search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை- அமைச்சர் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்
    X

    அமைச்சர் துரைமுருகன் - எஸ்பி வேலுமணி

    சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை- அமைச்சர் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

    • கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி
    • தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த ‘நாடக மாடல் தி.மு.க. அரசு’ கைவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத தி.மு.க. அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார்.

    வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான தி.மு.க. அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

    தற்போது கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் தி.மு.க. அரசு' கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×