search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர விசாரணை"

    • கடிதத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எழுதியுள்ளார்.
    • 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்(வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    இதுகுறித்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் 3-ந்தேதி உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் தனது தந்தை எழுதி வைத்திருந்ததாக கடிதம் ஒன்றையும் போலீசில் அளித்தார்.

    இந்நிலையில் ஜெயக்குமார் 4-ந்தேதி வீட்டுக்கு பின்னால் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ஜெயக்குமார் உடலில் மின்சார வயர்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரது தலை பகுதியில் தொடங்கி இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வயர் கட்டப்பட்டிருந்தது. வயிற்றின் அடிப்பகுதியில் மரப்பலகை கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்தில் மண்எண்ணை கொட்டிக்கிடந்ததும், காய்ந்த சறுகுகள், காய்ந்த தென்னை மட்டைகள் உள்ளிட்டவை அவரது உடல் மீது கிடந்து தீயில் எரிந்த நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் இருந்து சுமார் 350 அடி தூரத்தில் தான் ஜெயக்குமாரின் தோட்டம் உள்ளது. அங்கு அவர் எரிந்து கிடந்தார். தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் ஜெயக்குமார் 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

    தற்கொலை செய்த பின்னர் ஒருவரது உடல் எரிக்கப்பட்டிருந்தால் அதனால் உண்டாகும் புகை அவரின் உடலிலேயே தேங்கி இருக்கும்.

    ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது நுரையீரல் உள்ளிட்ட எந்த பகுதிகளிலும் புகை எதுவும் தேங்கவில்லை. எனவே இது கொலை சம்பவமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் உடலை தோட்டத்தில் வைத்து எரித்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    அவ்வாறு நடைபெற்று இருந்தால் தோட்டத்தின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அவரது அலறல் சத்தம் கேட்டிருக்கும். மேலும் இரவு நேரத்தில் சம்பவம் நடந்திருப்பதால் தீயின் வெளிச்சம் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் இருக்காது.

    அதேநேரத்தில் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கணேசன் எப்போதும் அங்கு தான் இருப்பார் என்பதால் இது தொடர்பாக அவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் வழங்கப்பட்ட கடிதங்களில் தனக்கு யார் யார் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? தான் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை எழுதி வைத்திருந்தார்.

    அவர் தனது குடும்பத்திற்கு, மருமகனுக்கு என தனித்தனியாக எழுதியிருந்த கடிதங்களை ஆராய்ந்தபோது அவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் அந்த கடிதங்களில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த பணத்தை கேட்கும்போது எதிர்தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அதில் எழுதியுள்ளார்.

    இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே இந்த கோணத்திலும் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.

    இதனையொட்டி அவர் கடிதத்தில் எழுதியிருந்த நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக செல்போனிலும், நேரில் அழைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதலாவதாக இடையன்குடி பஞ்சாயத்து தலைவரும், கால்டுவெல் பள்ளி தாளாளருமான ஜேகர் தனக்கு ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    அவரிடம் பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் கைப்பட எழுரி நடந்த சம்பவங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்று வருகின்றனர்.

    மேலும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஜெயக்குமார் தனசிங் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கடந்த சில நாட்களாகவே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இன்று ஜெயக்குமார் இறப்பின் 3-வது நாள் துக்க நிகழ்ச்சி முடிந்ததும், அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களில் முக்கிய புள்ளி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    எனவே அவரை தேடி பிடிக்க 2 தனிப்படை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 7 தனிப்படையினரையும் ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

    • ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு.
    • காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • திருவண்ணாமலையில் போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு
    • முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என தகவல்

    வேங்கிக்கால்:

    தமிழ்நாட்டில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது.

    இந்த தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த சுமன் என்பவரின் மனைவி லாவண்யா பங்கேற்றார்.

    தேர்வின் போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு சென்று செல்போனை பயன்படுத்தி, அதன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விடைகளை பெற்று விடைத் தாளில் குறிப்பிட முயன்ற முறைகேட்டில் லாவன்யா சிக்கினார்.

    இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யாவிற்கு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட அவரது கணவரான சப்- இன்ஸ்பெக்டர் சுமன், அவலூர்பேட்டையை சேர்ந்த சப் - இன்ஸ்பெக்டர் சிவக்குமார், செங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 29-ந் தேதி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு பல்வேறு கட்டுப்பாடு விதிகளுடன் நடைபெறும். தேர்வு நடைபெறும் வளாகத்திற்கு செல்போன் உள்ளிட்ட பொருட்கள் செல்ல அனுமதி கிடையாது.

    பலத்த சோதனைக்கு பின்னர் தான் தேர்வர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தேர்வு மையத்திற்குள் லாவண்யாவிடம் எவ்வாறு செல்போன் வந்தது என்றும், தேர்வு மைய வளாகத்திற்குள் யார் செல்போனை கொண்டு கழிவறையில் வைத்தது என்பன உள்ளிட்ட கேள்விகள் போலீசார் மற்றும் சக தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

    தேர்வின் போது லாவண்யாவை போலீசார் சோதனை செய்ய முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குறிப்பிட்ட சில போலீசார் அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று வெறையூர் போலீசார் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கைதான அவரது கணவர் சுமன், சிவக்குமார், பிரவீன் குமார் ஆகியோரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    • வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா?

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பயிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடன் அதிகரித்து பிரகாஷ்க்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் (35) இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தீபிகா தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெண் குழந்தைகள் கதறி அழுதபடி தந்தை பிரகாஷிடம் கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கோபிசெட்டிப்பாளை யத்தில் உள்ள ெசாத்தை அடகு வைத்து சீரகாபாடியில் ரூ.7 லட்சத்தில் லட்சுமிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

    நான், சிறையில் இருக்கும்போது அவர், இன்னொரு வாலிபருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனை என்னிடமே கூறினார். சம்பவத்தன்று நள்ளிரவு வெளியே போய் விட்டு லட்சுமி வந்தார். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று கேட்டபோது, தொடர்பு வைத்துள்ள வாலிபரை பார்த்து விட்டு வருவதாக தைரியமாக கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நான் வாங்கிக் கொடுத்த நிலத்தை கொடு என கேட்டபோது, லட்சுமி மறுத்து தப்பி ஓட முயன்றார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொன்றேன் என ரகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

    பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் சரண் அடைந்த இவரது கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசார் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி, 2 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அம்லா அட்வின், இன்ஸ்ெபக்டர் அம்சவல்லி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, வேறு கொள்ளை, கொலை உள்ளிட்ட ஏதாவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.
    • வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அக்னி திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.இந்நிலையில் கோவில் நிகழ்ச்சிக்காக அப் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இப்பொழு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக பேனர் வைப்பதற்காக ஒருவர் பேனரை கழற்சி அதே பகுதியில் நடுத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணனிடம் (19,) கொடுத்துள்ளார். அதை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் பேனரை ஏன் கிழித்து இங்கு வைத்துள்ளாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.

    இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு ள்ளார். இந்த தாக்குதல் குறித்து ராமநத்தம் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தில் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்
    • 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுப்பிடித்து அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்ணன், ஏ.எஸ்.பி. பாஸ்கரன். ஆகியோரின் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அல்லேரி, அத்திமரத்துக்கொல்லை, பலாமரத்தூர், நெல்லிமரத்துக்கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 1000 லிட்டர் சாராயம் கண்டுப்பிடித்து அழித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த விஜய்குமார் (வயது 34) மற்றும் விஜயகாந்த் (வயது 22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மலைப்பகுதியில் சாராயம் யார் காய்ச்சுவது என்பதை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.
    • மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபு ரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புளியம்பட்டி அடுத்த காரப்பாடியில் இருந்து பு.புளியம்பட்டி ரோட்டில் வந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது திடீ ரென அவரது ஸ்கூட்டர் பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து ஸ்கூட்டரை மீண்டும் இயக்க முயன்றார். ஆனால் இயக்க முடியவில்லை.

    அப்போது ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோல் வாடை வீசியது. இதையடுத்து பெட்ரோல் டேங்கில் இருந்து புகை வந்தது. இதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் ஸ்கூட்ட ரை விட்டு விட்டு ஓடி உயிர் தப்பினார். ஸ்கூட்டர் முழு வதும் எரிந்து சேதமடைந்தது. இதைக் கண்டு அந்த வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஸ்கூட்டர் எப்படி தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விசாரணையில் பூபதி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.
    • கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பெரிய சென்ட்ராயன் பாளையம் கிராமம் செங்கரடு வன மாளிகை என்ற பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார்.

    தப்பியோட முயன்ற அந்த நபரை பங்களாப்புதூர் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பூபதி (23) என்பது தெரியவந்தது.

    போலீசாரின் விசாரணையில் பூபதியின் விவசாய பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வன விலங்குகளை வேட்டை யாட உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரி யவந்தது.

    இதனையடுத்து பூபதி வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.

    அதேபோன்று டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கொளுஞ்சி காடு தோட்டம் பொன்னம்பலம் என்பவரது கோழிப்பண்ணையில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் பொன்னம்பலம் (44) என்பவரது கோழிப்பண்ணைக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் பொன்னம்பலம் கோழிப்பண்ணையில் உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை பங்களாப்புதூர் போலீசார் கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொங்கர்பாளையத்தை சேர்ந்த கூணன் என்பவரது மகன் கருப்புசாமி (26) அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகன் பெரியசாமி (21) ஆகியோர் வன விலங்குகளை வேட்டையாடிவிட்டு துப்பாக்கியை பொன்னம்பலம் கோழிப்ப ண்ணையில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.

    அதனையடுத்து 3 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் பொன்னம்ப லத்தை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பில் தப்பியோடிய கொங்கர்பா ளையம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக கைதான 2 பேரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத இதுபோன்ற சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்து கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் பட்சத்தில் இது போன்ற கள்ளத்தனமாக துப்பாக்கிகள் எங்கே தயாராகிறது? யாரிடம்? இருந்து வாங்குகிறார்கள், என்ன விலை? கொடுத்து வாங்குகிறார்கள் என்று இது போன்ற குற்றங்களை தடுக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் என்ன? நடவடிக்கை எடுத்துள்ளனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    • கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
    • இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அங்குள்ள மயான புறம்போக்கு இடத்தில் நேற்று மதியம் பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும் போது மனித உடலின் கை தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அங்கிருந்த அதிகாரியிடம் இது குறித்து கூறினர். அவர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடலை கண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கொடுத்தார்.

    இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாலவனூர் கிராமத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா கூறுகையில், இளம்பெண்ணை யாராவது கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 25 முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த விபரங்களை மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து பெறும் பணி நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நடந்துள்ளதா? எப்போது இந்த சம்பவம் நடந்தது என்பன போன்ற விபரங்கள் தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    • மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். மணி (25), இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் மகன் மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீர்த்தனா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் கீழீருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கீர்த்தனா (வயது 19), இவர் கடலூர் கே.என்.சி. பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கீர்த்தனாவின் தாயார் தேவி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×