search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"

    • வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு பர்மிட் போடும் உள்வழி ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது.

    இந்த உள்வழி சோதனை சாவடியில் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.
    • காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்செட்டி தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன் (வயது 53). இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இவர் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றியபோது உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு மற்றும் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு போலீஸ்) விசாரணை நடத்தினர். அதில் தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக பிரிந்து தாசில்தார் சுந்தரராஜன் வசிக்கக்கூடிய கீழ்செட்டி தெருவில் உள்ள வீடு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு, சுந்தரராஜனுடன் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றிய விழுப்புரம் செல்வராஜ் நகரை சேர்ந்த தேவிகா மற்றும் முறைகேடுக்கு இடைத்தரகராக இருந்த வளவனூர் அருகே உள்ள தாதாம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.
    • சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இரவு 9 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ் (வயது 32) என்பவரை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் சுமார் 3½ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பல தகவல்கள் சிக்கி உள்ளது. மேலும் 2 ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்ரோஸ் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் தங்கி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.

    அதனால் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
    • லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது.

    தேவகோட்டை:

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது சரீப் (வயது45). இவருக்கு சொந்தமாக கூரியூர் பகுதியில் நிலம் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளிடம் மனு செய்தார்.

    அவர் 8 மனைகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.28 ஆயிரத்து 192 மற்றும் வரன்முறை படுத்துதல் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 745 ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

    அதன்படி முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றபோது சேவுகப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய்த்துறை முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேவுகப்பெருமாள் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
    • 2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.

    2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
    • பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குனர் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலமாக அங்கிட் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

    இன்று காலை ஜாமீன் வழக்கு குறித்து நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தெரியாது என பதிலளித்தார்.
    • அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

    அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.

    லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

    அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.

    • நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.

    அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

    நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் வாரம் ஒருமுறை செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தி அங்கிட் திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியபோது கதறி அழுதார். அப்போது அவர்கள் அங்கிட் திவாரிக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

    இதனிடையே அங்கிட் திவாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனவே லஞ்ச பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அங்கிட் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

    ×