search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    • கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.

    பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.

    கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.

    • நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
    • தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க. தற்போதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.

    'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ மந்திரி நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய மந்திரிகளை வருந்தி அழைத்து, பா.ஜ.க.வுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?

    'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (ஆர்.இ.டி.) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக் கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
    • சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.

    அதற்குள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுக் குழுவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உசுப்பி விட்டார்.

    அதை கேட்டதும் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சூடாகி விட்டார்கள். தி.மு.க. தயவால்தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அந்த நன்றியை மறந்து விடக்கூடாது என்றார்கள். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

    தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏன் இந்த திடீர் ஊடல்? என்பது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    இதை தி.மு.க.வுடன் ஊடல் என்பதை விட எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஊடல் என்பது தான் சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் மனக்குமுறல்தான் இது.

    2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களை பிடித்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடத்தியது. அப்போதும் ஆட்சியில் பங்கு தரவில்லை.

    இப்போதும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் பலத்தையும் சேர்த்துதான் தி.மு.க. வென்றது. இப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.

    எந்த மாவட்டத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரசாருக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் தரவில்லை.

    ஆட்சியில் பங்கு கேட்காவிட்டாலும் 10 வாாரியங்களில் பொறுப்பு தர கேட்டோம். அதிலும் காங்கிரசாரை கண்டு கொள்ளவில்லை.

    உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பங்கீடு கிடைக்க வில்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யாமல் மாவட்ட அளவில் பேசி முடிக்கும்படி கூறி விட்டார்கள். ஆனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எங்களை மதிக்கவில்லை. கொடுத்த இடங்களில் கூட போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசாரை தோற்கடித்தார்கள். இப்படி இருந்தால் காங்கிரசை வளர்ப்பது எப்படி?

    கட்சியை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு கட்டத்தில் காங்கிரசை காண முடியாது. எனவேதான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சிலருக்கு கிடைத்து விட்டதால் கட்சி பலவீனப்பட்டு போவதை தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதுதான் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாங்கள் 10 வாரியங்கள் கேட்டதில் பீட்டர் அல்போன்சுக்கு மட்டும் தி.மு.க. தன்னிச்சையாக பதவி கொடுத்தது. அறங்காவலர் பதவிகள் கேட்டோம். தரவில்லை. அரசு வக்கீல்கள் பதவி தரவில்லை. வாரிய தலைவர்கள் பதவி விரைவில் முடிய இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வரப்போகிறது.

    தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் பதவிகள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    வரப்போகும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், காலியாக போகும் வாரிய தலைவர்கள் பதவியிலும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் முரண்டு பிடிப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது

    அதிமுக 8 தொகுதிகளிலும் பாமக 3 தொகுதிகளிலும் தேமுதிக 2 தொகுதிகளிலும் மட்டும் தான் அதிக வாக்கு வாங்கியுள்ளது.

    எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் பாமக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக 1 தொகுத்தியில் கூட அதிக வாக்குகளைப் பெறவில்லை.

    கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் அதிக வாக்குகள் பெற முடியவில்லை.

    பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதியிலேயே பாஜக அதிக வாக்குகள் பெறாத நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
    • விஜய பிரபாகரனை விட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.

    குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

    இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.

    நியூஸ் 18 கருத்துக் கணிப்பு

    தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்

    காங்கிரஸ் 6-8 இடம்

    பாஜக 1-3

    அதிமுக 0-2

    இந்தியா டுடே

    தமிழகத்தில் திமுக 20-22

    காங்கிரஸ் 6-8

    அ.தி.மு.க. 2

    இந்தியா கூட்டணி 33-37

    ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)

    தி.மு.க. கூட்டணி 37-39

    அ.தி.மு.க. 1

    பா.ஜ.க. 1

    • டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.
    • விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வலுவாக இருந்தது. தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே உடன்பாடானது.

    இந்தநிலையில் தேர்தலுக்காகத்தான் கூட்டணி. முதலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பாருங்கள் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட வாரியாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில்தான், கொடுக்கும் நிலையில் இருந்த காங்கிரஸ் இடங்களை கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் உள்ளது. 57 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று செல்வப் பெருந்தகை கூறினார்

    இதுபற்றி தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார்.

    இந்த சூழலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது. அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்றார்.

    தலைவர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதேநேரம் கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நிலவி வருகிறது.

    எனவே விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

    • மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
    • இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.

    ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:- 

    நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.

    கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.

    கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.

    வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
    • தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

    கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக தொகுதி பங்கீடு செய்து முடித்து விட்டார். அதன் பின்னர் நேற்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அவர் கார் மூலமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 25, 26, 27,29, 30,31,ஏப்ரல் 2, 3, 5, 7,6,9, 10, 12, 13 ,15 ,16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    இறுதியாக அடுத்த மாதம் 17-ந்தேதி தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
    • 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

    மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

    இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

    தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
    • தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.

    அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

    மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.

    பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.

    இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.

    இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.

    பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.

    ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.

    பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

    சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×