என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு போர்டு"

    • வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.

    மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.

    வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.

    இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
    • 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

    இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.

    இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
    • முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.

    சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.

    வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.

    சட்டத்தில் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி.

    உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மூலம் வக்பு உடமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
    • இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

    இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட தரப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் இடைக்கால உத்தரவு .

    வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் "மத்திய அரசு சார்பில் வக்பு திருத்த சட்டத்தின் சில சரத்துகளை பார்த்து உத்தரவு பிறப்பிக்க கூடாது. இடைக்கால தடையும் விதிக்கக் கூடாது. ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். ஒரு வாரத்தில் எதுவும் ஆகிவிடாது" என வாதிட்டார்.

    அதற்கு நீதிபதிகள் "வக்பு வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் விரும்புகிறது. நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவும் இப்போது பிறப்பிக்கவில்லை. புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது." எனத் தெரிவித்தனர்.

    • கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
    • 6 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி வக்பு சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத் திருத்தம் கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, ஓவைசி கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 மாநில அரசுகள் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா போன்ற அமைப்புகளும் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

    இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டுமா அல்லது ஐகோர்ட்டுகளுக்கு அனுப்பலாமா? என்பது குறித்து மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டார்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறியிருப்பது அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவை மீறும் செயல்" என வாதாடினார்.

    அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரை உறுப்பினராக நியமிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக சேர அனுமதிப்பீர்களா" என கேள்வி எழுப்பினார்.

    இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பக் கூடாது என மனுதாரர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். மேலும் புதிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "வக்பு திருத்த மசோதா பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை அளித்தது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது" என்றார்.

    தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை வக்பு என அறிவித்ததும், அதை வக்பு வாரியம் கையகப்படுத்தி வேறு விதமாக அறிவிக்கிறது என்று மேத்தா கூறுகிறார்" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேத்தா, "ஒருவருக்கு வக்பு இருந்தால், அதை அறக்கட்டளையாக மாற்ற முடியும். அதற்கான வழிவகை உள்ளது" என்றார். அப்போது, "கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது" என தலைமை நீதிபதி கூறினார்.

    இறுதியில், 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    முதலாவதாக, எந்த ஒரு சொத்தும் பயனாளரால் அல்லது கோர்ட்டால் வக்பு என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கூடாது.

    இரண்டாவதாக, பிரச்சினைக்குரிய சொத்து தொடர்பான விசாரணையை மாவட்ட கலெக்டர் தொடரலாம். ஆனால் புதிய சட்டத்தில் உள்ள பிரிவு பொருந்தாது.

    மூன்றாவதாக, வக்பு வாரியத்தின் அலுவல் வழி உறுப்பினர் பிற மதத்தவராக இருக்கலாம், ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து, இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கேட்டனர்.

    அப்போது, கூடுதலாக 30 நிமிடம் தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (இன்று) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது 3 முக்கிய அம்சங்கள் மீது நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளது.
    • வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை?

    வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது.

    இந்த வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி.. ஜே.டி.யு. ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

    விசாரணையின்போது, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வக்பு சொத்துக்கள் எவை என மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிப்பது நியாயமானதா?   என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

    மேலும் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இனிமேல் உறுப்பினர்களாக இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா?. இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆகியவற்றில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? இப்படியிருக்க, வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    இந்த வினாக்களுக்கு வெளிப்படையாக பதில் சொல்லுமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கண்டிப்புடன் கேட்டனர். மேலும் இவற்றுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.  

    முன்னதாக மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வக்பு வாரியத்தில் பிற மதத்தினரை உறுப்பினராக சேர்ப்பது நேரடி விவிதிமீறல் என வாதிட்டார். மேலும் "இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்திற்கு பிறகுதான். அதற்கு முன்பாக யாரும் தலையிட முடியாது" என வாதிட்டார்.

    • வக்பு சட்டத்திற்கு எதிராக 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
    • தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

    வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதற்கிடையே வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. ஜே.டி.யு. ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களும் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு இதனை விசாரிக்கிறது

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    லக்னோ:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.

    வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?

    வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வக்பு போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.
    • வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

    யூசுப் பதான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ குடிப்பது போன்ற 3 புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அமைதியான பின்னணியில், டீயை மகிழ்ச்சியாக பருகுவது போன்று அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா வெளியிட்ட செய்தியில், வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாக பார்த்து கொல்லப்பட்டு வருகிறார்கள். யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ பருகி கொண்டிருக்கிறார். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. வங்காளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

    ×