search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணை"

    • வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என அதிகாரிகள் கூறினர்.
    • அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா செயல்படுகிறது.

    சியோல்:

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேன்ஜில் இன்று காலை 7.10 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    'புஷ்பக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • கடந்த நான்கு நாட்களில் உக்ரைனை தலைநகரை நோக்கி ரஷியா ஏவுகணை தாக்குதல்.
    • ரஷியா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு.

    உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு அதிகப்படியாக சேதம் ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மூன்று மிகப்பெரிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் உக்ரைன தலைநகர் கீவ் நகரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    இரு நாடுகளுக்கும் மிக அருகில் உள்ளது போலந்து. உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து நாட்டின் வான்வழியில் நுழைந்ததாக போலந்து குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், எஃப்16 போர் விமானத்தை செயல்படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டை தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளது.

    • இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
    • அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

    மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.

    • கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும்.
    • தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது.

    நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.

    கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெயில் படுவதால்தான் உருவாகிறது. சூடான எண்ணெயில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வரும் அல்லவா, அதுபோலத்தான்.

    ஆனால், எல்லா கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லை. ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாக பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்து விடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது.

    எனவே, எந்த கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா? என்பது முடிவாகிறது.

    கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறும் நீராவியால் தனக்கு கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை மிக மிக குறைவானதுதான்.

    சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது.

    ஆக, சூடான எண்ணெயில் பட்டதும் வெடித்துப் பறக்கும் கடுகும், ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். இதுதான் கடுகுக்குள் உள்ளே இருக்கும் ரகசியம். இன்னும் சொல்வதென்றால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், என்று கடுகை நினைத்து பெருமிதமும் கொள்ளலாம்.

    • சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் ‘சர்மட்’ கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது.
    • குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்' கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

    இந்நிலையில் சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தி உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்தது. இது தொடர்பாக விண்வெளி நிறுவன பொது இயக்குனர் யூரி போரிசோவ் கூறும்போது, சர்மட் ஏவுகணைகள் தனது பணியை செய்வதற்கான கடமையில் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன சர்மட் ஏவுகணைகள் ராணுவ படையில் இணைக்கப்பட்டு உள்ளது. அவை பன்டுத்துவதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்றார். இது ஆர்.36 ஏவுகணைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சர்மட் ஏவுகணை முதன் முதலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. சுமார் 116 அடி நீளமும், 220 டன் எடையும் கொண்டதாகும். ஒரு ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகங்கள் கூறும்போது, சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கை அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும், ரஷியா தனது அணுசக்தி தாக்குதல் விருப்பம் இன்னும் மேஜையில் உள்ளது என்ற செய்தியை அனுப்புகிறது என்று தெரிவித்தது.

    ஏற்கனவே சர்மட் ஏவுகணை குறித்து ரஷியா அதிபர் புதின் கூறும்போது, இந்த ஏவுகணைகள், ரஷியாவுடன் போரில் ஈடுபடும் முன் உலகையும் எதிரிகளையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சர்மட் ஏவுகணை அதிபயங்கரமானவை என்று கருதப்படுகிறது.

    தற்போது சர்மட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா-தென்கொரியாவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா சோதனையை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்தது.

    இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் கூட்டு படைத்தலைவர்கள், இன்று காலை வடகொரியா தனது ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தினர்.

    ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, வடகொரியா ஏவுகணையை ஏவியதை கண்டறிந்து உள்ளதாக தெரிவித்தது.

    கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது வான் வெளியில் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா வான்வெளியில் நுழையும் அமெரிக்கா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் தான் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

    • இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
    • பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.

    ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார்.

    அப்போது அவர் பிரிட்டனில் "புயல் நிழல்" (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் "ஸ்கால்ப்-ஈஜி" (SCALP-EG) என்றும் அழைக்கப்படும் தொலைதூர வழிகாட்டி ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக அறிவித்தார்.

    உக்ரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர்தாக்குதலின் போது ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் என கூறினார்.

    இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த மேற்கத்திய ஆயுதங்களிலுமே இதுதான் மிக தொலைவு சென்று தாக்கப்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டன், கடந்த மே மாதம் மேம்பட்ட திறன் கொண்ட ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த ரஷியா "பிரிட்டன் நேரடியாக மோதலுக்கு இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது" என எச்சரித்தது. சில மேற்கத்திய நட்பு நாடுகள் கூட உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் சென்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தது.

    தற்போது பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.

    பிரான்ஸின் வசம் இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 400 உள்ளது. ஆனால், எத்தனை ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று மேக்ரான் கூறவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
    • தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.

    வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, 'வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது' என்று தெரிவித்தது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, 'ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்' என்றார்.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.

    • ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது.
    • வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் இல்லை.

    • ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.
    • கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே கார்கீவ் பிராந்தியததில் ரஷிய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் ராணுவம் முயன்ற போது ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ரஷியா ராணுவம் கூறும்போது, குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.

    2019-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.

    பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இந்த நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தி உள்ளார்.

    ×