என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்"
- சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
- தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
புதுடெல்லி:
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையின் சிவில் மற்றும் கட்டுமான பாதுகாப்பு, உறுதி மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு உயர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓர் அறிக்கையை அளித்தது.
இந்த குழு தீவிரமான கட்டுமான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் ஆலையில் மீதியுள்ள ஜிப்சத்தை அகற்றும் நடவடிக்கையை, அதற்கு தேவையான வேலையாட்களை, லாரி முதலிய எந்திரங்களை அனுமதிக்கலாம். ஜிப்சம் முழுவதும் அகற்றப்பட்டபிறகு அதற்கான அனுமதி திரும்ப பெறப்படும். இந்த பணியை செய்ய எவ்வளவு நாள், எவ்வளவு ஆட்கள், எந்திரங்கள் தேவை என்ற விரிவான முன்மொழிவை ஆலை வழங்க வேண்டும்.
ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவு நீர் வெளியாகும் வரையில், அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தினசரி கழிவு நீரை மீண்டும் கழிவுக்குழிக்குள் பம்பிங் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 4-வது கழிவுக்குழியின் கரை உடைவதை தடுப்பதற்காக அதனை சீர் செய்யும் வேலையை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆட்களை கொண்டு இதனை செய்ய வேண்டும்.
பசுமை வட்டப் பராமரிப்பு, புதர்களையும், காய்ந்த மரங்களையும் அகற்றும் பணிகளைப் பொறுத்தவரை ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் நடக்க வேண்டும்.
மேற்கண்ட 4 நடவடிக்கைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம் குறிப்பிடுகிறது.
அதே நேரம், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்பதையும் கோர்ட்டு குறிப்பிட்டது.
ஆலை வளாகத்தில் சிவில், கட்டுமானப் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியே கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தில் அனுமதி அளித்த செயல்பாடுகளை பொறுத்தவரை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோர்ட்டு அனுமதிக்கிறது.
மாவட்ட கலெக்டர் பரிந்துரை அளிக்காத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மேற்கொண்டு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்.
- துணை கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள ஆலை நிர்வாகம் அனுமதி கேட்ட நிலையில், அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உபகரணங்கள் பாதிப்படையும் எனக் கூறப்பட்டது. அதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை மேற்கொள்ள துணை கலெக்டர் தலைமையிலான 9 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாவும், ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி கிடையாது எனவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
- ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது.
- அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.
இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது. மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் ஹேமந்த், புறநகர் டி.எஸ்.பி. சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்புத்துறை மாவட்ட துணை அலுவலர் ராஜூ மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணிக்காக ஒரு ஒப்பந்தக்காரரை தேர்வு செய்து, கழிவுகளை அகற்றுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும், எவ்வளவு நாட்கள் தேவைப்படும், என்னென்ன எந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் 9 பேர் கொண்ட மேலாண்மை குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது. அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன்மூலம் கழிவுகள் அகற்றும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவன வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும்.
- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த தொழிற்சாலையில் ரிபைனரி, காப்பர் ராட் பிளான்ட், 160 எம்.டபிள்யூ.கேப்டிவ் பவர் பிளாண்ட், சல்பரிக் ஆசிட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் நச்சு புகைகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100-வது நாளான மே 22-ந் தேதி போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.
அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதே ஆண்டு மே 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.
இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே பராமரிப்பு பணிக்காக சில மாதங்கள் திறக்க அனுமதி கோரி புதிதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்ததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் 3 மாதம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்றது. பின்னர் காலஅவகாசம் முடிந்ததால் மீண்டும் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.
மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆலையை திறக்க மனு தாக்கல் செய்த போதும் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வேதாந்தா நிறுவனம் ஆயில், கேஸ், ஜின்க், லீட், சில்வர், காப்பர், இரும்புத்தாது, ஸ்டீல், அலுமினியம் மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடியில் உள்ள நவீன ஸ்மெல்டர், ரிபைனிங் காம்ப்ளக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி வேதாந்தா, ஆக்சிஸ் கேபிடல் உடன் இணைந்து ஸமெல்டர் காம்ப்ளக்ஸ் (முதன்மை மற்றும் 2-ம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்.ஓ. யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேஷன் யூனிட், வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் ஆகிய 10 வகையான யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆர்வமுள்ள பொருளாதார திறன் கொண்ட தரப்பினர் அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
- ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2018 ஆகஸ்ட் 14ல் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சி.பி.ஐ. 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் வி.வி.டி. சந்திப்பு அல்லது எஸ்.வி.ஏ. பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ந் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி பகுதியில் உள்ள உள்கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம்.
இந்த கூட்டத்தில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டம் நடத்துவோர் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHCBench
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.
தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.
ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.
இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.
கடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமிஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் தனிஅலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
ஒருநபர் ஆணையம் தற்போது தூத்துக்குடியில் 4-ஆம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை நிலவரம் குறித்து ஒருநபர் கமிஷனை சேர்ந்த வக்கீல் அருள்வடிவேல்சேகர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் கமிஷன் இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 700 பேர் வரை விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிந்த பிறகே, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.
மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும்.
எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆலை திறக்கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை. ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.