என் மலர்
நீங்கள் தேடியது "வருமான வரித்துறை சோதனை"
- கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
கரூர்:
கரூரை தலைமை இடமாகக் கொண்டு சிவா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட பல்வேறு ஊர்களில் இந்த ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த அதிரடி சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு, வருமானம் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளிக்கடை என நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேபோல் விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் உள்ள ஜவுளி நிறுவனம், கடலூரில் இம்பீரியல் சாலையில் உள்ள உள்ள கே.வி.டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது.
- முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் டி.வி.எஸ். ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடைகள் உள்ளன. இதில் ஒரு ஜவுளிக்கடைக்கு நீலகிரி, கரூர், குளித்தலை உள்பட பல பகுதிகளில் கிளை நிறுவனங்களும் உள்ளன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி விற்பனையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறைக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து சென்னை மற்றும் கோவையிலிருந்து வருமானத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சேலம் வந்தனர். அவர்களுடன் சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து இன்று காலை 8 மணி அளவில் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்தனர்.
பின்னர் கடையில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடையின் ஷட்டர் பாதி நிலையில் பூட்டப்பட்டது. அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையையும், ஒவ்வொரு தளத்தையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது, முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் காடு டிஸ்க்களையும், பில்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். முக்கிய ஆதாரங்கள் வருமானத்துறை அதிகாரிகளுக்கு சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மற்ற கிளைகளிலும் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
- நடிகர் பிரித்விராஜ், தமிழில் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் பிரபல மலையாள பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், ஆபிரகாம் மேத்யூ உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கொச்சியில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று இந்த சோதனை நடந்தது.
படத்தயாரிப்புகளுக்கு பணம் சேகரித்தது, ஓ.டி.டி. தளங்களுக்கு படங்களை விற்பனை செய்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் இந்த சோதனை நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான விபரங்களை பின்னர் தெரிவிப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் பிரித்விராஜ், தமிழிலும் பாரிஜாதம், மொழி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
- சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
- தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஆம்பூர் டவுன் ஏ.கஸ்பா பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
தொழிற்சாலை கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்களின் செல்போன்களையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலாளர் மூலம் தகவல் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவிகள் வைத்து செல்போன் செயல் இழக்க செய்தனர்.
தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது.
ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள 15 தோல் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் 6 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் மீண்டும் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
- தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிருந்தே கோவை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பணிகளையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் இந்த சோதனையானது நடந்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்தது. கோவை கோல்டு வீன்ஸ் பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை இவரது வீட்டிற்கு 2 கார்களில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் நுழைவு வாயிலை பூட்டி விட்டு உள்ளே சென்றனர்.
வீட்டிற்குள் சென்றதும் அங்கிருந்தவர்களின் செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள் மற்றவர்கள் வரவும் அனுமதிக்கப்படவில்லை.
10 பேர் கொண்ட அதிகாரிகள் செந்தில் கார்த்திகேயனின் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் எடுத்து பார்த்து ஆய்வு செய்தனர்.
வீட்டின் அருகே உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. செந்தில் கார்த்திகேயன் அ.தி.மு.கவில் இருந்து விலகி சமீபத்தில் தான் தி.மு.க.வில் இணைந்தார்.
செந்தில் கார்த்திகேயன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அறிந்ததும் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வீட்டின் முன்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று காளப்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கு 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பணி வழங்குவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் கவர்னரை சந்தித்து செந்தில் பாலாஜி பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக புகார் மனு அளித்ததுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இருப்பினும் சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றுள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையானது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
- குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
சென்னை:
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை.
* சோதனைகளை எதிர்கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல.
* எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
* எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்"
* வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
* இருக்கின்ற சொத்துக்களே போதுமானது, புதிய சொத்துக்கள் தேவையில்லை.
* சோதனைக்கு பிறகு தவறை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்து கொள்ளவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரேஸ்கோர்ஸ், காளப்பட்டி, தொண்டாமுத்தூர், சவுரிபாளையம் உள்பட 7 இடங்களில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெறுகிறது.
- சோதனையில் 40-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
கோவையில் கோல்டு வின்ஸ், பொள்ளாச்சி, சவுரிபாளையம், ரேஸ்கோர்ஸ், தொண்டாமுத்தூர் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. நேற்று காலை தொடங்கிய சோதனையானது நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. சோதனை நடைபெறுவதை அறிந்ததும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதன்பின்னர் சென்று விட்டனர். இன்று காலை 2-வது நாளாக செந்தில் கார்த்திகேயன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதேபோல் பொள்ளாச்சி அருகே தம்மம்பதி கிராமத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் பண்ணை வீடு மற்றும் பொள்ளாச்சி அடுத்த பனப்பட்டியில் உள்ள சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியிலும் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் ரேஸ்கோர்ஸ், காளப்பட்டி, தொண்டாமுத்தூர், சவுரிபாளையம் உள்பட 7 இடங்களில் இன்று 2-வது நாளாக சோதனை நடந்தது. இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- கரூரில் வருமான வரி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில்
9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்:
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனால் சோதனையை கைவிட்டு அதிகாரிகள் சென்றனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது ஒரு சில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் 8-வது நாளாக இன்றும் கரூர் ராமகிஷ்ணபுரம், மாயனூர், ராயனூர் என பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தசோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சோதனையின் போது அதிகாரிகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேர் ஜாமீன் கேட்டு கரூர் ஜேஎம்கோர்ட் 1-லும், 7 பேர் ஜேஎம்கோர்ட் 2-லும் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 11 பேர் ராயவேலூரில் தங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், 7 பேர் கடலூரில் தங்கியிருந்து கடலூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8-வது நாளாக நேற்றும் கரூரில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையின் முடிவில் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
கரூர்:
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். பின்னர் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 8-வது நாளாக நேற்றும் கரூரில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரில் ஒரு அலுவலகத்தில் இருந்து 2 அட்டை பெட்டிகளை எடுத்து சென்றனர். இதுகுறித்து கேட்டபோது வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இதேபோல் மற்றொரு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது கம்ப்யூட்டர் சி.பி.யு.வை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்நிலையில் கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
- கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
- வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
வடவள்ளி:
கோவை அருகே உள்ள வடவள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று காலை 11 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கார்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
இதேபோல இந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அதிகாரிகள் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன? அதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு?, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் எப்படி வந்தது? வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வீடுகள் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? அதற்கு வருமானவரி செலுத்தப்பட்டு உள்ளதா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டனர். மேலும் கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சில முக்கிய ஆதாரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை 14 மணி நேரம் நடந்தது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் வெளியே செல்ல முடியாத படியும், யாரும் உள்ளே வர முடியாத படியும் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு சென்றனர்.
இன்று 2-வது நாளாக காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனத்தில் தலைமை அலுவலகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- லிங்க் கன்வேயர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
- வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கும், வ.உ.சி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் லிங்க் கன்வேயர் பெல்ட் மற்றும் துறைமுகத்தில் உள்ள 1-வது கரித்தளம் மறு சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்த கன்வேயர் பெல்ட்டை அந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும்.
அதன்படி பராமரிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா?, வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் 3 கார்களில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர்.
அவர்களில் 3 பேர் அனல் மின்நிலையத்துக்கும், மற்றவர்கள் வ.உ.சி. துறைமுகம் கரித்தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர், அனல் மின்நிலைய அதிகாரிகள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அதேபோன்று லிங்க் கன்வேயர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களை பெற்றனர். அனல் மின்நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படை யில் இன்று 2-வது நாளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக இன்று 11 பேர் கொண்ட அதிகாரிகள் கார் மூலம் வந்தனர். அனல் மின்நிலையத்திற்கு சென்ற அவர்கள் துணை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.