என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus2 exam"

    • சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது.
    • மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, செய்முறை கொண்ட பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தேர்வு கட்டணங்களில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேசாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சிஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்கள், அதேபோல், பி.சி., பி.சி.எம் பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

    தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

    • உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
    • தமிழ் மொழிப்பாட தேர்வை உமாமகேஸ்வரி ஆர்வமுடன் எழுதினார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

    இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், "கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    • விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பாடங்களின் விடைத்தாள்களும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் கலெக்டர் கட்டுப்பாட்டில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

    சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    விடைத்தாள்கள் 10-ந்தேதி முதல் திருத்தப்படுகின்றன. விடைத்தாள்கள் மாவட்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்து திருத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும் மையங்களில் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தம் செய்த ஆசிரியர்களில் சிலரின் கவனக்குறைவின் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலும் உருவாகிறது.

    தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள். இந்த போக்கு தொடரக்கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் மதிப்பெண் பதிவேற்ற பணிகள் நடைபெறும்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.
    • பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என்று சொல்லப்பட்டது.

    அதன்படி பார்க்கையில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர். தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.

    கடந்த 5-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார்.

    தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

    • புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
    • புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது:-

    புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 ஆகும். கடந்த ஆண்டு 96.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட 3.46 சதவீதம் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38.

    இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் ஒருவர், இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 80 பேர், உயிரியலில் 38 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 132 பேர், கணிதத்தில் 8 பேர், தாவரவியலில் 6 பேர், விலங்கியலில் 4 பேர், பொருளியலில் 37 பேர், வணிகவியலில் 157 பேர், கணக்கு பதிவியலில் 138 பேர், வணிக கணிதத்தில் 39 பேர், வரலாற்றில் ஒருவர், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்று விடுவேன்.
    • சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், எனது தந்தை சரவணக்குமார் தச்சுத் தொழிலாளி. தாயார் பானுப்பிரியா குடும்ப தலைவி. நான் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இதே பள்ளியில்தான் படித்தேன்.

    10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது முதல் படிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டு உள்ளிட்ட எந்தவித பொழுது போக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டேன். எங்கள் வீட்டில் எனக்காக அரசு பொதுத்தேர்வு சமயங்களில் டி.வி. பார்ப்பதை அனைவரும் தவிர்த்து விட்டனர்.

    பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்று விடுவேன். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அன்றைக்கு நடத்திய பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். தேர்வு சமயங்களில் கூடுதல் நேரம் எடுத்து படித்து வந்தேன்.

    சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இதையே எனது தோழிகளுக்கு கூறி வந்துள்ளேன். தற்போது எனக்கு கிடைத்துள்ள மதிப்பெண்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே காரணம்.

    இதன் பின்பு ஆடிட்டராகி எனது சொந்தக்காலில் நிற்க உள்ளேன். இதுவரை எனது படிப்புக்காக எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும் என்றார். சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் இனிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
    • வீடு திரும்பிய தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.

    இவருடைய மகன் ஹரி (வயது 18) தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

    தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார். தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
    • திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வை எழுத 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23 ஆயிரத்து 747 தனித் தேர்வர்கள், 5 ஆயிரத்து 206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 90 சிறைக்கைதிகள் என ஒட்டு மொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.

    அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

    சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கி 21-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. விடைத்தாள் திருத்துதல் பணியில் சுமார் 50 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மே 5-ந்தேதி வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. அதன் பின் நீட் தேர்வை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு மே 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.10 மணிக்கு வெளியிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள்.

    இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.03 சதவீதம் ஆகும். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகள் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 96.38 சதவீதம் ஆகும்.

    மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 91.45 சதவீதம் ஆகும். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்து உள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.76 ஆகும்.

    தமிழகத்தில் 7 ஆயிரத்து 533 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2767 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326 ஆகும்.

    பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 308 பேரில் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.85 சதவீத தேர்ச்சியாகும்.

    திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 24 ஆயிரத்து 732 பேரில், 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.79 சதவீத தேர்ச்சி ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 391 பேரில் 7 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.59 சதவீத தேர்ச்சி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

    • மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர்.
    • பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கிரிஜா தேர்வு எழுதினார்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி முடிவடைந்தது.

    கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ்-2 மாணவி வேதியியல் தேர்வு எழுதினார். அப்போது மாணவி கிரிஜா தந்தை பழையவண்டிப் பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய தகவல் அறிந்த அவரது மகள் கிரிஜா பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தேர்வு எழுதினார். மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த நிலையில் இன்று பிளஸ்-2 முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்கிரிஜா 479 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

    • தருமபுரி மாவட்டத்தில் இருந்து தேர்வு மாணவர்களில்-8723 பேரும், மாணவிகள் 9345 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 18068 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என 176 பள்ளிகளில் 9628 மாணவர்கள், 9858 மாணவிகள் என மொத்தம் 19,486 பேர் எழுதினர். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து தேர்வு மாணவர்களில்-8723 பேரும், மாணவிகள் 9345 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18068 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 0.41சதவீதம் குறைவாக பெற்று மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்றத்தில் 23-வது தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்று விதத்தில் 17-வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10061 மாணவர்கள், 10642 மாணவிகள் என மொத்தம் 20703 பேர் எழுதினர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 1.5 சதவீதம் பேர் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ×