search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    • சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.

    72 வயதாகும் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
    • ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும்.

    அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

    கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வுக்குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடுகளில் அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

    ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன. குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது கருவண்ணூர் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் கடந்த 2010-ம் ஆண்டு கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வங்கியில் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அநத மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி நடந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் பெற்று பணம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. பணம் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள்-குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கியை நிர்வகிக்கும் நபர்களின் அறிவுறுத்தலின்பேரில் வங்கி மேலாளரால் முகவர்கள் மூலம் ரொக்கமாக பலருக்கு கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மந்திரி சபையில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ., கவுன்சிலர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

    வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளும், திருச்சூர் மாவட்ட குழுவின் நிலையான வைப்பு கணக்குகளும், மேலும் 3 வங்கிகளில் கட்சியின் சேமிப்பு கணக்குகளும் அடங்கும்.

    பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.29கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக பல நபர்களின் வங்கி கணக்குள் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.87.85 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கருவண்ணூர் கூட்டுறவு வங்கி பணம் மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
    • ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

    பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    9 பிரிவுகளில் வழக்குப்பதிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் 13 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

    தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

    சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது
    • இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று இன்று நாளை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரவிக்குமார் அண்மையில் அயலான் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய 2 திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றிப்பட இயக்குநர் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    • தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
    • நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது

    தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

    அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராம நாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.
    • கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


    கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

    அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துாத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
    • தமிழக அரசு கேட்ட, ரூ.21,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்க வலியுறுத்தி இன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து இருந்தது.

    அதன்படி சென்னை சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை திரண்டனர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 600 பேர் பங்கேற்றனர். இவர்களில் 100 பேர் பெண்கள் ஆவர்.

    போராட்டம் குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கனமழை மற்றும் வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

    துாத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகள், கடைகள், குறு,சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், மீன்பிடி தொழில், உப்பளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசம் அடைந்துள்ளன. ஆனால், தவிக்கும் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட மத்திய அரசு முன்வரவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 21,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மத்தியஅரசு இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை. எனவே தமிழக அரசு கேட்ட, ரூ.21,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • "வராக்கடன்கள் வேறு, கடன் தள்ளுபடி வேறு" என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
    • "ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது?" என சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்

    இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு இவற்றால் வங்கிகளின் நிகர லாபங்கள் குறைவதும் தொடர் கதையானது.

    சில வருடங்களுக்கு முன் இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வராக்கடன்கள் என்பது வேறு; கடன் தள்ளுபடி என்பது வேறு - வராக்கடன்கள் மீண்டும் வங்கிகளுக்கு கிடைக்க போகும் பணம்தான்" என பதிலளித்திருந்தார்.

    மேலும், சில தினங்களுக்கு முன் அவர், "மத்தியில் 2004 தொடங்கி 2014 வரை ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்த போது கடன் பெற தகுதியற்ற பலருக்கு பொதுத்துறை வங்கிகள் கடன்கள் வழங்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டன. இவற்றை மீட்டெடுக்க மத்திய ரிசர்வ் வங்கி, நான், பிரதமர், வங்கி அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டோம். அதன்படி எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அமலாக்க துறை ரூ.15,186.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பண மோசடி தடுப்பு சட்டம் மூலம் மீட்டு அவை அந்தந்த பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், சு. வெங்கடேசன் (53), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக்கடன்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது:

    வராக்கடன் என்றால் வசூலாகும் கடன்தான் என்று எப்போதும் நிதியமைச்சர் விளக்கம் தருவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள்

    வராக்கடனா ? வஜாக்கடனா?

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.
    • 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து இன்று காலை முதலே சேலம் மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே சண்முக ராஜா தலைமையில் ஜங்ஷன் தபால் நிலையம் அருகே இருந்து 150-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவாயில் அருகே பேரிகாடுகள் வைத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அதை தள்ளிக்கொண்டு போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதை அடுத்து ரெயில் நிலைய நுழைவு வாயில் வழியாக ரெயில் மறியலுக்கு முயன்ற 21 பெண்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ரெயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக ரெயில் நிலையத்திற்குள் சென்ற 20-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட குழு உறுப்பினர் பரமேஸ்வரி தலைமையில் 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் சுமார் 1/2 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.

    இதேபோல் சீலநாயக்கன்பட்டி திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமையில் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.

    ×