என் மலர்
நீங்கள் தேடியது "ரேசன் கார்டு"
- ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
- அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை
கொல்கத்தா:
நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.
- புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள அரசு நெல் சேமிப்பு கிடங்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இதுபோன்று நிலைமை இருக்கக்கூடாது என்ப தற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, 18 மாதங்களில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 213 இடங்களில் சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு ரூ. 238 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஆணை வெளியிட்டது. மேலும் தற்போது உள்ள 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கப்பலூர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.
நியாய விலைக் கடை ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை 3 வகையான கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 14 லட்சம் அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகள், 1.04 லட்சம் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களும் அரிசி கேட்கிறார்கள்.
சர்க்கரை அட்டை தாரர்கள் 3.82 லட்சம் பேர் உள்ளனர். பொருட்கள் எதையும் வாங்காமல் 60,000 அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2.23 கோடி ரேசன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 லட்சம் பேர் சேர்த்துள்ளோம்.
இதேபோல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே-2021 முதல் தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.
இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக அரசால் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் புதிய ரேசன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. உணவு வழங்கல் துறை புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை. புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.
இதே போல் தனி குடும்ப அட்டைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். பெற்றோருடன் வசித்த குடும்பங்கள் தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எவ்வித பணியும் கடந்த 5 மாதமாக மேற்கொள்ளப்படவில்லை.
சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.
மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆகிய நிலையில் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகளை தொடர முடியாமல் உணவு பொருள் வழங்கல் துறையின் வெப்சைட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு 5 மாதமாக நடைபெறவில்லை. துறையில் உள்ள அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன் கள ஆய்வு பணிகள் தொடங்கும். இணைய தளம் வழியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டு வழங்குவதற்கான ஆய்வு பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
- மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்கலாம்.
- மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்றால் பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது எனக் கூறும்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-
தற்போது நடைபெற்று வரும் செயல்பாட்டின்படி அதிக அளவு ரேசன் பொருட்கள் வழங்குவது தொடரும் என்றால், பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மக்களை திருப்திப்படுத்த மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்கலாம்.
மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டால், பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது. இதனால் நிதி நெருக்கடி உருவாகும் எனத் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.
மேலும், மாநிலங்களில் தொடர்ந்து ரேசன் கார்டுகளை வழங்கினால், அதற்கு மாநிலங்கள் பணம் கொடுக்குமா? என கேள்வி எழுப்பியது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "மத்திய அரசு கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை 80 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2012) கீழ் வழங்குகிறது என்றார்.
எனினும் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் "சுமார் 2 முதல் 3 கோடி மக்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு வெளியில் உள்ளனர்" என்றார்.
- அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.
- புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது.
சென்னை:
தமிழ்நாட்டில் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகும் தம்பதியினர் தனிக் குடித்தனம் சென்றால் பழைய முகவரியில் உள்ள பெயரை நீக்கி சான்றிதழ் வாங்கி அதை இணைத்து விண்ணப்பம் செய்வது நடைமுறை வழக்கமாகும்.
இவற்றை அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.
ஆனால் சில இடங்களில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனியாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்பு இல்லாவிட்டால் அதை அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.
அந்த வகையில் 2.65 லட்சம் பேர் புது கார்டு கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததில் 1.36 லட்சம் கார்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேசன் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்று. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி அரசின் நிதி உதவியை பெறுவதற்கும், வெள்ள நிவாரண உதவியை பெறுவதற்கும் இது முக்கியமாக பயன்படுகிறது.
சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், கூட ரேசன் கார்டு தேவைப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இப்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேசன் கார்டு முக்கியம் என்பதால் அதற்காகவே புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதனால்தான் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று தகுதியானவர்களுக்கு மட்டும் புது கார்டு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அதனால் தான் புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது. இப்போது மீண்டும் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தற்போது 2.25 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து இதுவரை 16.3 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் வருகிற 25-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
- பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.
உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரேசன் கார்டுகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும்.
- போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெரு சேர்ந்த பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றாவிட்டால் ரேசன் கார்டுகள் ஒப்படைக்கப்படும் என ஒப்படைப்பதற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் அரிய கோஷ்டி கிராமத்தில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு பயனாளி தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் தற்போது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற சில பயனாளிகளை நீக்கினர். இதன் காரணமாக பல வீடுகள் நிலுவையில் உள்ள நிலையில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பாக காணப்பட்டது.