என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் போலீஸ்"

    • மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார்.
    • ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    பங்குச்சந்தை மோசடி, பணம் இரட்டிப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையிலான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்தும் இணையதள மோசடிகள் அரங்கேற்றம் தொடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து அவர்களது ஆசைகளை தூண்டி பணம் பறிக்கும் நூதன மோசடிகளில் கும்பல்கள் களம் இறங்கி உள்ளன.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கான தகவல்களில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் சரியாக இருக்கிறது. ஆனால் ஜிபே போன் நம்பர் தவறாக இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களிடம் ஜிபே எண்ணை பெற்றுக்கொள்கின்றனர்.

    பின்னர் அந்த நம்பருக்கு ஒரு ரகசிய எண் குறுந்தகவலாக வரும். அதனை சொல்லுங்கள் என்று கூறி கேட்டு வாங்கி அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் பறித்துவிடுகின்றனர். இந்த வகை மோசடிகளில் தமிழகத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பணத்தை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை இழந்துள்ளனர்.

    குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து போனில் அந்த மோசடி கும்பல் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் அந்த கும்பல் போன் செய்து ஆதார், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வாங்கி கொண்டு பணத்தை பறித்து வருகிறது.

    இதில் சமீபத்தில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தந்தைக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை அவரது ஆதார் கார்ட்டில் இருப்பது போலவே அந்த நபர் தெளிவாக கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பி அந்த மாணவியின் தந்தை தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஜிபே நம்பரை கேட்கவும், அவர் உஷாராகிவிட்டார். இதுகுறித்து நான் ஒருமுறை பள்ளிக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் எனது நம்பரை தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்த உடன் மர்மநபர் போனை வைத்து விட்டார். அதன்பின்னர் அவரை அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை.

    அதன்பின்னர் மாணவியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேறு ஒருவர் மூலம் போன் செய்து கேட்கும்போது, அப்படி எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பம் இதுவரை பெறப்படவில்லை என்பதும், அது மோசடி செய்வதற்காக வந்த செல்போன் அழைப்பு என்பது தெரியவந்தது.

    இதனிடையே மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார். இதனால் ஏராளமான பெற்றோர்கள் உஷாரான நிலையில், நெல்லை மாநகரில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இதனிடையே இந்த மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது மோசடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோரின் செல்போன் எண்களுக்கும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    தங்கள் மகனுக்கு பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவி பணம் வழங்க இருக்கிறோம். ஆகவே தங்கள் ஜிபே நம்பர் மற்றும் ஓடிபி-யை சொல்ல வேண்டும் என்று யாராவது தொலைபேசியில் கேட்டால் அந்த நபரிடம் ஏதும் தகவலை பகிர வேண்டாம். பண இழப்பை தவிர்க்கவும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், நெல்லையில் இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், மாநகரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை குறிவைத்து அவர்களது ஆசையை தூண்டி மோசடி நடக்கிறது.

    இதனை வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான் அரங்கேற்றுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் சென்று பதுங்கி விடுவார்கள். பணத்தை மீட்பது கடினம். எனவே மக்களாகத்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

    • நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக எச்சரித்தும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போதை பொருள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதா கவும் கூறி பல வகைகளில் சைபர் கிரைம் கும்பல் அப்பாவி மக்களிடம் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன.

    இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர். ஏமாற்றுபவர்கள் புது வகையான டெக்னிக்கல் யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடு கின்றனர்.

    சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது.

    எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. அவ்வாறு யாரேனும் தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக போலீசாருக்கு தெரி விக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசி யுள்ளார்.

    பிரதமர் மோடியே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7.40 லட்சம் ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் ரூ.120 கோடி வரை மோசடி கும்பல் பறித்துள்ளனர். ஆன்லைன் மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே தொடர்பு கொள்கின்றனர்.

    இந்தியாவை குறிவைத்து மியான்மர், லாவோஸ், கம்போடியாவில் இருந்து ஏராளமான மோசடி கும்பல் போன் மற்றும் தகவல் தொடர்பு மூலம் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் 46 சதவீதம் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.


    ஆன்லைன் மோசடிகளில் சபலபுத்திக்காரர்களை குறி வைத்து இனிமையான குரலில் பேசி காதல் செய்யலாம் என்றும் டேட்டிங்கிகுக்கு அழைத்தும் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளது. ரூ.13.23 கோடி வரை காதல் மற்றும் டேட்டிங் மோசடிகள் நடந்துள்ளது.

    குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும், பணம் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகும் என்றும் ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. அந்த வகையான மோசடிகளில் ரூ.222.53 கோடி மோசடி நடந்துள்ளது.

    ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறிதான் அதிகளவில் மோசடி நடந்துள்ளது. இந்த வகையில் ரூ.1776 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

    தற்போது புதிய வகையாக உங்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள், சட்ட விரோதமான பொருட்கள் கொண்ட பார்சல்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்று வீடியோ அழைப்பு மூலமும் மோசடி நடக்கிறது.

    அமலாகத்துறையில் இருந்து பேசுவதாகவும் போலீசார் சீருடை அணிந்து பேசுவது போலவும் மோசடி செய்து பணத்தை பறிக்கின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டு 15.56 லட்சம் ஆலைன் மோசடி புகார்களும், 2022-ம் ஆண்டு 9.65 லட்சம் புகார்களும், 2021-ம் ஆண்டு 4.52 லட்சம் புகார்களும் வந்துள்ளது.

    தற்போது நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆலைன் மோசடி புகார் அதிகரித்தே வருகிறது.

    அனைத்து மாநிலத்திலும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆலைன் மோசடி குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இல்லா விட்டால் ஆன்லைன் மோசடியை குறைக்க முடியாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.
    • அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை. டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

    இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.

    இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கியின் கணக்கினை முடக்கினர்.

    இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.மோசடி கும்பல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களை போலீஸ் அதிகாரி, தகவல் தொடர்பு துறை அலுவலக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொய்களை கூறி அப்பாவி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப் (வயது 54) ராகேஷ் கோஷ் (39), அமித்சர்தார், (36) ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கில் ரூ.66 கோடியே 11 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பாராட்டினார்.

    • ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    விருதுநகரை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவரின் ரூ.10 லட்சம் பணத்தை சென்னை தலைமை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.

    இதற்காக சூப்பிரண்டு தேவராணி டி.எஸ்.பி. தாமஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள், பால்வண்ணநாதன், கோபிராஜா ஆகியோரை, பழனிசாமி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

    • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
    • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது.
    • இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார்.

    அதன்பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார்.

    போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசி காதலை வளர்த்தனர். வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார்.

    ஒருகட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான்.

    இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகினார். அதன்பிறகு மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

    சிறுவன் பொய் சொல்வதாக நினைத்த சிறுமி, என்னிடம் இதுபோல் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேசினார்.

    அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் போலீஸ்நிலையத்திலும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி உள்ளார். அதனால் அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவிகளை எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

    தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

    பள்ளி-கல்லூரி மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை தர கூடாது.

    மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் தயக்கம் இன்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் குழப்பத்தில் இருந்தால் விசாரித்து அவர்களை தைரியப்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு தருபவர்களை காப்பாற்ற முயற்சி செய்ய கூடாது. போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என கூறி வருகிறார்கள்.

    போலீசாரின் எச்சரிக்கையை மீறி கோவை மாணவியை போல் ஏமாற்றும் நபர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே இனிமேலாவது மற்ற மாணவிகள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • மாவட்ட மருத்துவ அலுவலர் புகார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பற்றிய தவறான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதன்மை மருத்துவ அலுவலர் குமரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 87ஆயிரம், பறநோயாளிகள் 8700, உள்நோயாளிகளுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது 7871, கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.

    மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை சிலர் வேண்டுமென்றே அரசு மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இங்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் ரத்தம் பெற்ற விவரம் முழுவதும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு சரிபார்க்கப்பட்டு உள்ளது.

    இங்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் சேமிக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு வெளி மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு பணம் செலுத்தி ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்த அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெகடர் பிரேமா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என செல்போனில் பேசியவர் தெரிவித்தார்.
    • மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த முத்து மகன் விஷ்ணுபிரியன் (வயது 25). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் எனது செல்போன் வாட்ஸ்அப்புக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு புது எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. மற்றொரு எண்ணில் இருந்து பேசிய நபர் தாங்கள் வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வேண்டும், இது தொடர்பான செயலியில் சென்று பார்த்தால் விவரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணில் நான் தொடர்பு கொண்ட போது கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என அதில் பேசியவர் தெரிவித்தார்.

    மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போன் எண்கள் யாருடையது , எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இதில் தொடர்புடைய பெரிய கும்பல் சிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×