக்கை, மேஜை, அலமாரி மற்றும் சுழலும் நாற்காலி போன்ற வசதிகளுக்கு மாதம் ரூ.15 வாடகை, 24 மணி நேர மின்சாரத்துக்கு மாதம் ரூ.5 மட்டுமே செலவாகிறது என பேசினார்.

    இதனை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.



    • குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது.

    ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்ட்டிருந்தது

    இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் கருத்தில் எந்த தவறும் இல்லை. அதை நீக்கக்கோரும் இந்த மனுவில் எந்த தகுதியும் முகாந்திரமும் இல்லை, இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
    • யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்வர் அதைத் தொடர்ந்து மறைந்த சிபிஐ-எம் பொதுச்செயலாளர் யெச்சூரியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு, முதலமசை்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    முதல்வரை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    • விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு.
    • இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஃஸ்ட் சேல்-ஐ இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

    இச்சலுகையில் பாங்க் ஆப் பரோடா, ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இச்சலுகை செப் 30ம் தேதி வரை இருக்கும். அடுத்தாண்டு ஜன. 1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.
    • கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமருடனான சந்திப்பு ஒரு இனிய சந்திப்பாக நடந்தது. பிரதமர் எங்களிடம் மகிழ்ச்சியோடு பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் இருக்கிறது.

    ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று 3 முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.

    இந்த 2-வது கட்ட பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதியில் இருந்து கடன் பெற்று பணிகள் தொடங்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை மந்திரி இதை ஏற்றுக்கொண்டு 2020-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒன்றிய நிதி மந்திரி இதற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை 2021-ம் ஆண்டு வழங்கியது.

    இந்த பணிகளுக்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருந்தாலும், இதுவரை ஒன்றிய மந்திரியின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால் இதற்கான ஒன்றிய அரசின் நிதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை.

    இதனால் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே தாமதமின்றி இந்த நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளேன். இது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் தேசிய கல்விக்கொள்கையில் கையெழுத்திடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன் என்றார். அதைத்தொடர்ந்து காவிரி பிரச்சனை பற்றி கேட்டதற்கு அது கோர்ட்டில் இருப்பதால் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

    கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    செந்தில்பாலாஜி தன் மீதான வழக்குகளை சட்டப்படி சந்தித்து விடுதலை பெறுவார் என்றார்.

    • ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை.
    • 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம்

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து, மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது:-

    சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கலந்தாலோசிக்கப் பட்டது.

    உணவு பொருட் களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, சைக்கிள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் பாதிக்கப்படும். அதை ஈடுகட்ட சிலபொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தோம். குறிப்பாக, அழகு சாதனப் பொருட்கள், குளிர்பானங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    மக்களின் வரிச்சுமையை குறைக்க 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில், மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த கூட்டம் அக்டோபர் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி பரிந்துரைகள் உருவாக்கப்படும். அவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    அடுத்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மேகாலயா, பஞ்சாப், குஜராத், பீகார் ,கோவா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 மந்திரிகள் பங்கு பெறுகிறார்கள்.

    • நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
    • சோனியா காந்தியின் பெயர் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற வில்லை.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகள் சார்ந்த பாராளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தலைவர்களின் விவரங்கள் வருமாறு:-

    நிதி-பா.ஜ.க. எம்.பி. பர்த்ருஹரி மஹதாப்

    வெளியுறவு-காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    பாதுகாப்பு-முன்னாள் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்

    உள்துறை-பா.ஜ.க. எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால்

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு-தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனில் தத்தரே எரிசக்தி-சிவசேனை எம்.பி. ஸ்ரீரங் பர்னே

    போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம்-ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்-தெலுங்குதேசம் கட்சி எம்.பி. மாகுந்த்த ஸ்ரீநி வாசுலு ரெட்டி

    வேளாண், கால் நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்-காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி

    கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்-காங்கிரஸ் எம்.பி.சப்தகிரி உலாகா.

    தொழில் நிறுவனங்கள்-தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

    நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்-தி.மு.க. எம்.பி. கனிமொழி

    நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் உருக்கு-முன்னாள் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

    நீர் வளங்கள்-பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி

    தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்-பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே.

    இதில், ராதா மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

    நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தியின் பெயர் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.

    பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான 24 கமிட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பாதுகாப்பு விவகார கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியின் தலைவர் பா.ஜ.க. உறுப்பினர் ராதா மோகன் சிங் ஆவார்.

    தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.

    பெண்கள், கல்வி, இளைஞர்கள் மற்றும் விளயைாட்டு விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் சுகாதார விவகார கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலகக்கரி, சுருங்கம் மற்றும் ஸ்டீல் விவகார கமிட்டியின் தலைவராக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சோனியா காந்தி எந்த கமிட்டியின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.

    பா.ஜ.க.-வின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக்கியமான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×