என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறநிலையத்துறை"

    • இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
    • இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.

    ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.

    இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

    மண்ணச்சநல்லூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார்கோவில் அருகில் தனது பாதயாத்திரை தொடங்கினார்.

    பின்னர் மலையப்பபுரம், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானா பகுதியில் அந்த யாத்திரை நிறைவு பெற்றது.

    பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது;-

    லால்குடி தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.

    காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இன்று வரை அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என தங்களை பலப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

    டாஸ்மாக் மதுவினால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதிகம் பாதிப்பு இல்லாத கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது,

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை பெருந்திட்டவளாகம் கட்டுகிறேன் என்ற பெயரில் ரூ. 422 கோடியை எடுத்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கிறது. குறைந்த பட்சம் ரூ. 1000 இருந்தால் தான் கோவில் பக்கம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலைத்துறை என்ற ஒரு துறையே இருக்காது. குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

    முன்னதாக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பார்வையாளர் யோகிதாசன், முன்னாள் மாவட்ட தலைவர் சேது அரவிந்த், மாநில பேச்சாளர் பாடகர் வி.என். தனசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், குமார், சண்முகம், சூரியகாந்த், ஒன்றிய தலைவர்கள் கணேசன், கண்ணன், பாலகிருஷ்ணன், கார்த்தி, முருகேசன், மற்றும் கோவிந்தராஜ், இலக்கியா, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மார்கழி 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணும்போது அதில் ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர்.

    அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

    உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.
    • வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.

    ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் மாநகராட்சிக்கு அனைத்து வகையான வரிகளையும் கட்டி வருகிறோம்.
    • கடந்த 1 மாதத்திற்கு முன்பு வந்து இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று நோட்டீஸ் ஓட்டினார்கள்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் இருந்து கோடீஸ்வரன் நகருக்கு செல்லும் காட்சி மண்டபம் வழியாக செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த சாலையில் டவுன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றப்போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காட்சி மண்டபம் செல்லும் சாலையில் குறுக்காக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மக்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அந்த பகுதியில் இருந்த சங்கரன் என்பவரது கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.

    இதையடுத்து அந்த இடத்திற்கு உரிமை கோர தொடங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள், இடிந்த வீடு உள்பட சுமார் 75 சென்ட் இடம் அறநிலைய துறைக்கு தான் சொந்தம் என வாதிட்டனர். ஐகோர்ட்டும் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

    நாங்கள் மாநகராட்சிக்கு அனைத்து வகையான வரிகளையும் கட்டி வருகிறோம். இப்போது கடந்த 1 மாதத்திற்கு முன்பு வந்து இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்றும், அவற்றை காலி செய்து விடுங்கள், இடிக்கப்போகிறோம் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் எங்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து நாங்கள் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் சென்று மனு கொடுத்தபோது, இதுகுறித்து நான் எதுவும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என கூறிவிட்டார்.

    இந்த இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வீடுகளை இடிப்பதில் குறியாக உள்ளனர். இந்த பகுதியில் 33 வீடுகள் உள்ள நிலையில் அவற்றை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி வருகிறது.
    • இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?

    "திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்குணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்?

    சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்?

    கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை?

    கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?

    இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், "ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்" என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். 'சிவன் மலை' என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா?

    திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்?

    1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா?

    தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின். அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா?

    சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார்.

    • 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
    • பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானம் கைவிடப்பட்டது என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் எனது தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில். என்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எண் 166 படி நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் தினம்தோறும் வந்து செல்லும் வெளியூர் மக்கள் நலன் கருதி பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி வைக்கும் நிலையில், போதிய இட வசதிகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடம், இதற்காக தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பண்பொழி சாலை அருகில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தினை பொது நோக்கத்திற்காக இந்நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடையநல்லூர் நகராட்சிக்கு வழங்குவதற்காக தீர்மானத்தினை நகர் மன்றத்தில் நானே கொண்டு வந்தேன். ஆனால் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோள் படி பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய பயன்பாடு உள்ள நிலத்தினை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே, தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவில், ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம். தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர்.

    இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×