search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவைத் தீ விபத்து"

    • உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
    • கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

    இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


    இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.


    குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப்பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    • ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தென்னவனூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் ராமு (வயது 60). இவர் தற்போது அடுத்த பட்டணம்காத்தான் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி குருவம்மாள் என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார்.

    ராமு முதலில் உள்ளூரில் வேலை பார்த்தார். ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கவும், மகளை திருமணம் செய்து கொடுக்கவும், குடும்பம் நடத்தவும் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் ராமு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்தான் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் மூச்சுத்திணறலில் ராமு உள்பட 7 தமிழர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை கேரளா முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

    அங்கு தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடியிருந்த மனைவி மற்றும் உறவினர்கள் ராமு உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராமு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ராமுவின் குடும்பத்தாரிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.

    • நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செஞ்சி:

    குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.

    அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.

    முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்ததும் அவர்களது மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனைத் தொடர்ந்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த்துறையினர் முகமது ஷெரிப் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை அவருடைய மத வழக்கப்படி முகமது முகமது ஷெரீப் உடல் உறவினர்கள் முன்னிலையில் செஞ்சியில் உள்ள பத்ஹா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்தனர்.

    அதுபோல் சின்னதுரை உடலுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வட்டாட்சியர் சிவக்குமார், எம்.ஆர்.கே. கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் மற்றும் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், கேபிள் எழில் சிவா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சின்னத்துரை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    குவைத் நாட்டின் மங்காப் நகரில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் 45 பேர் இந்தியர்கள். இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் மற்றும் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.

    அதன்பிறகு தனித்தனி வாகனங்கள் மூலம் அனைத்து உடல்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ்கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானதால் ஒட்டு மொத்த கேரளமும் சோகத்தில் ஆழந்து உள்ளது.

    பலியானவர்களின் உடல்கள் வீடுகளுக்கு வந்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பலியானவர்கள் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்றவர்கள் தன்னுயிர் நீத்திருப்பதை கூறி அவர்கள் கதறி அழுதது பரிதாபமான சூழலை ஏற்படுத்தியது. நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் 12 பேரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், இன்று 11 பேரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.

    இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

    விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள் உடல்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக பாஜக சார்பில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் இசையமைப்பாளர் தீனா தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
    • குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருச்சி:

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜு எபினேசர் (வயது 54) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர் அங்குள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் ட்ரெய்லர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

    இவர் அந்த நிறுவனம் வழங்கிய தங்குமிட தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது தீ விபத்தில் சிக்கியுள்ளார். அவர் இறந்ததாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வந்த முரண்பட்ட தகவல்களால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.

    தனது தந்தையின் நிலை அறிய வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அவரது மகன் குணசீலன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக தந்தையிடம் பேசினேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.

    ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்கிடையே அப்பா பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தூதரக அதிகாரி இதை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே கலெக்டரிடம் மனு அளித்து சென்ற பின்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து தமிழக அரசின் அயலக தமிழர்கள் நல வாழ்வு துறை அதிகாரி ஒருவர் குணசீலனை தொடர்பு கொண்டு அவரது தந்தை எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.

    அப்போது தந்தையின் உடலை விமான மூலம் கொச்சிக்கு கொண்டு வந்து பின்னர் திருச்சிக்கு கொண்டு வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ராஜூ எபினேசரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    எபினேசரின் மனைவி ராஜேஸ்வரி கூறும்போது, கடந்த 11-ந் தேதி மாலை கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசா முடிவதால் அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.

    குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேர் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிறகு, தமிழர்களின் உடல்கள் தனி வாகனம் மூலம் கொண்டுவரப்படுகிறது.

    • விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
    • அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இந்தியர்களின் சடலங்களை கொண்டு வந்த விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட இருக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்தியர்களின் உடல்களை எடுத்துவரும் விமானம் கேரளா வந்தடையும் முன்பே கொச்சி விரைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும், கொச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களின் சடலங்கள் தனி வாகனங்கள் மூலம் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793; அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901.

    இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
    • உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
    • உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தனது எக்ஸ் தள பதிவில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை அவர்தம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் துரிதமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


    • இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை.

    அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப், ஃபாஹில், அபுகலிஃபா, மெஹபுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கரும்புகைகளுக்கு நடுவே டார்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

    ×