search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி வேலுமணி"

    • அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.
    • அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அண்ணாமலை," பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். ஆனால், அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை என்றனர். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது, அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்றார்.

    தொடர்ந்து, அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை கூறுகையில், "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள்.

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

    பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

    ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.
    • விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    * கடந்த காலங்களிலும் கோவையில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

    * 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பின்னரும் 2021-ல் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றது.

    * கோவையில் 2019-ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.

    * பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது அதிகம் பேசியது அண்ணாமலை தான்.

    * அதிமுக- பாஜக கூட்டணி பிரிவுக்கு காரணம் அண்ணாமலை தான்.

    * 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.

    * விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    • கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி
    • தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த ‘நாடக மாடல் தி.மு.க. அரசு’ கைவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத தி.மு.க. அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார்.

    வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான தி.மு.க. அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

    தற்போது கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் தி.மு.க. அரசு' கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.
    • எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    கோவை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.

    * எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    * ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பெரும் வெற்றி பெறும், எனவே ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

    * அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

    * வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். அப்போது கோவை மாவட்டத்திற்கு விடுபட்ட திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
    • எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-

    மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
    • நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள். இங்கிருந்து யாரும் வெளியே போக மாட்டார்கள்.

    சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

    அந்த வகையில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக உயர்ந்து, கட்சியின் பொது செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

    சமூக வலைதளங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர், பா.ஜ.கவுக்கு செல்வதாக தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு சேர்ந்து கொண்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். அதனையெல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. அதனை பற்றி பேசினால் நமக்கு தான் நேரம் விரயமாகும்.

    வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் வைத்துள்ள பா.ஜ.கவில் நாம் சேரப் போகிறோம் என்று கூறினால் அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.

    தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஒன்று சேருமா? பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்று சேருமா? அது போல தான் நம்மை பற்றி பரப்பப்படும் வதந்தியும். அதனால் அதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள்.

    நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,கே.ஆர்.ஜெயராமன், சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை தந்தனர். சிறுபான்மை மக்களுக்கு என்றும் அம்மா வழியில் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல திருச்சபை திறப்புக்கு காரணம் அவர் தான்.

    முதலமைச்சராக இருந்தபோதும் எளிதாக மக்கள் அணுகக் கூடியவராக செயல்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கோவை மாவட்டத்தில் 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். மேம்பாலம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், கலெக்டர் அலுவலகம், புதிய கல்லூரிகள், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார். தற்போதைய ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் பழனிசாமி தலைமையில் பெரிய கூட்டணி அமையும். சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும் பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெறும். அவர் பொறுப்பேற்ற பின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை.

    கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்.

    நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.

    தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.

    ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அ.தி.மு.க காரன் தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம் தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால்தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது.

    எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது என கூறினார்.

    இதனிடையே சபையில் பேசிய தருமபுரி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்யவேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார்.

    • சபாநாயகர் அப்பாவு உடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
    • சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது பதவியை பறிக்குமாறும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றுமாறும் அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கும் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும் என்று தீர்ப்பு கூறி ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின், சட்டசபை அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பறிக்கவும், சட்டசபையில் அவரது இடத்தை மாற்றவும் அ.தி.மு.க. சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக சபாநாயகர் அப்பாவுவை, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வத்தை, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும். சட்டசபையில் அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

    இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

    இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

    காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

    மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

    மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    ×