search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly News"

    • முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.

    சென்னை:

    சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-

    தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.

    இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.

    ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

    • வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறைகளை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின்படி முன்பு இருந்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சமாகவும், அந்த பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்து மாநகராட்சியாக மாற்றம் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    • கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
    • 50 கோவில்களில் 100 இசைக் கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:-

    ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோவில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    ஆறு கோவில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகா்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும்.

    பழனியில் உள்ள முருகன் கோவில் சாா்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகா் கோவில், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், குலசை முத்தாரம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி தாயுமானசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

    ஒருவேளை மட்டும் அன்னதானம் வழங்கும் திட்டம், சென்னை மதுரவாயல் மாா்க்கசகாயேஸ்வரா், புழல் திருமூல நாதசுவாமி, திருச்சி லால்குடி பிடாரி அய்யனாா், பெரம்பலூா் அபராதரட்சகா், திருப்பூா் அழகு நாச்சியம்மன், கடலூா் காரத்தொழுவு அழகா் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    சென்னை மாநகரம் மற்றும் புறநகரில் அமைந்துள்ள 115 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், தென்காசி இலஞ்சிகுமாரா் கோவிலுக்கு புதிய தங்கத்தேர்களும், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயா், குமாரவயலூா் முருகன், மணப்பாறை நல்லாண்டவா், திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு புதிதாக வெள்ளித்தோ்கள் செய்யப்படும்.

    ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்துக்கு நிகழாண்டு 420 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவா். கடலூா் மாவட்டம் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் அவதரித்த இல்லம் மறுசீரமைத்து கட்டப்படும்.

    மேலும், 22 வழிபாட்டு மடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்களின் ஆவணங்களை காக்கும் நோக்குடன் முதல் கட்டமாக முக்கிய கோவில்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

    மயிலாப்பூா் கபாலீஸ்வரா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோவில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும்.

    19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோவில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோவில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோவில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோவில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

    பக்தா்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூா் தியாகராஜ சுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரா் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோவில்களில் 100 இசை கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா். பழனி, சென்னை மயிலாப்பூா் கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.

    • பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை.
    • சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது.

    சென்னை:

    சட்ட சபையில் கேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நகராட்சி, பேரூராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

    மேலும், அதன் மூலம் சில பகுதிகளில் மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சியாகவோ மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×