என் மலர்
நீங்கள் தேடியது "dogs"
- கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
- இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.
இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.
எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
- விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.
நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.
சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன.
- பாட்டப்பத்து, அரசன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலையில் நடமாட அச்சப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனுக்கள் வந்தன.
இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் இன்று பிடிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பாட்டப்பத்து, அரசன்நகர், கிருஷ்ணபேரி, பெரியதெரு, நடுத்தெரு, குற்றாலம்ரோடு, ஆசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
- முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
- பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
- சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.
- பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தெரு நாய்கள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதில் குறிப்பாக கண்ணூர் மாவட்டம் முழப்பிலாங்காட்டில் கடந்த 11-ந்தேதி தெரு நாய்கள் கடித்து குதறியதில் அந்த பகுதியை சேர்ந்த நவுஷாத்-நுசீபா தம்பதியரின் மகன் நிஹால் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.
ஆனால் அது முழுமை பெறாததால், நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
இதனால் வீதிக்கு வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தெருநாய்களின் தாக்குதலில் மேலும் ஒரு மாணவர் மற்றும் மாணவி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
முழப்பிலாங்காடு அருகே உள்ள பச்சக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஜான்வி (வயது 9). 3-ம் வகுப்பு மாணவியான இவர் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த தெருநாய் அவரை கடித்தது. சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.
ஜான்வியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுமி ஜான்வியை பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமியை நாய்கள் கடித்ததை பார்த்தவர்கள், தெருநாய்கள் சிறுமியை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக தெரிவித்தனர். இதற்கிடையில் கொல்லம், சத்தினம்குளத்தில் மற்றொரு சம்பவமாக தெருநாய்கள் கடித்ததில் 10-ம் வகுப்பு மாணவர் ஆதில் என்பவர் காயமடைந்து உள்ளார். அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
- வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.
உடுமலை:
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பெரியகோட்டை, தாந்தோணி, சின்னவீரம்பட்டி கிராமங்களில் கால்நடைகள் வேட்டையாடுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட வேண்டும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர்.
அதற்கு பிரதிநிதிகள் தரப்பில் வேட்டைக்கு செல்லும் நாய்களை வேட்டை முடிந்த பிறகு உரிமையாளர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.அதை வனத்துறையினர் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
- தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.
- பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.
சென்னை மற்றும் தமிழகத்தில் கேட்பாரின்றி, தெருக்களிலும், சாலைகளிலும் செல்ல பிராணிகளான நாய்கள், பூனைகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் பசி பட்டினியுடன், பரிதாபத்துடன் அலைந்து திரிகின்றன.
இதையொட்டி தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரித்து வளர்த்து பொதுமக்களுக்கு தி சேய்ஸ் அமைப்பினர் தத்து கொடுக்கிறார்கள்.
நாய்கள் மட்டுமல்ல பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. இந்த செல்லப் பிராணிகளை ஏராளமான பொதுமக்கள் தத்து எடுத்து செல்கின்றனர். இது குறித்து அமைப்பின் நிறுவனர் ஜெய சூர்யா கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் எங்களின் அமைப்பு உள்ளது. சென்னையில் மிகவும் சிறப்பாக நாய்களை பராமரித்து வழங்குகிறோம்.
தெரு நாய்களை பிடித்து வந்து அவற்றை நன்றாக பராமரித்து தத்து கொடுத்து வருகிறோம்.
பெசன்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். இந்த முறை 500 நாய்களை தத்து கொடுத்துள்ளோம். தத்து கொடுத்ததுடன் விடாமல் அவை சரியாக பராமரிக்கப் படுகிறதா? என்று நேரில் சென்று விசாரிப்போம்.
சரியாக பராமரிக்கப்படாத நாய்களை திருப்பி எடுத்து வந்து விடுவோம். பெசன்ட் நகரில் நேற்று நடந்த முகாமில் சுமார் 500 நாய்கள் தத்து கொடுத்துள்ளோம்.
துப்புரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை போலீசார், பொதுமக்கள் என அனைவரும் குழந்தைகளை போல தத்து எடுத்து சென்றனர் என்றார்.
- நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
- மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன.
நெல்லை:
மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலக் கருங்குளம் பகுதி. இங்கு விவசாய தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
இறந்து கிடந்த 20 நாய்கள்
இந்நிலையில் இன்று காலையில் மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இவற்றில் பல நாய்கள் நீர்நிலைகளின் அருகே இறந்து கிடக்கிறது.
எனவே அந்த நீர்நிலைகளில் விஷம் கலக்கப்பட்டு அதை குடித்ததால் நாய்கள் இறந்ததா? அப்படி என்றால் அந்த நீரை மற்ற விலங்குகள் குடித்து அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
- ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.
மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன.
- நாய்கள் பிடிக்கப்பட்டது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி,
ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின்படி, சுகாதார அலுவலவர் ஸ்ரீதர் அறிவுரைப்படி நகராட்சிஅலுவலர்கள் களமிறங்கினர். அப்போது ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
- தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
- இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.
- பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர்.
புதுச்சேரி:
புதுவையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாய்கள் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அச்சமடையும் பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சியிடமும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் புகார் அளித்திருந்தனர்.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில் உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து சென்று வருகின்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நகராட்சி ஊழியர்கள் தங்களது வாகனங்களில் புதுவை கடற்கரைசாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்களை பிடிக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நாய்பிடிக்கும் வாகனத்தின் சாவியை அவர்கள் வாகனத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் உடனே பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர். அப்போது போலீசாரிடமும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றும், வாகனத்தின் சாவியை எடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கூறி விலங்குகள் நல ஆர்வலர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.