என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jitendra Singh"

    • புதிய கல்விக் கொள்கை முற்போக்கானது, தொலை நோக்கு பார்வை கொண்டது.
    • மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிக்கிறது.

    மொரதாபாத்:

    உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: 


    இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.

    புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

    வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • முதலமைச்சராக இருந்து, பிரதமராக பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை.
    • உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது.

    சென்னை நுங்கம்பாக்கம் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், தமிழை மேலும் பிரபலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் கடந்த மே மாதம் இங்கு வந்த போது பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். தமிழகம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்றும், தமிழ் மொழி நிரந்தரமானது, அதன் கலாச்சாரம் உலகளாவியது என்றும் பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்தார்.

    தமிழ் மொழியின் சிறப்பையும், தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிரபலமான கவிதையை மேற்கோள்காட்டி பேசினார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரோ ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்றும் அப்போது பிரதமர் கூறினார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சி முறை, எதிர்காலத்திலும் நிலைத்து, நீடித்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும். கடந்த 20 ஆண்டுகளின் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமராக மோடி பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை என்றும், உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது. இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.

    • தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு.
    • சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து பணியாற்றவும் ஒப்புதல்.

    இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பெட்ரி ஹொன்கோனென், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு துறை சார்ந்த குழுவினரும் கலந்து கொண்டனர்.

    பின்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சி பணிகளில் இணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது தெரிவித்தார். குறிப்பாக சென்னை ஐஐடி உட்பட 4 இந்திய கல்வி நிறுவனங்கள், பின்லாந்து நிறுவனங்களுடன் குவாண்டம் கணினி மேம்பாட்டு பணிகளுக்காக இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது. 


    5ஜி தொழில்நுட்பம்,  சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள், உயிரி சார்ந்த பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் செயல்பட பின்லாந்து ஆர்வமாக உள்ளது என்று ஹொன்கோனென் உறுதி அளித்தார்.

    அறிவியல், புதுமை கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், எதிர்கால மொபைல் தொழில் நுட்பம், டிஜிட்டல் கல்வி உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. மேலும் சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து செயல்படவும் இந்தியாவும், பின்லாந்தும் ஒப்பு கொண்டன.

    • இந்திய மருத்துவ சாதனங்களின் விலை, உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையில் உள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம் குறித்து இந்தியா ஆய்வு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ கருவிகள் பிரிவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார். செயற்கையான இதயவால்வு, ஆக்சிஜன் செலுத்தும் கருவி போன்ற மருத்துவ உபகரணங்களை இந்த கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    உயிர் காக்கும் மருந்துவக் கருவிகள் தயாரிப்பில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்றும், அவற்றை தயாரிப்பதற்கான செலவு மற்ற நாடுகளை விட மூன்றில் ஒரு பங்காக உள்ளது என்றும் அவர் கூறினார்.

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரத்திலான மருத்துவ உபகரணங்கள் நமது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களைவிட இது முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்த செலவில் கிடைக்கின்றன என்றும் மந்திரி குறிப்பிட்டார். 

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியா ஆராய்ச்சி செய்ததை மேற்கத்திய நாடுகள் வியப்புடன் பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    • ஆராய்ச்சி, கல்வி, தொழில்துறை ஒருங்கிணைப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், இஸ்ரோ திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

    ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன.

    ப்ராரம்ப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம், புதிய விடியல் என்று தெரிவித்தார். ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 


    தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் விண்வெளித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித்துறையில் அரசு தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
    • சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுகின்றன.

    டெல்லியில் நிதி ஆயோக் மற்றும் அணுசக்தித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:'

    உலகம் முழுவதும் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு அணுசக்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை, புதைபடிவமற்ற ஆற்றல் வளங்களின் வாயிலாக மேற்கொண்டு வருகின்றோம்.

    தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தனியார் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கேற்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பிரதமரின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
    • நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான மாநாட்டில் பிரதமர் அலுவலகத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பலவேறு சலுகைகளை வழங்கி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிப்பு, ஓய்வூதியம் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் நிரப்பப்பட்டுள்ளன. இது மோடியின் ஆட்சியில் மட்டுமே சாத்தியமானது. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும். 


    இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது அவர்களின் பங்களிப்பும் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த 1600க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.

    மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல சட்டங்களும் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்தார்.
    • மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் தனது பதிலில் மேலும் கூறுகையில், '2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த்த ஜிதேந்திர சிங், இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது என தெரிவித்தார்.

    • சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
    • சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை.

    மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா,ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

    சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சத்து 13 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் முத்ரா வங்கிக்கடன் திட்டத்தின் மூலம், இதுவரை 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கப் பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக பிரதமரின் ஸ்வாநிதித் திட்டம் செயல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் வரை இந்தத் திட்டத்தின் மூலம் 37 லட்சத்து 95 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

    • காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 


    இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
    • இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பல்வேறு வாய்ப்புகளை அரசு உருவாக்கியுள்ளது.

    கஜ்ரவுலா:

    உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற் கொண்டுள்ள தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

    இந்திய இளைஞர்களை ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும், உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் அவர்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியா எதிர்காலத்தை மையமாகக் கொண்டது, அது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. 


    கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற கூட்டணி அரசுகள் பதவி வகித்தன. இது போன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. 2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்தனர். அது கொள்கைகளில் நிலைத் தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியது.

    தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 80,000-ஐ கடந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5000 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலை மருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஊரக மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • அரசு திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்று சேரவேண்டும். பிரதமர் மோடியின் இந்த எண்ணத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் மனதில் கொள்ளவேண்டும்.

    எந்த ஒரு அரசு திட்டங்களுக்காகவும், நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியுடன் இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், தேவையான பயனாளிகளுக்கு சென்றடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×