என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEP"

    • குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்.
    • வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன்.

    காந்திநகர்:

    குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது.

    என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது.
    • இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றிபெறும்.

    தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு அனைத்தையும் செய்தது காங்கிரஸ். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றி பெறும்" என்றார்.

    • சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
    • இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள்

    இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

    நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார்,

    "தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.

    நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே  அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும்.

    நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.

    ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர்  கோல்வால்கர் கூறியுள்ளார்.

    இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    • முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தி எதிர்ப்பு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியை திணிக்காத தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன.

    புதிய கல்விக்கொள்கை 2020 இல் இந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படும். தமிழகத்தில் தமிழில் தான் கற்பிக்கப்படும் என்றுதான் சொன்னோம்.

    சிலரின் அரசியல் ஆசைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. புதிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. அதில், இந்தி , தமிழ், ஒடியா, பஞ்சாபி உட்பட எல்லா மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களால் இதை சிலர் எதிர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்ததல்ல என்றும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி  தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

    மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், எந்த மொழியும் தாழ்ந்ததல்ல.  

    குஜராத்தி தமிழ் பெங்காலி அல்லது மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல.  அதனால்தான் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

    சில மாநிலங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் நீங்கள் நினைப்பது மக்களின் நலனுக்காக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து நமது கல்வியை விடுவிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும், அதற்கு பள்ளிக் கல்வியே அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    • அகில இந்திய தேர்வுகளை எதிர் கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம்.
    • மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

    தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

    தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்றே நான் சொல்கிறேன். அனைவருக்கும் ஒன்றுபட்ட சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    அதை முழுவதும் படித்து விட்டு எதனால் மறுக்கிறீர்கள் என்று கருத்து சொல்ல வேண்டும். மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பள்ளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது.
    • மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

    டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்.

    இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.

    இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்.

    முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே ஒரு நாடு சிறந்த நாடாக மாறாது.
    • புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும்.

    கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே, குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வருவதுதான்.
    • குழந்தைகளை திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், முழு கவனமும் செலுத்தப் படுகிறது.

    வாரணாசி: 

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கையின் கீழ் அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் குறித்து குழு விவாதங்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான் என்று தெரிவித்தார்.

    பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். நமது கல்வி முறை இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு உதவுபவர்களாக இருக்கும் வகையில் உதவ வேண்டும் என்றும், நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்.

    குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழு கவனமும் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    ×