என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar Number"

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    • ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மானியம் பெறும் பயன்பட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் கடந்த 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    மின் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு ஆதார் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள்.

    இப்போது மின் வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு ஆதாரை இணைக்க மேலும் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் இருந்து 2 நாட்களுக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

    இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மலர்விழி அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து அதை சரி பார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 24 முதல் 30ம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.

    உதாரணமாக ஒரு நுகர்வோருக்கு நவம்பர் 28ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கு இறுதி நாள் என்றால் அவருக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதாரை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

    அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் மின்வாரிய அலுவலகங்கள், இண்டெர் நெட் மையங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை பொது பயன்பாட்டு பகுதிகளில் உள்ள காமன் வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளுக்குள் உள்ள மின் விளக்குகளுக்காக தனியாக மீட்டர் வைத்திருந்தால் அது பொதுபயன்பாட்டில்தான் வரும். மானியம் இல்லாமல் முழு தொகையையும் செலுத்துவதால் அதற்கு ஆதாரை இணைக்க தேவை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும்.
    • தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இம்முகாம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நெல்லை நகர் புறக்கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் 103 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தியாகராஜநகரில் நெல்லை மத்திய அலுவலகத்திலும், தற்பொழுது தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.
    • ஆதார் எண் விவரங்களை கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது.

    ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது

    இந்த நிலையில் இன்று உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்கள், புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    கோட்டக்குப்பம் மின்வாரிய இளமின் என்ஜினீயர் ஆதிமூலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை 22-வது வார்டு உறுப்பினர் நாசர் அலி, மற்றும் வார்டு செயலாளர் கமால் ஹசேன் செய்திருந்தனர்.

    முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது.
    • தி.மு.க. சார்பில்வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது. பேரூர் பகுதியில் 100 சதவீதம் முழுமையடையச் செய்ய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந் நிகழ்ச்சி ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் நகர செயலாளர் முத்து வீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், சீதாலெட்சுமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியனது 31. 12. 2022 வரை தொடர்ந்து நடைபெறும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்தின் சார்பாக பிரசார வாகன பேரணி தொடக்க விழா நடைபெற்றது.

    பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வள்ளியூர் கோட்டம் வளன்னரசு, வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனமானது வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 774 மின்இணைப்புகள் உள்ளன. இவர்கள் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்கும்வகையில் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் மின்சாரவாரியம் சார்பில்சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு இடங்களில் மின்வாரி ஊழியர்கள்வீடு, வீடாக சென்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இ-சேவை மையங்களிலும் இந்த பணி நடந்து வருகிறது.

    ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    இந்த பணிகளை மின்வாரிய அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு மையங்கள் மற்றும்இ-ேசவை மையங்களில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க கூட்டம் அலைமோதி வருகிறது.

    • மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
    • 14-ந் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

    சென்னை :

    வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்கு 'ஆதார்' எண் கட்டாயமாக உள்ளது.

    குறிப்பாக மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசின் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளன.

    தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது.

    இங்கு பொதுமக்கள் சென்று ஆதார் எண்ணை இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசின் அனைத்து நிதி உதவி திட்ட பயன்கள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்தின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் ஒழுங்குமுறை சட்டப்படி, தமிழ்நாடு மின்னாளுமை முகமையுடன் கருவூலக் கணக்குத் துறை இணைந்து செயல்படுகிறது. கருவூலக் கணக்குத் துறை, சம்பளம், ஓய்வூதியம் வழங்கல் மற்றும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சம்பளப் பட்டியல் தயாரிப்பு, மாத ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மத்திய அரசின் சட்டத்தின் கீழ், மானியங்கள் உள்ளிட்ட நிதி சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் இனி தங்களது ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலக் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களினால் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை அளிப்பது அவசியமாகிறது.

    இந்த திட்டங்களின் பலனை அடைய விரும்புகிறவர் யாருக்கும் ஆதார் எண் இல்லை என்றால் அவர்கள் இனி ஆதார் எண்ணை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதார் எண் அளிக்கப்படுவதற்கு முன்பே திட்டத்தின் பயனைக் கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணுக்காக பதிவு செய்துள்ளதற்கான அடையாள சீட்டுடன், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு அட்டை, வேளாண்மை கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், 'கெசட்டட்'அலுவலர் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று, அரசுத் துறை அளிக்கும் ஏதாவது ஒரு சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும்.

    திட்ட பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரிவர செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாளப் பதிவை மேற்கொள்ளலாம். அல்லது, ஆதார் ஓடிபி முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்.

    இவை எதுவுமே செயல்படாத நிலையில், ஆதார் கடிதத்தை கொடுத்து அதிலுள்ள கியுஆர் கோட் மூலம் அடையாளத்தை சரிபார்த்து பயனை அளிக்கலாம். அதன்படி பயனாளிகளுக்கு பயனை வழங்கும் அனைத்து வகையான முறைகளையும் பின்பற்ற கருவூலக் கணக்குத் துறை தயாராக இருக்க வேண்டும்.

    திட்டத்தின் பயனாளி குழந்தைகளாக இருந்தால், அவர்களும் ஆதார் நம்பரை வழங்க வேண்டும். அவர்களிடம் ஆதார் எண் இல்லாவிட்டால், ஆதார் நம்பரை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்று அல்லது பிறப்புச்சான்று, பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பெயர்கள் அடங்கிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

    இதுதவிர, பயனாளியின் பெற்றோர், பாதுகாவலர்களுடனான உறவு குறித்த சான்றாக, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, முன்னாள் படைவீரர் என்பதற்கான அட்டைகள், ஓய்வூதிய அட்டை, படைவீரர் கேன்டீன் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

    ஆதார் அங்கீகாரம் பெறுவதில், விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகரிக்கலாம். அல்லது ஓடிபி மூலமாகவும் அங்கீகாரம் அளிக்கலாம். எதுவுமே சாத்தியப்படவில்லை என்றால், ஆதார் கடித கியூஆர் கோட் மூலம் அடையாளத்தை உறுதி செய்யலாம்.

    அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தினால் எந்த ஒரு குழந்தைக்கும் திட்டத்தின் பயன் மறுக்கப்பட்டுவிடக் கூடாது. பயனாளிக்கான தகுதி இல்லாத எவரும் திட்டத்தின் கீழ் பயன் பெறவில்லை என்பதை திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் உறுதி செய்ய வேண்டும். பயனாளி அளிக்கும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் சம்பந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். 14-ந் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமரின் வேளாண் திட்டத்தில் 13-வது தவணை பெறுவதற்கு செல்போன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்றும், நாைளயும் நடக்கிறது.
    • இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பி.எம்.கிஷான் திட்டம் எனப்படும் பிரதரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இடு பொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 13-வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. 13-வது தவணை பணம் வரவு வைப்பதற்கு விவசாயிகள் தங்கள் கைபேசி எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து ekyC பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும்.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் 2100 விவசாயிகளுக்கு eKYC இதுவரை செய்யப்படாமல் உள்ளது. கிராமங்கள் தோறும் இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ekyC மூலம் கைபேசி எண்ணை இணைக்கும் பணியை பொது இ-சேவை மையங்கள் மற்றும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளலாம். விவசாயிகளுக்கு 13-வது தவணையை பெற்று வழங்குவதற்காக eKYC செய்து முடிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக இன்றும், நாைளயும்(19, 20-ந்தேதிகளில்) முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் eKYC செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×