என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amma unavagam"

    • நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 400 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றவர்கள், ஏழை-எளியவர்கள், கூலி தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்வதால் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில அம்மா உணவகங்களில் உணவு இல்லை என்று ஊழியர்கள் சொல்வதால் தற்போது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் அங்கு வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது.

    அவர்கள் அனைவரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.
    • முன்னெச்சரிக்கையாக தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செஞ்சிரோட்டில் அம்மா உணவகம் உள்ளது. இந்த அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.

    அப்போது ஒருவர் சாப்பாடு தட்டில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அம்மா உணவகத்தில் இருந்த சாப்பாடுகளை எல்லாம் அப்புறப்படுத்தினர்.

    முன்னெச்சரிக்கையாக அந்த தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அம்மா உணவகத்தில் கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
    • அம்மா உணவகத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ஏ.பி பத்ரா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு 11 மணி அளவில் வழக்கம் போல பணி முடிந்து ஊழியர்கள் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று காலை 5.30 மணி அளவில் உணவகத்தை திறக்க சூப்பர்வைசர் ரேகா வந்தார் அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. மேலும் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரேகா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

    இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
    • சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலம் :

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
    • அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் விற்பனை சரிந்து வருகிறது. அதனை மேம்படுத்த தேவையான நிதி இல்லாததால் வியாபாரம் குறைகிறது.

    3 வேளையும் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி மாநகராட்சிக்கு செலவாகிறது.

    ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.20 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. இதனால் பெரும்பாலான அம்மா உணவகங்களில் கோதுமை மாவு வழங்கப்படாததால் இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய ஆய்வின் படி 50 அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான வருவாயை ஈட்டி வருகின்றன. அங்கு தினமும் ரூ.100, ரூ.150-க்கு மொத்தமே விற்பனை ஆகிறது. மிக குறைந்த அளவில் மக்கள் அங்கு வருவதால் விற்பனை சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    இதையடுத்து அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோரிடம் 21 கேள்விகள் கேட்டு அதனை பதிவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்களா? அரசு, தனியார் நிறுவன ஊழியர்களா?, 60 வயதுக்கு மேற்பட்டவரா, சொந்த வீட்டில் வசிப்பவரா, அல்லது வாடகை வீட்டில் வசிப்பவரா, எத்தனை வேளை சாப்பிடுகிறார், என்ன காரணத்திற்காக அங்கு சாப்பிடுகிறார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புகிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்தவரா, பிற மாநிலத்தவரா, என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் பெறப்படுகிறது. அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கட்டுமான தொழிலாளர்கள் சாப்பிட்டால் அதற்கான தொகையை கட்டுமான வாரியத்திடம் வசூலிக்கலாம் என அரசு பரிசீலிக்கிறது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
    • ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் அதிக மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை நிறுத்தும் வகையில் கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 பட்ஜெட்டுகளில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை. அம்மா உணவகத்தில் ஒரு கடையில் ரூ.4 ஆயிரம் வருமானம் வருகிறதென்றால், ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் சீர்செய்ய, பணியாளர்களை மாற்றி மாற்றி வேலை கொடுக்கிறோம். அனைத்து இடத்திலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல்வேறு அம்மா உணவகத்தில் இருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. அங்கு தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அதனால் ருசியான உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அங்கு அரசு தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர், ஆதாரத்தோடு சொன்னால் நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது தவறு நடக்கலாம், நான் இல்லை என்று மறுக்கவில்லை. எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அம்மா உணவகத்தை சிறப்பாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- மாநகராட்சி மூலம்தான் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்துக்கு சென்னை மாநகராட்சி மூலம் இந்த ஆண்டு ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் என்பது ரூ.15 கோடியாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அம்மா உணவகங்களில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் கிடைக்கிறது. ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:-

    ஒரு அம்மா உணவகத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் வரை பணியாற்றினோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மாத சம்பளம் ரூ.9000 வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். போதிய வருமானம் கிடைக்காத நேரத்தில் எங்களது சொந்த பணத்தை கொடுத்து இலக்கை அடைந்து வருகிறோம். இதனால் பலர் வேலையைவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன.

    அம்மா உணவகங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு தற்போது குறைந்து வருகிறது. எனவே அம்மா உணவகத்தில் உணவில் மாற்றம் தேவையா என்ற வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.

    இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதற்கு ஏற்ப அம்மா உணவகங்களில் உணவில் மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை உணவுகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகங்களில் உணவு வகைகளை ருசியாக தரவேண்டும் என்ற கருத்தை பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இட்லியுடன் கூடுதலாக சட்னி, வடை தர வேண்டும் என்கின்றனர்.

    மதியம் வெள்ளை சாதம், ரசம், அப்பளம் அல்லது வடை, ஊறுகாய் வழங்க வேண்டும் என்கிறார்கள். இரவில் சப்பாத்தி மட்டுமின்றி இட்லி போன்றவற்றையும் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கலவை சாதத்துக்கு மாற்றாக தனிச்சுவை கொண்ட சாத வகைகளை வழங்கலாம் என்றும் கூறினர்.

    பொதுமக்களின் கருத்தின் படியே இவற்றை வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். கலவை சாதம் இல்லாத ஒருவேளை உணவு வகைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை செலவிட பலர் தயாராக உள்ளனர். ஒரே விதமான உணவுக்கு பதிலாக சில மாற்றங்களை செய்து வழங்கும் நிலையில் பொதுமக்கள் ஓரிரு ரூபாய் கூடுதலாக கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

    இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழக அரசின் முடிவை பொறுத்து அம்மா உணவங்களின் உணவு வகைகளிலும், விலையிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    • தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
    • அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாட்டின் தேவைகளை அறிந்து, தமிழக மக்களின் நாடித் துடிப்பினை உணர்ந்து, அதற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, உழைக்கும் மக்களை, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை காப்பதற்காக, மலிவு விலையில் தரமான உணவினை வழங்கும் வண்ணம் நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் அம்மா உணவகங்களை உருவாக்கினார்கள். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அம்மா உணவகங்களின் செயல்பாட்டினை நீர்த்துப் போகச் செய்த பெருமை தி.மு.க.வையேச் சாரும். அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை என்பதோடு, குறைந்த அளவு உணவே தயார் செய்யப்படுகிற நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, உணவருந்த வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. பல இடங்களில் பல உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    உதாரணமாக, சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் குடிநீர்த் தொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து இருப்பதாகவும், உணவகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

    இதேபோன்று, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து பயனற்று இருப்பதாகவும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இயங்காததன் காரணமாக இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து கிடப்பதாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

    திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள அம்மா உணவகம் கழிவுநீர் மையமாக காட்சி அளிப்பதாகவும், மோட்டார் பழுதடைந்து இருப்பதாகவும், கஸ்தூரிபாய் மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் இதே நிலை இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    இந்தப் பகுதிகள் அனைத்துமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்டவை. இந்த நிலைமைதான் அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அம்மா உணவகங்கள் கேட்பாரற்று, கவனிப்பாரற்று அனாதையாக காட்சி அளிக்கின்றன.

    சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அம்மா உணவகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன. ஆனால், தற்போதைய அம்மா உணவகங்களைப் பார்க்கும்போது, அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டிற்கு முன்பே இதுபோன்ற நிலைமை நிலவுவதாகவும், இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற பதிலை அதிகாரிகள் தெரிவிப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒரு திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பது தெளிவாகிறது.

    ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 393 அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவை 10 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன. கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்டவை பழுதாகி அதனை சரி செய்து இயக்கி வருகின்றனர்.

    தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்கள் எவை எவை தொடர்ந்து பயன்படுத்தலாம், அவற்றில் சரி செய்யக்கூடியது எது, பயன்படுத்த தகுதியற்ற பொருட்கள் எவை என கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சென்று பொருட்களை ஆய்வு செய்து ஓட்டை உடைசலானதை ஏலத்திற்கு விடவும் அதற்கு பதில் புதிய பொருட்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பழுது பார்த்து பயன்படுத்தக் கூடியவற்றை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 2 வாரத்தில் முடிக்கப்பட்டு புதிய பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதே போல பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தந்த கட்டிடங்களில் கூரை ஒழுகுகிறது, பொதுமக்கள் சாப்பிட முடியாமல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து அற்றை சரி பார்க்கும் நடவடிக்கையும் மாநகராட்சி மண்டல அலுவலர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    ×