என் மலர்
நீங்கள் தேடியது "Pan card"
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
- செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
புதுடெல்லி:
வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.
எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.
அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.
இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
- ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம்.
- ஒரே பெயர், பிறந்த தேதியால் இந்த குளறுபடி நடந்திருக்கலாம் என தெரிகிறது.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 41). இவர், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு தன்னுடைய மாத சம்பளம் மற்றும் வங்கி தேவைக்காக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பான் எண் பெற்றார். இவர் திருக்கழுக்குன்றம் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். வங்கி கணக்குடன் ஏற்கனவே பான் எண்ணை இணைத்துள்ளார்.
இந்த நிலையில் டில்லி ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் போன்றவற்றில் உள்ள எழுத்து வித்தியாசத்தை சரி செய்யவும், வங்கி கணக்கு எண்ணில் செல்போன் எண்ணை மாற்றவும், தற்போது வங்கியில் கடிதம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவரது பான் எண் பிழையாக உள்ளதாக வங்கி இணையதள சர்வர் காட்டுவதாக வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிழை குறித்து மேலும் விசாரித்தபோது அவரது பெயரையே கொண்டுள்ள வேறு நபருக்கும் அதே பான் எண் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். வங்கி தரப்பினர் வேறு நபரின் செல்போன் எண்ணை தெரிந்து அவரிடம் இது குறித்து விசாரித்தனர்.
இதில் அவர் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தபால் துறை ஊழியரான டில்லிபாபு (21) என்பது தெரிய வந்தது. ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம். இருவரது தந்தை பெயரும் ஒரே பெயர், இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். கல்வித்துறை ஊழியர் டில்லி பான் எண் பெறும் முன்பே, கடந்த 2008-ம் ஆண்டு டில்லிபாபுவுக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் கடந்து டில்லிக்கும் அதே பான் எண் அளிக்கப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.
இதையடுத்து கல்வித்துறை பணியாளர் டில்லி, வருமான வரித்துறை பணியாளர்களின் அலட்சியபோக்கால் இப்படி ஒரே பான் எண் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு உடனடியாக வேறு பான் எண் வழங்கக்கோரி இ.மெயில் மூலம் வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
- வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.
திருப்பூர் :
பான் கார்டுஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் ஜூன் 30-ந் தேதி இறுதி நாள். பான் கார்டு எண் வைத்திருப்போர், ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்காக வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.வரும் ஜூன் 30ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்துக்குள் சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்,லிங்க் ஆதார் என்ற இணைப்புக்குள் சென்று இணைப்பை சரிபார்க்கவோ, இணைக்கவோ செய்யலாம்.என ெதரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
- ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
சென்னை:
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது.
சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் பான்-ஆதார் இணைப்பு கருதப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கு மேலாக பொதுமக்களை வலியுறுத்தி வந்த நிலையில் 3 முறை நீட்டிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
முதலில் ஒரு வருடத்திற்குள் இணைக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.500 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30-ந்தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அவை முடிந்தது.
நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் இணைக்கவில்லை. வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட வேண்டும். இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.
அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்கவில்லை. இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.
- போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
- இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.
இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.
பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.
இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.
மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பான்.2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி செலவில் வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பான் கார்டு முழுமையாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும். பின்னர் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் கார்டு மாற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பான் கார்டுகள் அப்கிரேடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் வேண்டும் என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.
இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 98 சதவீதம் தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும்.
- வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.
சென்னை:
இந்தியாவில் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும். அதே போல் ரூ.10 லட்சத்திற்கு நகை, வாகனம் வாங்குவதற்கும், வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.
இந்தியாவில் கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி 42 கோடியே 10 லட்சம் ஆண்களும், 31 கோடியே 5 லட்சம் பெண்களும் என மொத்தம் 73 கோடியே 15 லட்சம் பேர் பான்கார்டு வைத்திருக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.
இந்த நிலையில் மத்திய அரசு, ஆதார் போன்று பான்கார்டுகளையும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவு செய்தது. அதற்காக ரூ.1,435 கோடி செலவிலான 'பான்கார்டு-2' திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஆன்லைன் மூலம் மட்டுமே பொதுமக்கள் பான்கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்காக ஒரு தனி 'போர்டல்' உருவாக்கப்பட உள்ளது.
அதே போல் பொதுமக்கள் செல்போன் எண், இ-மெயில் முகவரி மற்றும் புகைப்படங்களை எளிதாக 'அப்டேட்' செய்து கொள்ளலாம்.
இப்போது ஆதார் எண் கொடுத்து கைரேகை வைத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் 'லாக்' மூலம் ஆதாரை 'லாக்' செய்யலாம்.
அதேவசதி பான்கார்டிலும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அச்சாரமாக பான்கார்டிலும் 'கியூஆர் கோடு' வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. எனவே 'கியூஆர் கோடு' பான்கார்டு வேண்டுபவர்கள், அதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதாவது பான்கார்டுகள் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்.) மற்றும் யு.டி.ஐ. உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் லிமிடெட் (யு.டி.ஐ.ஐ.டி.எஸ். எல்) ஆகியவை மூலம் தான் வழங்கப்படுகிறது. இதுதவிர வருமானவரித்துறை மூலம் உடனடி இ-பான்கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், என்.எஸ்.டி.எல். மூலமாக வாங்கி இருந்தால் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html என்ற இணையதளத்திலும், யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். மூலம் வாங்கி இருந்தால் https://www.pan.utiitsl.com/PAN-ONLINE/CheckPANreprint.Action என்ற இணையதளத்திலும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு எது என்று தெரியாவிட்டாலும், நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தில் விண்ணப்பித்தால் அதுவே அது சரியானதா அல்லது நீங்கள் மற்றொன்றில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை சொல்லிவிடும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் பான்கார்டு எண், ஆதார் எண், பிறந்த மாதம் மற்றும் ஆண்டை குறிப்பிட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவை தெரியும். அது சரியானதா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன்பின்பு உங்களுடைய மெயில், செல்போன் அல்லது இரண்டுக்கும் ஓ.டி.பி. அனுப்பலாம். நீங்கள் அதில் எதை தேர்வு செய்கிறீர்களோ, அதற்கு ஓ.டி.பி. வரும். அந்த ஓ.டி.பி.யை கொடுத்து, அது ஏற்று கொள்ளப்பட்டால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணத்தை செலுத்தி முடித்து விட்டால் போதும், உங்களது முகவரிக்கே 30 நாட்களுக்குள் பான்கார்டு வீட்டுக்கு வந்துவிடும்.
ஒருவேளை உங்களது பான்கார்டில் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி தவறாக இருந்தால் முதலில் நீங்கள் அதனை அந்த இணையதளத்தில் உள்ள வசதிகள் மூலம் திருத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல் முகவரி மாறி இருந்தாலும், இப்போது உள்ள முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த பணியினை ஆதார கே.ஒய்.சி. மூலமாக எளிதில் செய்து கொள்ளலாம்.
- பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
- வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.
அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.
நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.
உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.
திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.
நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.
நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.
ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆதார்-பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.
புதுடெல்லி:
ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
எனவே நாளை (1-ந் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும். அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம் பான் கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPS0932F. இந்த எண்ணையே தனது வங்கி கணக்குகளுடன் இணைத்து உள்ளார்.
இந்த நிலையில் சேகர், வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அங்குள்ள வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்துவிட்டார். ஆனால் சேகர், “நான் எங்கும் இதுவரை கடன் வாங்க வில்லை” என்று மறுத்துள்ளார்.
உடனே வங்கி மேலாளர், அதற்கு ஆதாரமாக சிபில் (ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள்) அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர் காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரிடையாக சென்று மேலாளரிடம், “நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது” என்று கேட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது அந்த வங்கியில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்ற காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு இருந்ததால் தான் காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரே எண்ணில் இருவருக்கும் எப்படி பான்கார்டு வழங்கப்பட்டது என்பது குறித்து நடந்த மேல் விசாரணையில் பல அதிசயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது காண்டிராக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் பெயரும் சேகர் என்பது தான். அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் பிறந்த தேதி 17-05-1966. அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர் பெயரும் ஒன்றே. இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன். தாய் பெயர் சரோஜா.
இந்த காரணங்களால் தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமான வரித்துறை பான்கார்டு வழங்கி உள்ளது. இந்த குளறுபடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக அவர் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் உள்ளது. #PANCard
எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.
இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.
மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வருமான வரி கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி வரை இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த தகவலை வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். #PanCard #AadhaarCard #Linked