என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saree"

    • நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.
    • அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும்.

    'ஆள் பாதி ஆடை பாதி' என்பதற்கு ஏற்ப, நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதை அறிந்து மாற்றிக்கொண்டால், மேலும் தன்னம்பிக்கையோடும், அழகோடும் திகழலாம். அதற்கான குறிப்புகள் இதோ…

    கண்களை உறுத்தாத ஆடைகள்: நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, சுடிதார் டாப்ஸ்சுக்கு தேர்வு செய்யும் லெக்கின்ஸ்சில் இந்தத் தேர்வு முக்கியம். உயரம் குறைவான டாப்ஸ் அணியும் போது, அதற்கு லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பக்கவாட்டில் திறந்திருக்கும் வகையிலான ஆடை உடுத்தினால், லெக்கின்ஸ் அணியாமல், பளாசோ, சாதாரண சுடிதார் பேண்ட், ஜீன்ஸ் போன்றவற்றை தேர்வு செய்து அணியலாம். லெக்கின்ஸ், உடலுடன் ஒட்டிக் கொள்ளும் என்பதால், பிறரின் கவனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அனார்கலி, உயரம் அதிகமான டாப்ஸ்சுக்கு லெக்கின்ஸ் அணியலாம். அதேபோல், தரமான துணிகள் வாங்குவதும் முக்கியம். பளாசோ அணியும் போது, டாப்ஸ் கணுக்கால் வரையில்லாமல், முழங்கால் வரை இருக்கும்படி அணியலாம். சரும நிற லெக்கின்ஸை தவிர்த்து, அடர் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

    உள்ளாடையில் கவனம்: உள்ளாடையில், எலாஸ்டிக் தளர்வாகவோ, ஒருபுறம் ஏற்ற, இறக்கத்துடனோ இருப்பவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது, அணியும் உள்ளாடை சரியாகவும், அடர் நிறத்திலும் இருக்க வேண்டும். மேலே அணியும் ஆடை மெல்லியதாக இருந்தால், உள்புறம் 'சிலிப்' போன்ற உள்ளாடையைத் தேர்வு செய்து அணியலாம்.

    நிறத்தேர்வில் தெளிவு: அடர் நிற மேலாடையைத் தேர்வு செய்யும்போது, அதற்கேற்ப இணை உடை, லேசான நிறத்திலோ அல்லது அதற்கு ஒத்துப் போகும் நிறத்திலோ இருக்க வேண்டும். மேலே அணியும் டாப்ஸில் அதிக டிசைன் இருந்தால், அதற்கு அணியும் பேண்ட், டிசைன் இல்லாமல் இருக்கலாம். இது போன்று அணிந்தால், நம் அழகை மேலும் மெருகேற்றிக்காட்டும்.

    நகைகளில் அழகு: அணிந்திருக்கும் ஆடை ஆடம்பரமாக இருந்தால், நகை சாதாரணமாக இருக்கலாம். கழுத்தில் ஆடம்பரமான பெரிய நகைகள் அணிந்தால், காதுக்கு சிறிய காதணியை தேர்ந்தெடுக்கலாம். மார்டன் உடைகள் உடுத்தும் போது, ஆடம்பரமான பெரிய நகையை அணியாமல், சாதாரண வகையிலான சிறிய நகைகள் போடலாம்.

    சரியான அளவு: அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும். எனவே, தேர்வு செய்யும் ஆடை, நமக்கு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கைப்பை: பெண்களுக்குத் தேவைப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று, ஹேண்ட் பேக். அலுவலகத்திற்கு பெரிய கைப்பைகள் எடுத்துச் சென்றாலும், விசேஷங்களுக்குச் செல்லும்போது சிறிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யலாம். ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யாமல், நடுத்தர அளவிலான கைப்பைகளை வாங்குவது சிறந்தது.

    • புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன.
    • இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின

    பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது

    பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது.

    புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.

    அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது,. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

    முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர்.

    ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர்.

    நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.

    தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின.

    ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம்.

    புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் உண்டு.

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
    • பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

    நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-

    கோடாலி கருப்பூர் புடவை

    18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.

    பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை

    18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.

    உப்படா கிளி சித்திர புடவை

    மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.

    இயற்கை வண்ண 2000 புட்டா புடவை

    தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.

    உடல்பேட்டு பேல்தார் புடவை

    செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.

    பவுன் புட்டா புடவை

    பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    கந்தபெருண்டா புடவை

    மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.

    கமலம் புடவை

    கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.

    • படுகாயமடைந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன்கோயில் அன்னை முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் செண்பகராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது.

    இதில் பலத்த தீக்காயமடைந்த மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
    • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    • மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது.
    • 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    சென்னை:

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

    மேகம் சூடி இருள் கவிழ்ந்த நேரத்தில் ஒன்றிரண்டு மின்மினி பூச்சிகள் வட்டமிட்டு கண் சிமிட்டினாலே பார்க்க பரவசமாக இருக்கும்.

    நூற்றுக்கணக்கான மின் மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தினால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு ரம்மியமான சூழலில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சேலை கட்டி மின்மினி பூச்சிகள் போல் ஒரே இடத்தில் வட்டமிட்டால் மனதுக்கு எப்படி இருக்கும்? பார்த்தவர்கள் இதயமெல்லாம் பட்டாம் பூச்சிகள், மின்மினி பூச்சிகள் தான் நினைவுக்கு வந்திருக்கும்.

    மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வழக்கமாக மேற்கத்திய உடைகளிலும், சுடிதார், ஜீன்ஸ் போன்ற நாகரீக உடைகளில் மட்டுமே மாணவிகளை பார்த்து ரசித்த கல்லூரி, இன்று காலை சேலைகளில் கண்டு மகிழ்ந்து ஆச்சரியப்பட்டது.

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெற்ற பல்வேறு விதமான போட்டிகள் சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் தலா 50 பேர் வீதம் 1000 பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த இறுதிப் போட்டிதான் இன்று ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

    சேலை கட்டி கல்லூரி வளாகத்துக்குள் வந்து குவிந்த மாணவிகள் கூட்டத்தை பார்த்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவிகளும், நாமும் சேலை கட்டி வந்திருக்கலாமோ, அவர்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

    இதுவரை மேற்கத்திய உடைகள் மட்டுமே அணிந்து பழக்கப்பட்டவர்கள், சேலை கட்டினால் நடப்பது கூட சிரமம் என்று நினைத்தவர்கள் இன்று சேலையிலும் அசத்தினார்கள்.

    8 முழம் சேலையை எடுத்து முன்பக்கமாக ஒரு முகப்பை சொருகிவிட்டு உடலை ஒரு சுற்று சுற்றுவார்கள். அதன் பிறகு 5 முதல் 6 மடிப்புகள் வரை ஒரே அளவில் மடித்து சொருகிய பிறகு, முந்தானையை தோள் மீது போட்டு ஒரு முந்தியை வலப்பக்கமாக எடுத்து கொசுவத்தை இடுப்பில் சொருகுவார்கள். பின்னர் மடிப்பை ஒழுங்காக எடுத்து நேர்த்தியாக்கி சேலை கட்டி வரும் அழகே தனி அழகாக இருக்கும்.

    விதவிதமான உடைகளில் எத்தனை பெண்கள் சென்றாலும், அவர்களுக்கு இடையே இவ்வாறு சேலை கட்டி, தலையில் பூச்சூடி வலம் வரும் பெண்களை பார்த்தால் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    அதே போலத்தான் இன்றைய ஏ.எம்.ஜெயின் கல்லூரி காட்சியும் அமைந்திருந்தது. மேகம் சூழ்ந்து இருண்ட மாலைப் பொழுதைப் போல் காலை நேரம் காட்சியளித்தது. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவிகளும் முதல் நிகழ்ச்சியாக நடந்து வரும் 'வாக்கத்தான்' நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.

    நடிகை சனம் ஷெட்டி மற்றும் கல்லூரி டீன் ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். கொடியிடை அசைய மாணவிகள் தழைய தழைய சேலை கட்டி நடந்த காட்சி பார்வையாளர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மொத்த மாணவியர் கூட்டமும் போட்ட துள்ளல் நடனம் கல்லூரி வளாகத்தையே களை கட்ட வைத்தது.

    அதன் பிறகு கலையரங்கத்துக்குள் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியாக நடனப் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டனர். முதலில் ஆடிய மாணவிகள் "ஜெமினி ஜெமினி ஜெமினி... கவனி கவனி கவனி... ஓ போடு" என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் கூட்டத்தில் இருக்கும் அனைவரையும் கவனிக்க வைத்தது.

    நடுவராக இருந்த நடிகை சுஜா வருணியே வியந்து போனார். சேலை கட்டிக் கொண்டு இவ்வளவு அழகாக ஆடுவது சாதாரண மானதல்ல என்று பாராட்டினார். ஆர்.ஜே.ஆனந்தியும் இந்த போட்டிக்கு நடுவராக இருந்தார்.

    அதைத் தொடர்ந்து "பஞ்சு மிட்டாய் சேல கட்டி... பட்டு வண்ண ரவிக்கை போட்டு... கஞ்சி கொண்டு போறவளே" என்ற பாடலுக்கும் அவர்கள் போட்ட ஆட்டம் நிஜத்திலும் சேலை கட்டி ரவிக்கை அணிந்து ஆடியது ஆச்சரிய மூட்டியது.

    நடனத்தை தொடர்ந்து ஆடை - அலங்கார போட்டி நடந்தது. சேலையில் கைவண்ணம் காட்டியது நெசவாளர்கள். அந்த சேலையிலேயே தங்கள் கை வண்ணத்தை காட்டினார்கள் மாணவிகள்.

    அதாவது சாதாரணமாக சேலை கட்டுவதில் இருந்து வித்தியாசமான முறையில் சேலைகளை கட்டி இப்படியும் அசத்த முடியும் என்று அசத்தி காட்டினார்கள். அதைத் தொடர்ந்து குழு விவாதப் போட்டி அட்டகாசமாக அரங்கேறியது.

    'சேலை கட்டியதும் செம அழகாக மகாலட்சுமியாட்டம் தெரிவது எந்த தலைமுறை பெண்கள்? 2000-க்கு பிறகு பிறந்தவர்களா, 1980-90களில் பிறந்தவர்களா? என்ற தலைப்பில் சுமார் 30 மாணவிகள் பங்கேற்று விவாதம் செய்தார்கள். இதற்கு நடுவராக சுமையாநாஸ் இருந்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மின்மினி விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் சுந்தர்நாத், டி.ஜே.தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். ராஸ்மட்டாஸ் நிறுவனர் ஜோமைக்கேல் பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    நேரம் போவதே தெரியாமல் தொடர்ந்து போட்டிகள் களை கட்டிக் கொண்டிருந்தது. அரங்கத்தில் திரண்டிருந்த மாணவிகளும் உற்சாக குரலில் அரங்கத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தங்கள் செல்போன்களை ஒளிர விட்டு ஆரவாரம் செய்தார்கள்.

    'நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி... என் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி' என்ற புதிய மன்னர்கள் பாடலுக்கு ஏற்ப சேலையில் புதிய மாணவிகளாக தெரிந்தவர்களை பார்த்து கிறங்கித்தான் போனார்கள்.

    • பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
    • நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, இது மத்திய அரசின் பட்ஜெட்டா? இல்லை பீகார் பட்ஜெட்டா? என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.

    இதனையடுத்து, பீகார் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தான் பீகார் மாநில சேலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ளாரோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
    பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அது புடவை தான். அப்படிப்பட்ட புடவைக்கு பெயர் போன ஊர் தான் கோவை மாவட்டம் அருகே உள்ள சிறுமுகை. இந்த சிறுமுகை நகரத்தில் நெசவு செய்யும் புடவைகளான காட்டன் பட்டு, மென்பட்டு, பட்டு உள்ளிட்டவை தமிழகத்தின் பிற பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்களையும் சிறுமுகை பட்டானது கவர்ந்திழுத்து வருகிறது.

    அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதுகுறித்து தர்மராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-

    எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

    அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.

    நாங்கள் இதுதவிர அனைத்து திருக்குறள்கள் பொறித்த புடவைகள், காந்தியடிகளின் தண்டி யாத்திரை சென்ற படங்கள் பொறித்த புடவைகள் என மக்கள் எந்த மாதிரி கேட்கிறார்களோ அந்த வகையில் வடிவமைத்து கொடுத்து வருகிறோம். இதுதவிர சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்த போது அவரது உருவம் பொறித்த சால்வையும் நெசவு செய்து வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    • உமரி சத்தியசீலன், வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கினர்.
    • தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஸ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் ஆலோசனைப்படி மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத் தலைவர் வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களை நேரில் சந்தித்து வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதேபோல் தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் பட்டாசுளை உமரி சத்தியசீலன் வழங்கினார். இதில் மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், சக்தி கேந்திர பொறுப்பாளர் துர்க்கையப்பன், மகளிர் அணி தலைவர் செல்வி, பூத் கமிட்டி நிர்வாகிகள் பாண்டியன், ராஜகோபால், சவுந்தர்ராஜன், சந்தான நிஷாத், மாரிமுத்து, ராஜபாண்டி,விக்னேஷ் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×