என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birds"

    • மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
    • குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூர் நஞ்சராயன் குளம் தமிழகத்தின், 17 -வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

    கடந்த மாதம் ரஷ்யா, மங்கோலியா பகுதிகளில் இருந்து வரும் பட்டைத்தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறு கொசு உள்ளான், பேதை உள்ளான், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.

    இதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், பழுப்பு நாரை, மடையன், கரண்டிவாயன், நெடுங்கால் உள்ளான், புள்ளிமூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மீன்கொத்திகள் என பறவைகள் வந்தன. வழக்கமாக கூட்டமாக வரும் பறவையினங்கள் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:- வெளிநாட்டு பறவைகள், குளிர்கால வலசையாக நஞ்சராயன்குளம் வந்துள்ளன. வழக்கமாக 100 முதல் 200க்கும் அதிகமான பறவைகள் கூட்டமாக வந்து செல்லும். இம்முறை 20க்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    வெளிநாட்டு பறவைகள் தண்ணீரில் நடந்து சென்றுதான் உணவு தேடும். ஆழமான குளம், தண்ணீர் அதிகம் உள்ள குளங்களில் தங்காது. குளத்தில் அதிகம் தண்ணீர் இருப்பதால் அருகே உள்ள மற்ற பகுதிக்கு சென்றிருக்கும்.கோவை, ஈரோடு பகுதியிலும் பறவை வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

    கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.

    • பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

    இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.

    அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

    இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

    தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

    • திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது.
    • வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும்.

    முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு வனத்துறை சார்பில் 2 கட்டமாக நடைபெறும்.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.

    வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அறிவொழி, துணை கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 102 இனங்கள் காணப்பட்டது பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட கணக்கெடுப்பில் வடுவூர் ஏரி, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் உள்பட 20 நீர்நிலைகளில் 102 பறவை இனங்கள் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.

    நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழி, நெடுங்கால் உள்ளான், நீர் காகம், ஐரோப்பா கரண்டிவாயன், ஆலா, மடையான் ஆகிய இனங்களில் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி இருப்பது தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளது. ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

    7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 4ம் நாளான இன்று கிராமத்தில் உள்ள பறவைகளை கணக்கீடு மற்றும் கண்டறிதல் நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டார். அவரின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் பறவைகளை கண்டறிய கிராமத்தின் உட்புறம் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்.

    • 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது.
    • அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    கோவை:

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும்.

    நீர் பறவைகள் மற்றும்நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடை பெற்று வருகிறது.

    நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4, 5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது.

    இதில் முதலில் கடந்த 28 மற்றும் 29-ந் தேதிகளில் நீர்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

    கோவை மாவட்டத்தில் வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலூர், சிங்காநல்லூர், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலூர், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர்குளம், வேடப்பட்டி, காளப்பட்டி என 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது. இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் என 5 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

    இந்த கணக்கெடுப்பில் சராசரியாக 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் உள்ள குளங்களுக்கு மொத்தமாக 9,500 பறவைகள் வந்துள்ளன. இதனை கணக்கெடுப்பு குழுவினர் பார்வையிட்டு கணக்கெடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கிளி, கழுகு, வாத்து, ஹார்ன்பில், பஞ்சுருட்டான், காமன் டெர்ன், மீன்கொத்தி, நாரை வகைகள், தூக்கணாங்குருவி என பல வகையான பறவைகள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இதில் அரிய வகை பறவை இனங்களில் வாளையார் பகுதியில் கிரே ஹார்ன்பில் எனப்படும் சாம்பல் நிற இருவாச்சியும், பெத்திக்குட்டையில் ஆஸ்ப்ரே கழுகு வகையும் கண்டறியப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அபிராமம் பகுதியில் இரை தேடி சரணாலய பறவைகள் வருகின்றன.
    • வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சித்தி ரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் போதிய பருவமழை பெய்யாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பறவை கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப் பட்டது.

    பெரும்பாலும் இங்கு வரும் பறவைகள் 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இரைதேடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இரை கிடைக்காததால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் இங்கு அறுவடை முடிந்த வயல்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது புழு, பூச்சிகளை இரையாக தின்று வருகின்றன. அபிராமம் பகுதியில் உள்ள வயல்களிலும் கொக்குகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடி வருகின்றன.

    • சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
    • அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.

    அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.

    அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.

    ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.

    பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
    • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

    • சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
    • பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

    ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.

    அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

    இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.

    இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.

    இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.

    இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.

    தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.

    அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

    இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

    இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.

    • உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
    • டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×