search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக இளைஞரணி மாநாடு"

    • போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
    • சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.

    நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

    மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

    வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.

    கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?

    பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.

    5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.

    • சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
    • பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்!

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

    மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்! என கூறியுள்ளார்.

    இப்பதிவுடன் 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் இணைத்துள்ளார்.

    • மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
    • பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

    கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதிக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருக்கும், சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது.

    மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி.க்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' அமைந்திருந்தது.

    உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி - சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான கவர்னர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.

    மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். பாராளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    • வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

    வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

    ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

    இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

    விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

    தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
    • இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நிர்வாகிகள் செங்கோல் வழங்கினர்.

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

    மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தார். அப்போது, மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி செங்கோலை வழங்கினார். 

    பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் கே.என். நேரு, வாள், கேடயமும் வழங்கினார்.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    "இன்று சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    சேலம்:

    சேலம் தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    1. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அனுமதி தந்த தி.மு.க. தலைவருக்கு நன்றி.

    2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்.

    3. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பெண்களுக்கு இலவச பயண திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் சேமிப்பை உயர்த்தி இருப்பதற்கு மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

    4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் தலா 1000 ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப பெண்களின் உரிமைக்கான மதிப்பை மேம்படுத்திய முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    5. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். மாணவர்களின் உடல் நலனை காத்து ஊக்கம் அளிக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    6. நான் முதல்வன் திட்டங்கள் மூலம் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதம் தலா ரூ.1000 பெறுகிறார்கள். இப்படி நாளைய தலைமுறையை வளர்த்து எடுக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    7. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலன் பெற்றுள்ளனர். 2 லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    8. நிதி நெருக்கடியான நேரத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட 2 கோடியே 19 லட் சத்து 71 ஆயிரம் 113 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சரை மாநாடு பாராட்டுகிறது.

    9. வரலாறு காணாத மழையிலும் மக்கள் துயர் துடைக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கியதற்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    10. முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றும் வகையில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என கலைஞர் புகழ் போற்றும் அமைப்புகள் மூலம் அவர் வழிநடப்போம்.

    11. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் தமிழகத்தில் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்த முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    12. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற இளைஞர் அணி தொடர்ந்து முன்னெடுக்கும்.

    13. தமிழகத்தில் உயிர்பலி வாங்கிய நீட் நுழைவு தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.

    14. தமிழகத்தின் கல்வி கட்டமைப்பு சிறந்து விளங்குகிறது. அதை சிதைக்கும் வகையில் இந்தி, சமஸ்கிருதம் திணித்து குல கல்வி முறையை கொண்டு வர நடக்கும் முயற்சியை இளைஞர் அணி எதிர்க்கிறது. தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும்.

    15. நீட் தேர்வு, முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி ஆதிக்கம் செய்யப்படுகிறது. எனவே மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    16. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிக்கிறது.

    17. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான கவர்னர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் மத்திய அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கவர்னர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்த திட்டமிடும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.

    மேலும் கவர்னர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

    18. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    19. மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதற்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    20. கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க மாநாடு கேட்டுக் கொள்கிறது.

    21. அமலாக்கத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    22. பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழிக்க மாநாடு உறுதி ஏற்கிறது.

    23. பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இதை மறைத்து ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கலாம் என்று நினைக்கும் பாரதிய ஜனதாதான் இந்துக்களின் உண்மையான எதிரி என்பதை இந்த மாநாடு மூலம் அம்பலப்படுத்துவோம்.

    24. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    25. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி காட்டும் என இளைஞர் அணி சூளுரைக்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வெள்ளை நிற இளைஞர் அணியின் டி-சர்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவரை பார்த்ததும் கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள், இளம் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் மாநாடு திடலுக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பட்டன. திராவிட நாயகன், கழக தலைவர், அண்ணன் தளபதி என்ற கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையில் அனைத்து துணை செயலாளர்களும் பங்கேற்றனர்.

    மாநாட்டுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள், மற்ற தொண்டர்கள் தூரத்தில் நின்றபடி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வெல்லட்டும் வெல்லட்டும் தி.மு.க. வெல்லட்டும், வாழ்க வாழ்கவே தளபதி வாழ்கவே என வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். வாழ்த்து கோஷங்கள் விண்ணை பிளந்தது.

    இதையடுத்து தி.மு.க. கொடி கம்பம் அருகில் முன்னாள் நிறுவப்பட்டிருந்த தலைவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

    மாநாட்டையொட்டி திடல் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். மாநாட்டில் கடைகள் போடப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் விற்பனையானது. சேலம் மாநகரில் இருந்து மாநாட்டு திடல் வரையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். வாழ்த்து பேனரில் தளபதி, சின்னவர், மாமன்னன், இளம் தலைவர் வருக... வருக... என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாநாட்டில் பெத்தநாயக்கன்பாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டு, கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.

    • பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.

    1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.

    மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.

    இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.

    இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.

    • இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
    • இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    இளைஞரணியின் எழுச்சி மிகுந்த 2-வது மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. சேலத்திற்கு வர நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?...

    இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.

    இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.

    எனது உடன்பிறப்புகளே!

    கழக உடன்பிறப்புகளே!

    கலைஞரின் உடன்பிறப்புகள்!

    சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்! என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    • சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
    • பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

    21-ந் தேதி அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி. தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாநாட்டு முகப்பு பகுதியில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்று பேசுகிறார். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

    அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவர் உரையை நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, பொது செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பேசுகிறார்கள். இறுதியாக 7.30 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் நிறைவு பேருரை மற்றும் சிறப்புரை ஆற்றுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவு பகுதியில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது. பந்தல் அலங்காரமும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்டமான புல்லட் பேரணி 20-ந் தேதி மாலையில் நடைபெறுகிறது. மாநாட்டு திடலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புறப்படும் இந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

    அப்போது டிரோன்கள் மூலமாக மாநாட்டு விளக்க காட்சியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 20-ந் தேதி பிற்பகலில் சேலம் வருகிறார்கள். ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொண்டலாம்பட்டியில் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோன்று மேட்டு பட்டியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல் வரையில் 20 அடி தூரத்துக்கு ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வழிநெடுக தி.மு.க. கொடிகளும் பறக்க விடப்பட்டு உள்ளன.

    மாநில உரிமை மீட்பு முழக்கம் என்கிற பெயரில் நடத்தப்படும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவர்கள் நாளை மறுநாள் 20-ந் தேதி அன்றே சேலத்தில் குவிய உள்ளனர். இப்படி வெளியூர்களில் இருந்து வரும் தி.மு.க. தொண்டர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.

    மாநாட்டில் மொழி போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா, தனுஷ் ஆகியோரது பெயர்களில் தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    முடிவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி தி.மு.க.வினர் சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பு பேனர்களை வைத்து, தி.மு.க. கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர். இதனால் சேலம் தி.மு.க. மாநாடு 2 நாட்களுக்கு முன்பே களை கட்டி உள்ளது.

    மாநாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி. பவா னீஸ்வரி, சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோரின் மேற்பார்வையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே!
    • கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லாருக்கும் எல்லாம்' என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி - சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அவற்றைத் தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு. தரமாகவும் அழகாகவும் வேட்டி - சேலைகள் இருப்பதைப் பொங்கல் நாளில் அதனை உடுத்தியிருந்தது தொடர்பான பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் கண்டேன்; நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று!

    அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா. அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை - சாதிய வன்மத்தை - மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'சமத்துவப் பொங்கல்' விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

    உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. தலைநகரான சென்னை மாநகரம் தொடங்கி, ஊராட்சிகள் வரை சமத்துவப் பொங்கலின் மணம் வீசியது. இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.


    கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே! 1980-ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது.

    கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

    பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

    கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

    சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிச்சாங் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் - மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு - பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.


    இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.

    இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972-ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி - ஓடி, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.

    நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.

    மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.

    தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×