என் மலர்
நீங்கள் தேடியது "President Droupadi Murmu"
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
- பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.
- புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது.
- புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும்.
இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது.
"ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது; இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது.
இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ரகுபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார்.
- கடிதத்தில், 9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம்-ஒழுங்கு, முதலீடு தொடர்பான பத்திகளை கவர்னர் படிக்கவில்லை.
சில பக்கங்களையும் கவர்னர் படிக்காமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். இறுதியில் கவர்னர் உரையில் இல்லாத ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்வு சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் எழுந்து 2 பக்க அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கவர்னர் உரையில் சில பத்திகள் வாசிக்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
கவர்னர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். இதை அவர் சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதை அறிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பாகவே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.
இதற்கிடையில், கடந்த 9-ந்தேதி இரவு சட்ட நிபுணர்கள், தி.மு.க. சட்டப்பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கவர்னர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்பதற்காக டெல்லி சென்றனர். ஆனால் ஜனாதிபதி மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்ததால் அதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லி திரும்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு தி.மு.க.வின் வேண்டுகோளை ஏற்றார். இன்று பகல் 11.45 மணிக்கு தி.மு.க. தலைவர்கள் 4 பேர் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கினார். இதையடுத்து சென்னையில் இருந்து சட்ட அமைச்சர் ரகுபதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், '9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு. ஆ.ராசா, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர். ஜனாதிபதி அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவரிடம் விடைபெற்று தி.மு.க. தலைவர்கள் திரும்பினார்கள்.
இதற்கு முன்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உரசல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க. தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படும்.
ஆனால் தற்போது முதல் முறையாக கவர்னருக்கு எதிராக தி.மு.க. தரப்பில் ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.
- வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
சென்னை:
தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள், கவர்னர் உரையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படிப்பார்கள். ஆனால் கவர்னர் உரையில் உள்ள வரிகளை இப்போதைய கவர்னர் படிக்கவில்லை. பேராவை நீக்கினார். சில வரிகளை அவரே சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்தும், சில வரிகளை நீக்கியும் படித்தது தவறு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
கவர்னர் உரையில் எது அச்சிடப்பட்டுள்ளதோ? எதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளாரோ அது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தான் நடந்த உண்மைகள்.
இதை விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து கூறியுள்ளோம். மிக மிக கூர்ந்து கவனித்த குடியரசு தலைவர் எங்கள் கடிதத்தை படித்து பார்த்தார். படித்து முடித்ததும் அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம். வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
கவர்னர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
அந்த கடிதத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. ஏனென்றால் இந்த கடிதத்தை தமிழக முதல்-அமைச்சர், ஜனாதிபதியிடம் கொடுக்க சொல்லி சீலிடப்பட்ட உறையில் எங்களிடம் கொடுக்கப்பட்டது.
அது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளே என்ன எழுதி இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் என்ன கருத்தை முன் வைத்தீர்கள்?
பதில்: இதை மொத்தமாக படித்து பார்த்து சரி என்று என்ன தோன்றுகிறதோ? என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ அதை எடுங்கள் என்று கூறியுள்ளோம்.
கேள்வி: அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?
பதில்: ஜனாதிபதியை பார்க்கும் முன்பு அவரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியை பார்ப்பது தான் எங்கள் நோக்கம். அவரை பார்த்து விட்டோம். எனவே அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா?
பதில்: இது அரசியலில் நெளிவு சுளிவாக, மிகவும் கவனமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் சொல்ல முடியாது.
தேசிய கீதம் பாடும் முன்பு கவர்னர் எழுந்து போனதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி: கவர்னர் ஏன் தொடர்ந்து தமிழக அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்?
பதில்: அவரது நோக்கம் என்பது மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சனாதன கொள்கைகளை புகுத்த வேண்டும் என்பது தான். இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இது பெரியார், அண்ணா, கலைஞரின் தேசம். இதில் யாரும் புதிதாக ஒரு செடியை வளர்த்து விட முடியாது. 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாறான கொள்கைகளை யாரும் திணிக்க முடியாது.
கேள்வி: இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்படுமா?
பதில்: நிச்சயமாக தி.மு.க. சார்பில் இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
- நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஆலந்தூர்:
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.
சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
- விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:
மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.
தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிக்ழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
- நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள்
புதுடெல்லி:
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்துள்ளோம்.
பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்துள்ளன. உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளால் இது சாத்தியமானது. 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் அல்ல. சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
- குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்பு
புதுடெல்லி:
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னர்களும் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். மாநில கவர்னர்கள் அளிக்கும் தேநீர் விருந்துகளில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
- ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.
மதுரை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
* மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.
* அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம்.
* சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம்.
* இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம்.
* அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம்.
* ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம்.
* சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம்.
* மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம்.
* மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம்.
* பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்.
* மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்.
* லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈஷா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
- கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார்.
ஊட்டி:
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் சிவராத்திரியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
இதற்காக வருகிற 18-ந் தேதி காலை புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் விமானம் மூலம் மதுரையில் இருந்து கோவை வருகிறார். அங்கு ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து மறுநாள் (19-ந்தேதி) காலை 9 மணி அளவில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார். அப்போது ராணுவ பயிற்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகிறார். இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் நீலகிரிக்கு முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயார் நிலையில் இருக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அன்றைய தினம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நேற்று முதல் ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை வருகிறார். கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி அன்று காலை 11.30 மணிக்கு மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் பலத்த பாதுகாப்புடன் ரிங்ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மதியம் மதுரை வந்தனர். அவர்கள் 3 நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மாநகர் காவல் துணை ஆணையாளர் சாய் பிரனீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாய்த்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.