search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ்"

    • அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
    • இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்

    வாயோடு வாயாக எச்சில் மூலம் பரவி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முத்த நோய் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நெவி மெக்ரெவி என்ற 22 வயது பெண் ஒருவர் பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்கியதைக் கொண்டாட தனது தோழிகளுடன் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தற்செயலாக சந்தித்த வேற்று நபருக்கு நெவி வாயோடு வாய் முத்தம் கொடுத்துள்ளார்.

     

    அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது GLANDULAR FEVER எனப்படும் சுரப்பிக் காய்ச்சல் அவரைத் தாக்கியுள்ளது. உடலின் சுரப்பிகள் வீங்கி அதீத வேர்வை ஏற்பட்டு தொடர்சியாக வாந்தி எடுத்து தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் நெவி மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சுரப்பி நோயானது எப்ஸ்டைன் பார் [Epstein barr virus -EPV] என்ற வைரசால் ஏற்படுவது ஆகும். இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடிய தன்மை உடையது. முக்கியமாக ஒருவரது எச்சில் மற்றவருக்கு மிகவும் தொடர்புபடும் முத்தத்தால் இந்த நோய் அதிகமாக பரவுவதால் இதை முத்தக் காய்ச்சல் [Kissing fever] என்று அழைக்கின்றனர். இது இளம் வயதினரிடமே அதிகமாக பரவி வருகிறது.

    உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாத போது இந்த நோய் ஏற்படுகிறது . இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ்,  கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உயிர்கொல்லியாகவும் மாறக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
    • காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முதலில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லாமலே இருந்தது.

    கொரோனா வைரஸ் முதலில் 2019 சி.ஓ.வி. என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறகு அதன் பெயரை 2019 சி.ஓ.பி.-2 என்று சொன்னார்கள். ஐ.நா. சபை ஆய்வு செய்து அதற்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டியது.

    பெயர் என்ன என்று தெரியாத நிலையிலேயே அந்த வைரஸ் நிறைய பேர் உயிரை பறித்தது. அதுபற்றி ஆய்வு செய்தபோதுதான் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொதுவாக ஒரு உயிரினம் தனது மரபணுவை பிரதி எடுக்கும்போது சில தவறுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதன் காரணமாக புதிய தோற்றம் உருவாகும். அந்த வகையில்தான் கொரோனா வைரசும் புதுசு புதுசாக மாற்றம் அடைந்தது.

    இதன் காரணமாகவே உலக அளவில் கொரோனா முதல் அலை, 2-வது அலை என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் மாற்றத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது பீட்டா, காமா என்ற வகைக்கு சென்றிருப்பதாக கண்டறிந்தனர்.

    அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து உருவாக்கிய நிலையில் அது டெல்டா என்ற புதிய வடிவத்தை பெற்றிருந்தது. சில மாதங்களிலேயே அது டெல்டா பிளஸ் என்ற கொடூர வைரசாக மாறியது. டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானாவர்கள் உயிரை பறிகொடுக்க நேரிட்டது. இந்த நிலையில்தான் டெல்டாவும், டெல்டா பிளசும் ஒருங்கிணைந்து புதிதாக ஒரு கொரோனா வைரசை உருவாக்கின. அதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டது. ஒமைக்ரானில் எடுத்த எடுப்பிலேயே பி.ஏ.1, பி.ஏ.2 என்றெல்லாம் வகை வகையாக கொரோனா வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டன.

    கடந்த ஓராண்டுகளில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் அடிக்கடி புதிய புதிய வகைக்கு மாறியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் மூலம் 1900 தடவை மாற்றங்கள் ஏற்பட்டு புதுசு புதுசாக வைரஸ்கள் தோன்றியதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.

    இந்நிலையில்தான் தற்போது எச்.3, என்.2 என்ற வைரஸ் பேசப்படும் ஒரு வைரசாக மாறி இருக்கிறது. இதுவும் ஒமைக்ரான் பெத்து போட்ட பிள்ளையாக இருக்குமோ என்று முதலில் பெரும் பாலானவர்கள் நினைத்தனர்.

    ஆனால் அது ஒமைக்ரான் வழி தோன்றல் வைரஸ் அல்ல. இன்புளுயன்சா வகை வைரஸ்களில் ஒன்று என்பது உறுதியானது. இந்த வைரசால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதுதான் ஆறுதலான விஷயம். ஆனால் காய்ச்சல், இருமல், சளி தொல்லை என்று சுமார் ஒரு மாதம் படாதபாடு படுத்திவிடும்.

    இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் இந்த எச்.3 என்.2 வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு 99 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் இந்த வைரஸ் வந்து மக்களை புது விதமாக படாதபாடு படுத்திவிட்டது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ்கள் பரவி இருப்பதை கண்டறிந்தனர். எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதில் வட மாநிலங்களில் எச்.3 என்.2 வைரசும், தமிழகத்தில் எச்.1 என்.1 வைரசும் அதிகளவில் பரவி இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே உள்ள ஒமைக்ரான் வைரஸ் பிரிவுகளின் தாக்கத்தோடு இன்புளுயன்சா வைரஸ்களின் தாக்கமும் சேர்ந்தால்தான் பெரும் பாலானவர்களுக்கு காய்ச்சல், இருமல் தொல்லை ஏற்பட்டது.

    இதற்கிடையே நிறைய பேருக்கு என்ன வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் மரபணு மாற்றத்துக்குள்ளான வைரஸ்களின் மரபணுக்கள் மீண்டும் ஆய்வு செய்யப் பட்டன.

    அந்த பகுப்பாய்வில் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரஸ் தொற்றுதான் சமீப காலமாக நிறைய பேரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்.பி.பி. வைரசின் மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அவை எக்ஸ்.பி.பி.1 மற்றும் எக்ஸ்.பி.பி. 1.16 என்றும் உருமாற்றம் பெற்றுவிட்டன.

    கடைசியாக கண்டறியப் பட்ட எக்ஸ்.பி.பி.1.16 ரகத்துக்கு சமீபத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது. இது சற்று வேகமாக பரவக்கூடியது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவுவதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இந்த வைரஸ்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால்தான் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணிவதை முக்கிய தடுப்பாக சொல்கிறார்கள். நிறைய பேர் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால்தான் புதிய வைரசை விரட்ட முடியும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இன்புளூயன்சா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன.

    இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

    அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்புளூயன்சா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன. அதில் எச்.3 என்.2 மற்றும் எச்.1 என்.1 வகையை சேர்ந்த வைரஸ்கள்தான் அதிகம் பரவி இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது.

    சில மாநிலங்களில் அடினோ வைரஸ் என்ற வகை வைரசும் தீவிரமாக பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ்கள் அனைத்தும் இன்புளூயன்சா வைரசின் ஏ வகை பிரிவை சேர்ந்தவை ஆகும். இந்த வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையும் பாதிப்பது தெரியவந்தது.

    சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவைகளில் இந்த வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் இந்த 3 வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஒரு மாதம் வரை கடும் அவதியை சந்திக்க நேரிட்டது.

    குறிப்பாக நீரிழிவு நோய், இதய நோய் இருப்பவர்களை இந்த வைரஸ்கள் தாக்கினால் கூடுதல் பாதிப்பு ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தீவிர ஆராய்ச்சி நடத்தியது. அதில் பெரும்பாலான மாநிலங்களில் 25 சதவீதம் அடினோ வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 70 சதவீதம் பேரை எச்.3 என்.2 வகை வைரஸ் தாக்குவது தெரிய வந்தது. இந்த வைரசால் தாக்கப்பட்டவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெரும் வகையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலை இருந்தது.

    இதனால் இந்த வைரஸ்களை கண்டு பெரும்பாலானவர்கள் அச்சப்படாமல் தொடர்ந்து பணிகளில் செயலாற்றி வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் 99 சதவீதம் பேர் இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மராட்டியம் மற்றும் தமிழ் நாட்டில்தான் புதிய வகை வைரஸ்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் மார்ச் மாதம் 5-ந் தேதி வரை எடுத்த கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 5,451 பேர் எச்.3 என்.2 வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    எச்.1 என்.1 வகை வைரஸ்களில் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி வரை நாடு முழுவதும் 955 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 545 பேர் தமிழகத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் எந்த வகை வைரஸ் அதிகம் பரவி உள்ளது என்பதில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மாதம் மேற்கொண்ட மரபணு பகுப்பாய்வு சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவு வகைகளே தற்போது சமூகத்தில் பெரும்பாலும் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    கொரோனா தீ நுண்மியின் மரபணுவை கண்டறிவதற்கான பகுப்பாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 75 சளி மாதிரிகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பிஏ-2 வகை கொரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்டவர்கள் 57 சதவீதம் பேர் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்.பி.பி. வகை தொற்றுக்குள்ளானோர் 39 சதவீதம் பேரும் பிஏ-5 தொற்றுக்குள்ளானோர் 3 சதவீதம் பேரும் உள்ளனர்.

    இரண்டாம் அலையின் போது பரவிய டெல்டா வகை தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த தரவுகளின் வாயிலாக தமிழகத்தில் புதிய வகை கொரோனா தீநுண்மி பரவல் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொற்று பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
    • உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

    வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும்.

    இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது. மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது. இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

    மேலும், பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.

    இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.
    • முதலில் யானை குட்டியின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணார் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு குண்டல எஸ்டேட் பகுதியில் அம்மாநில வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 யானைக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைக்குட்டிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஹெர்பீஸ் நோய் தொற்றானது 1990 ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று நோய் என கண்டறியப்பட்டது.

    முதலில் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 3 ஆண் குட்டியானைகள் உயிரிழந்தது கேரள வனத்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சுழற்சி முறையில் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் கேரள வனப்பகுதியான செம்பக்காடு, மறையூர், மூணார் பகுதியை ஒட்டி உள்ளதால் யானைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    • மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

    கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.

    சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.

    மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×