search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க பதக்கம்"

    • சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
    • காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.

    போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

    அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.

    இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.

    பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.

    இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்குட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சந்தன பில்கேட்சை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்கள்.

    • இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர்.
    • வாலிபால் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கம் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியினை சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், மதுரை சகோதயா அமைப்பும் இணைந்து நடத்தியது.

    இதில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் கால்பந்து, வாலிபால், இறகுபந்து, செஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கபதக்கம், வெள்ளிபதக்கம் பெற்றனர்.12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வெள்ளிபதக்கமும் பெற்றனர்.

    இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் இசக்கி சுப்பையா, மேலாளர் இசக்கித்துரை, பள்ளி முதல்வர் மோனிகா டீசோசா, துணைமுதல்வர் ஜெயாக்கியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், சோபியா, சேவியர், பரலோகராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னை:

    கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் 7 விளையாட்டு பிரிவுகள் (100 மீட்டர் தடை தாண் டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்) அடங்கிய 'ஹெப்டத்லான்' போட்டியில் சென்னை காவல்துறையில் நவீன கட்டுப்பாட்டு அறையில், காவல்கரங்கள் பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு லீலாஸ்ரீ தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. வரும் 14-ந் தேதி சென்னை திரும்பும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தனுஷ் ஆதித்தன் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் சந்தை கடையை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு தனுஷ் ஆதித்தன் (21). திவாகர் என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் தனுஷ் ஆதித்தன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி யாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி படிப்பு காலத்தில் இருந்து தடகள போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.

    இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.

    இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் 14.06 நிமிடத்தில் தாண்டி முதல் பரிசை பெற்றுள்ளார்.

    இதையடுத்து இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

    இதையடுத்து லக்னோவில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த தனுஷ் ஆதித்தனுக்கு மேட்டுப்பாளையம் சர்வ வல்லமை விளையாட்டு குழுவினர் சால்வை அணிவித்து மாலை போட்டு வரவேற்பு அளித்தனர்.

    இதுகுறித்து தனுஷ் ஆதித்தன் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

    • சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த லோகப்பிரியா மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
    • கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள்-வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

    தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய போட்டிகள், வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை லோகப்பிரியாவும் ஒருவர் ஆவார்.

    கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வமுத்து-ரீட்டா மேரி தம்பதியின் மூத்த மகளான லோகப்பிரியா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக பெற்றோரும் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வந்தனர். சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த அவர் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

    தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற லோகப்பிரியா நேற்று நடந்த பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார்.

    தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். தங்கம் வென்ற அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து போட்டிக்கு சென்ற வீரர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றினர்.

    அப்போது வீராங்கனை லோகப்பிரியா கூறுகையில், தங்கம் வாங்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, நான் தங்கம் வாங்கிதைப் பார்க்க கூட இல்லாமல் போய்விட்டாரே. தங்கத்தை வென்று விட்டேன், தந்தையை இழந்து விட்டேன் என துடித்தார். இது அங்கிருந்தவர்களின் மனதை கலங்கவைத்தது.

    அதேவேளையில், அவர் பிறந்த மண்ணான கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே இறந்த செல்வமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
    • தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

    இதில் அரிமா பள்ளி மாணவர்கள் கிஷோர் குமார், முகுந்தன், உதய் கமலேஷ், சிவ அக்‌சய குமார், அரவிந்த், அருண், குமரன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து குழுவில் சேர்ந்து விளையாட பயிற்சிக்கு தகுதிபெற்றுள்ளனர். மாணவிகள் சோஷ்லின், காவியா ஆகியோர் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர். 

    ×