என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷி சுனக்"

    • மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார்.
    • போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    லண்டன்

    இங்கிலாந்தின் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தனது மந்திரிசபையை அமைத்துள்ளார்.

    கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை, நம்பிக்கையை மீட்டெடுப்பேன் என பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, அளித்த உறுதியை நிரூபிக்கிறவகையில் மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    ரிஷி சுனக்கின் புதிய மந்திரிசபை விவரம் வருமாறு:-

    * துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் துணை பிரதமர் பதவி விகித்தவர் ஆவார்.

    * ஜெரேமி ஹண்ட், நிதி மந்திரி பதவிக்கு வந்துள்ளார். இவர், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் நிதி மந்திரி குவாசி நீக்கப்பட்ட பின்னர் அந்த பதவிக்கு வந்தவர்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் உள்துறை மந்திரி பதவி வகித்து, அதிமுக்கிய ஆவணம் ஒன்றை தனது தனிப்பட்ட இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகியவர் இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன் ஆவார். இவரை ரிஷிசுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியில் அமர்த்தி இருக்கிறார்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் அங்கம் வகித்த ராணுவ மந்திரி பென் வாலஸ், வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி அப்படியே ரிஷி சுனக் மந்திரிசபையிலும் தொடருகிறார்கள். இவர்கள் போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள். அவர்களையும் ஒதுக்கிவிடவில்லை என்று ரிஷி சுனக் காட்டி உள்ளார்.

    * லிஸ் டிரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் பதவி போட்டியில் தனக்கு எதிராக களத்தில் குதித்த பென்னி மார்டண்ட், தொடர்ந்து நாடாளுமன்ற மக்கள் சபை தலைவராக பதவி வகிப்பார் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

    * வர்த்தக மந்திரியாக கிராண்ட் ஷாப்ஸ், பணிகள், ஓய்வூதியத்துறை மந்திரியாக மெல் ஸ்டிரைட், கல்வித்துறை மந்திரியாக கில்லியன் கீகன், சுகாதார மந்திரியாக ஸ்டீவ் பார்க்ளே, போக்குவரத்து மந்திரியாக மார்க் ஹார்பர், சர்வதேச வர்த்தக மந்திரியாக கெமி பெடனோக், கலாசார மந்திரியாக மிச்செல்லி டொனெலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தனது மந்திரிசபையில் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆதரவாளர்களுக்கும் ரிஷி சுனக் இடம் அளித்து இருப்பது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், "கட்சியின் திறமையானவர்களை இது ஒன்றிணைக்கிறது" என தெரிவிக்கின்றன.

    முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.

    ஆனால் இதை வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி நியாயப்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் தனது தவறை ஒப்புக்கொண்டு விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்" என தெரிவித்தார்.

    மேலும், உள்துறை மந்திரி பதவியில் அவரது அனுபவத்தை பிரதமர் ரிஷி சுனக் மதிக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.

    ஆனால் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்தி உள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என கூறி உள்ளது.

    இந்த நிலையில் தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடத்தினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பொறுப்பேற்றார்.
    • இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானதற்கு உலக் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று ரிஷி சுனக்கிடம் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.
    • 2 வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கெய்ரோ:

    ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

    இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.

    • இங்கிலாந்து அமைச்சர் காவின் வில்லியம்சன் ராஜினாமா செய்துள்ளார்.
    • இது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார்.

    பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை அமைச்சர் காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர்.

    சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காவின் வில்லியம்சன் அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போதிய ஒத்துழைப்பு அளிப்பேன். என்னால் இந்த அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.

    • பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்
    • மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்

    பாலி:

    இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பு முடிந்து சில மணி நேரத்தில் பிரிட்டன் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, 'ஒவ்வொரு வருடமும் 3,000 திறமையான பட்டதாரிகளை இந்தியாவில் இருந்து வேலைக்கு அழைக்கும் சிறப்பு விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 30 வயது வரையிலான இந்தியர்கள், இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் பணியாற்ற முடியும்.

    இந்தத் திட்டம் பரஸ்பரம் இருக்கும் என்றும், இந்தியா-பிரிட்டன் உறவு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்றும் பிரிட்டன் அரசு கூறியிருக்கிறது.

    பிரிட்டன்-இந்தியா உறவின் நீடித்த முக்கியத்துவம் மற்றும் நமது நாடுகளுக்கு இடையே வாழும் பாலமாக இருக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்தபோது, இந்திய மக்கள் அளித்த ஆதரவுக்காக பிரதமர் மோடிக்கு சுனக் நன்றி தெரிவித்ததாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சுனக் உடனான தனது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கருத்து தெரிவித்த மோடி, வலுவான இந்தியா-பிரிட்டன் உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையானது வர்த்தகம், இயக்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற ஒத்துழைப்பின் முக்கிய இலக்கை தொட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. மோடியும் சுனக்கும் பிரிட்டன்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்நோக்கியுள்ளனர், இது முதலீட்டுக்கான கதவுகளை திறக்கும் மற்றும் இரு நாடுகளிலும் வேலைகளை அதிகரிக்கவும், நமது ஆழமான கலாச்சார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • இனவெறி பிரச்னையால் அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்ட கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.
    • கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் ராணி கமிலாவின் ஏற்பாட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இளவரசர் வில்லியமின் ஞானத்தாயும், மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளருமான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளைக் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதையடுத்து அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்கிடம் இனவெறி பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரிஷி சுனக் கூறியதாவது:

    அரச அரண்மனை தொடர்பான விஷயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிறந்த எதிர்காலத்துக்கு செல்வது சரியானது என தெரிவித்தார்.

    • கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.
    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றார் பிரதமர் ரிஷி சுனக்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

    2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.

    தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது. ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

    அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
    • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

    பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

    பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் தயாரித்துள்ளது.
    • பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    லண்டன் :

    கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது.

    முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி, 23-ந் தேதி ஒலிபரப்பாகிறது. இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:-

    பி.பி.சி. ஆவணப்படம், அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில், பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.

    இந்தநிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். பி.பி.சி. ஆவணப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று அவர் கேட்டார். அதற்கு பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது என்று அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் 100-க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது.
    • வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப்படி கேமிராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    நாடு முழுவதும் 100-க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப்படி கேமிராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது. அவரது காரின் முன்னும் பின்னும் போலீசார் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக்காக சென்றனர். இதில் பிரதமர் ரிஷிசுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றார்.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். ஒரு சிறிய கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார். இது தவறு என்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவர் கூறினார்.

    மேலும் காரில் செல்லும் போது அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் நம்புவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டார்.

    இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக போலீசார் டுவிட்டரில் கூறும்போது, ஓடும் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    பிரிட்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நாதிம் மீது வைக்கப்பட்டன.

    பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகர் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாதிம் ஜஹாவிவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசு பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    ×