search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு"

    வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
    பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

    * அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது.

    * நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம்.

    * சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம்.

    * நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.

    * சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.

    * சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.

    * சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
    வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
    தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு, ஒழுங்குமுறை சட்டம் 1976-ல் அமலுக்கு வந்து, 1978-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 500 சதுர மீட்டருக்கும் அதிகமாக நகர்ப்புற நிலம் வைத்துள்ள எந்த ஒரு தனி நபரும், உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியில்லை. அதனால், வீட்டு மனை வாங்கும்போது அந்த நிலம் நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை அறிந்து செயல்படுவதே பாதுகாப்பானது.

    கடந்த 1983-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான ஏக்கர் அளவில் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட 70 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவற்றில் 48 லட்சம் ஏக்கருக்கும் மேல் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டத்தில், நிலங்கள் நன்செய் மற்றும் புன்செய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    நகர்ப்புற நில உச்சவரம்பு

    வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், நகர்ப்புற நிலங்களை முறைப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம், 1961 (Tamilnadu Land Reforms Fixation of Ceiling on Land Act, 1961 ) இந்திய நாடாளுமன்றம் மூலம் 1964-ம் ஆண்டு ஜூன் 20 நாளன்று 1966-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட்டது.

    இச்சட்டத்தை செயலாக்குவதில், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகள் குறித்த முறையீடுகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ஆகியவை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், 1978-ம் ஆண்டில் நகர்ப்பகுதி நில உச்ச வரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை அரசு இயற்றியது. இச்சட்டம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது.

    கவனிக்க வேண்டிய குறிப்புகள்

    * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்படாத குடும்பத்திற்கான நில உச்சவரம்பானது 15 தரநிலை ( Standard Acres ) ஏக்கர்களாகும்.

    * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்பட்டிருக்கும் குடும்பத்தினர்களின் நில உச்சவரம்பு, 15 தரநிலை ஏக்கர்களும், கூடுதலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தரநிலை ஏக்கர்களும் ஆகும்.

    * எக்காரணம் கொண்டும் மொத்த உச்ச அளவு 30 தரநிலை ஏக்கர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    * குடும்பத்து பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்த்து குடும்பம் கொண்டிருக்கும் மற்ற நிலத்தையும் சேர்த்து 15 தரநிலை ஏக்கர்களுக்கு மேற்பட்டிருந்தால், பெண் உறுப்பினர் 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகைபடாமல் சீதன நிலத்தை வைத்திருக்கும் உரிமை உண்டு.

    * இடம் அல்லது மனை நில உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்ற குறிப்பு இருக்கும். மேலும், அது சம்மந்தமாக வழக்கு ஏதாவது இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
    வீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

    வீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்ச பயன்பாடு

    இதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடு

    குறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.

    அவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.

    அந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா?

    காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை பிணையாகக் கொண்டு இக்கடனை அளிக்கின்றன. ஆனால் இந்தக் கடன் திட்டமானது டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.

    இதில் வழங்கப்படும் கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும்.

    இந்தக் கடன் திட்டம், மணி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெற, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகையைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனம், இந்தக் கடன் தொகையைச் செயல்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையைக் கட்டணமாகப் பெறும்.

    ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை விட, இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேளை வட்டித் தவணை, பாலிசி சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருந்தால் பாலிசிதாரர் அவரது பாலிசியை இழக்க நேரிடும் என்பதை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும்.
    சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.
    ஒவ்வொரு முறையும் முதலீட்டுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது, அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், பரஸ்பர நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி (வாரிசுதாரர்) பற்றிய குறிப்பைத் தருமாறு கேட்கப்பட்டிருக்கும்.

    இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.

    நாமினி என்பவர் யார்? நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம் அல்லது வங்கிக் கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள்.

    சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.

    நாமினியாக ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கிக் கணக்கிலும், முதலீட்டிலும் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இது சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், சில நேரங்களில் கோர்ட்டு ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகின்றன. வங்கிக்குத் தேவையான ஆவணங்கள் கிடைக் கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், ஒருவர் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடும்.

    வங்கிக் கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் நாமினி நியமனம் தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவுக்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்தபிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள்.

    புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பேங்க் லாக்கர் கணக்குக்கும் நாமினி அவசியம் தேவை.

    இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ரூ. 8 ஆயிரம் கோடி, கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ளது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமலும் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சினை என்பதை இவற்றில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

    எனவே நாம், வங்கிக்குச் சென்று நமது கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி நாம் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

    பொதுவாக பெண்கள் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்குரிய பணமும் பறிபோகக் கூடாது. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...

    குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம்:

    சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ. ஐநூறு முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்கு களின் இயக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.

    பணம் எடுத்தல்:

    நம் கணக்கு உள்ள வங்கியைச் சாராத பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றின்போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

    பணம் டெபாசிட் செய்தல்:

    வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    காசோலைகள்:

    ஒரு மாதத்துக்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குறுஞ்செய்தி சேவைக் கட்டணம்:


    நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    டெபிட் கார்டு வழங்கும்போது:

    தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:

    இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின்போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும்போது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும்போது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

    வெளிநாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள்:

    கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
    பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
    எந்தவித ‘செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது.

    மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...

    தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

    வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

    உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.

    பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

    தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.

    நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப, நஷ்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே அது தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்யும். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அவற்றை லாவகமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

    நாம் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களாகக் கருதுபவர்களும்கூட தமது முந்தைய தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனாலும் சரியான மியூச்சுவல் பண்ட் திட்டத்தைப் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன.

    மியூச்சுவல் பண்டில் பண்ட் மானேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். பண்ட் மானேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். அவர்கள் நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதா என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலைக்குறிகளை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

    மியூச்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. வளர்ச்சி, விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும் மதிப்பு முதலீடு, ‘குரோத் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் வளர்ச்சி வழி மற்றும் ‘பிளெண்டட் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் கலப்பு உபாயம் போன்ற நுட்பங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.

    நாம் தேர்வு செய்யும் மியூச்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம், கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆக, மியூச்சுவல் பண்டில் எப்போதும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தக்கூடாது.

    ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ‘ஸ்டாண்டர்டு டீவியேஷன்’ எனப்படுகிறது. இதைப்போல பல பிரத்யேக பதங்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

    பல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள், தர வரிசைகளை ஆராய்ந்து, ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
    செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள்.
    வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.

    வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.

    எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று’ என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

    மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.



    மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள். வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

    உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.

    ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.

    பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.

    கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.
    பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
    இன்றைய இளம் தலைமுறையினர் (Millennial) பணி வாய்ப்புகள் மற்றும் தொழில் நிலவரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடன் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

    தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பல திட்டங்களின் மூலம் வீடு வாங்குபவர்களுக்கான பல சலுகைகள் நடைமுறையில் உள்ளன. வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் எளிமையான நடைமுறைகளில் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றி குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவற்றில் கவனிக்கத்தக்க இரு வகை கடன் திட்டங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவிப்பதாவது :

    * முதலாவது, கடன் பெற்ற முதல் ஒரு சில வருட காலகட்டத்திற்கு குறைவான மாதாந்திர தவணைகளை செலுத்தும் வகையில் உள்ள ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும். இது ‘சர்ப்‘ (SURF-Step Up Repayment Facility) கடன் திட்டம் என்றும் சொல்லப்படும்.

    * இரண்டாவது கடன் திட்டமானது ஏற்கெனவே வங்கியில் வீட்டு கடன் பெற்று திருப்பி செலுத்தி வரும் நிலையில், வீடு விரிவாக்கம் அல்லது உள் கட்டமைப்பு மாற்றம் ஆகிய காரணங்களுக்காக பெறக்கூடிய ‘டாப் அப் லோன்’ (Top-Up Loan) ஆகும்.

    ‘ஸ்டெப் அப் லோன்’

    சொந்தமாக வீடு வாங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மாதாந்திர தவணை தொகை சுமையாக அமையாமல், இந்த திட்டத்தில் முதல் சில வருடங்களுக்கு இ.எம்.ஐ தொகையை குறைவாக கணக்கிடப்படும். பின்னர், காலப்போக்கில் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மாதாந்திர தவணை தொகையை அதிகமாக திருப்பி செலுத்தலாம்.

    ஒப்பீட்டு நோக்கில் கவனிக்கும்போது தற்போது வழங்கப்படும் வீட்டு கடன்களில், இவ்வகை திட்டத்தின் மாத தவணைகள் அதிகமாக இருப்பதுடன், கடனை திருப்பிச் செலுத்தும் காலமும் நீண்டதாக இருக்கும். அதாவது, தொடக்க ஆண்டுகளில் மாத தவணை குறைவாகவும், குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் தவணை தொகையை அதிகமாகவும் திருப்பி செலுத்த இயலும்.

    தவணை தொகை அதிகரிப்பு எவ்வளவு என்பதை, கடன் பெற்றவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வருமான உயர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும். கடனுக்கான கால அவகாசத்தை கடன் பெறுபவரின் வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் அல்லது வீட்டு கடன் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவ்வகை கடன் திட்டம் இளம் வயதினருக்கு நல்ல வாய்ப்பு என்பது பலரது கருத்தாகும்.

    ‘டாப் அப் லோன்’

    ஏற்கெனவே வீட்டு கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தி வரும் நிலையில் கூடுதலாக கடன் பெறும் வாய்ப்பை அளிப்பது டாப் அப் லோன் திட்டம் ஆகும். இதன் மூலம் வீட்டை புதுப்பித்தல், வீடு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் பெறலாம். தனி நபர் கடனுடன் ஒப்பிடும்போது இவ்வகை கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதையும் நிதி ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

    இந்த திட்டத்தில் அளிக்கப்படும் கடன் தொகை அளவை, கடன் பெற்றவர் முந்தைய தவணைகளை திருப்பிய செலுத்திய விதம், கடன் மதிப்பு விகிதம், திருப்பி செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ‘டாப் அப் கடன்’ பிரதான கடனுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடனாக கருதப்படும். இதற்கென தனியாக கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். மேலும், இவ்வகை கடன்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.

    இவ்வகை கடனை வாங்குபவர், கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆவணங்கள் அளிக்கவேண்டிய செயல்முறைகள் குறைவாக இருக்கும். கடன் விண்ணப்பமும் குறைவான காலகட்டத்திலேயே எளிதில் செயலாக்கம் பெற்றுவிடும்.
    ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
    இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலரது வயிற்றில் பால் வார்த்த விஷயம், வருமான வரி வரம்பு உயர்வு.

    ஆனால் உடனே சிலர் சில கணக்கீடுகளைக் கூறி பலரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே ஒரு தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

    அவரது விளக்கத்தின்படி, ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

    அதாவது, தற்போது ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் விடுதலை, ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது.

    சம்பளதாரர்கள் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ. 50 ஆயிரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே வருங்கால வைப்புநிதி எனப்படும் பி.எப். பிடித்தம் செய்யப்படும். ஆனால் அதைத் தாண்டியும் ஆயுள் காப்பீடு, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் பண்டு போன்ற பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு முழுமையாகக் கழிவு பெறலாம்.

    அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாவிட்டாலும், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அது வருமான வரி விஷயத்தில் உதவும்.

    வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் தொகை இந்த 80 சி பிரிவின் கீழ்தான் கழியும். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் = ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    வருமான வரி பிரிவு 24-ன் கீழ், வீட்டுக் கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக, வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80 சி என்றால், வீட்டுக் கடன் வட்டிக்கு இந்தப் பிரிவு 24. மொத்தமாக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் = ரூ. 9 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    80 சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம்தான். அரசின் உத்தரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன.

    இப்போது ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 9.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் பெறும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளார் என்றால் ஓர் ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 25 ஆயிரம் = ரூ. 9.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
    பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர்.

    தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

    • சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

    • நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

    • பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

    • ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

    • முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

    • வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

    • பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம். 
    ×