என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் கடத்தல்"

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
    • அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜோதவாலா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது, இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோனை கைப்பற்றினர். அந்த டிரோனில் 2 பாக்கெட்டுகளில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. சரியான நேரத்தில் ட்ரோனை கைப்பற்றியதால் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் கடத்தல் கும்பல்களால் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் வீசப்பட்டுள்ளதா என எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் உள்ளவர்கள் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு வழித்தடமாக மாற்றியதால், போதைப்பொருள் சப்ளை செய்யும் இடத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கவுகாத்தி:

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள் இருந்தது.

    அதில் 700 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் போதைப்பொருளை குவஹாத்தியில் இருந்து துப்ரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி 2.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார்.
    • யாசர் நசீர் கைது செய்யப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த நபர், எல்லை கட்டுப்பாட்டு கோடு நோக்கி ஓடத்தொடங்கினர். அவரை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

    அவர் பெயர் யாசர் நசீர் என்றும், உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார். கடத்துவதற்காக அவர் வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. யாசர் நசீர் கைது செய்யப்பட்டார். குண்டடிபட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    "என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.

    தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

    இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.

    இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
    • செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.

    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.

    இதற்கு காரணம், இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதால் தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார். அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவர் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜாபர் சாதிக் சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார்.
    • 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். அவர்கள் மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். கடந்த 15-ந்தேதி நடந்த இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப் பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார். பிரபல அசைவ ஓட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் நடத்தி வருகிறார். அதன்பிறகு சினிமா தயாரிப்பாளராக மாறிய இவர் மங்கை என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

    தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு தமிழ் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர். அரசியல் களத்திலும் அவர் பிரபலமாக நபராக இருந்து வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பல படங்களை தயாரித்து வந்துள்ளார். கைதான 3 பேரிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த பிரிவானது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் போதைப்பொருளை தடுத்து வருகிறார்கள்.

    டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகத்தை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

    மேலும் அவர் சென்னையில் உள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாமா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரது செல்போன் எண் மூலமாக அவர் யார் யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் துப்பு துலக்குகிறார்கள். மேலும் அவர் நீண்ட நேரமாக யாருடன் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி வருகிறார்கள். சர்வதேச அழைப்பில் யாரிடமாவது பேசியுள்ளாரா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    போதைப்பொருள் கடத்தலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடையும் பட்சத்தில் ஜாபர் சாதிக் உள்பட அவரது கூட்டாளிகள் மேலும் பலர் டெல்லி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
    • ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

    உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

    நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

    மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார்.
    • புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் குடோன் அது என்பது தெரிய வந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் பிடிபட்டது. மெத்தாம் பெட்டமைன் போதைப் பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான் விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. டெல்லி குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.

    இந்த போதைப் பொருட்களை கடத்துவற்கு ஜாபர் சாதிக்குக்கு முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் உணவுப் பொருட்கள் என்று கூறி போதைப் பொருட்களை அனுப்பி வைத்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 3ஆண்டுகளில் ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போலீசார் சம்மனை ஒட்டினார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் தனது சகோதாரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோருடன் சாந்தோமில் 3 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில்தான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மனை ஒட்டி இருந்தனர்.

    அதில் கடந்த 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜாபர் சாதிக் ஆஜராகவில்லை. இந்த நிலையில் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்த னர்.

    பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை.

    அவரை கைது செய்வதற்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் செல்போன் எண்ணை வைத்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது.
    • போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்திய கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடல் வழியே கப்பல் மற்றும் படகுகளில் கடத்தப்படும் போதைப்பொருட்களை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் புகுந்துள்ள கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த தகவலை கசிய விட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் குஜராத் கடல் பகுதியில் வைத்து போதைப்பொருள் பண்டல்களை கைமாற்றி விட திட்டமிட்டிருப்பதையும் அதிகாரிகள் ரகசியமாக கண்டுபிடித்தனர்.

    இதை தொடர்ந்து என்.சி.பி. என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்திய கடற்படையில் உள்ள உணவு மற்றும் சுங்கப் பிரிவு, குஜராத் போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து போதைப்பொருள் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள். ஆபரேஷன் சாகர் மந்தன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின்போது ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருட்களை கடத்தி வந்த கப்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கப்பலில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தி எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதைப்பொருட்களை மொத்தமாக பறிமுதல் செய்தனர். 3,300 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு பல ஆயிரம் கோடிகளாகும்.

    போதைப்பொருட்கள் கப்பலில் இருந்தன. 3,100 கிலோ எடை கொண்ட சரஸ் ஹஷீஸ் என்கிற போதைப்பொருள், 158.3 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன், 26.6 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டன. இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து செயற்கைகோள் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 4 செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். பிடிபட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது. அப்போதே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதனை மோப்பம் பிடித்து விட்டனர். இதை தொடர்ந்தே கப்பலின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட 5 பேரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நடுக்கடலில் வைத்தே மீன் பிடி படகுகளில் போதைப்பொருட்களை கைமாற்றி விடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இப்படி ஈரான் கப்பலில் பிடிபட்ட 3,300 கிலோ போதைப்பொருட்களையும் தமிழகத்துக்கு முக்கிய புள்ளி ஒருவருக்கு அனுப்பி வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மீன்பிடிபடகு மூலமாக இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளனர். அதற்குள் போதைப்பொருள்கள் அத்தனையும் மொத்தமாக பிடிபட்டு விட்டது.

    இருப்பினும் இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது? இந்த போதைப்பொருட்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்திய பிறகு 3,300 கிலோ எடை கொண்ட இந்த ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களும் தமிழகத்துக்கு யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது அம்பலமாகும் என தெரிகிறது.

    போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஈராக்கை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

    இதன் பின்னணி பற்றியும் விசாரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக கடத்தல் கும்பலை பிடிக்கவும் வலை விரித்துள்ளனர். 

    • சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
    • ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார்.

    சென்னை:

    டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.

    இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாபர் சாதிக் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

    இப்படி சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

    இதையடுத்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வந்திருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர். அதில் கடந்த 26-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் ஜாபர் சாதிக் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை. தலைமறைவாக உள்ள ஜாபர்சாதிக்கை கைது செய்ய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது பற்றிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார். இதை நம்பியே அவருடன் பலர் நெருக்கம் காட்டி உள்ளனர். ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானம் வருவதாகவும் அதை வைத்தே சினிமா படம் எடுப்பதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டே கோடிகளில் புரண்டிருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதனால் அவரோடு நெருங்கி பழகி வந்த அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

    டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக பிரிவை சேர்ந்த அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாபர் சாதிக்கின் முழு பின்னணியையும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றிய விவாதங்கள் தெரிய வந்ததும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    ×