என் மலர்
நீங்கள் தேடியது "Heavy Rain"
- வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்.
- சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர்.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
நேற்றும் இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து.
அரசு பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) இல்லாத பிற நாட்களில் 800 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக சென்னையில் இருந்து 800 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும்.
ஆனால் பயணிகள் இல்லாததால் 350 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். அதே போல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு நேற்று குறைந்த அளவில்தான் ஆம்னி பஸ்கள் வந்தன.
வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். நேற்று 200 பஸ்கள் மட்டுமே வந்தன.
சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர். பலர் முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.
- செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது
- தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10.30 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. சேலம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை விடிய, விடிய அகற்றினர்.
சேலம் மாநகராட்சி 26-வது வார்டு குப்தா நகர் 6 முதல் 9 குறுக்கு தெரு முழுவதும், சினிமா நகர், சின்னேரிவயக்காடு ஓடைஓரம் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதே போல் சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கபிலர் தெரு, பாரதிதாசன் தெரு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு நகரவை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கொண்டு வந்தனர்.
தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது. இதையடுத்து அல்லிக்குட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், மன்னார்பாளையம் போயர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை வேறு வழியில் திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தி அல்லிக்குட்டை பகுதியில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உடனடியாக வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
- அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது.
- நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
வருகிற 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 44.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இயல்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் தற்போதே இயல்பான மழை அளவு பெய்து விட்டது.
இனி வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடிய மழை இயல்புக்கு அதிகமான மழையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஃபெஞ்சல் புயலுடன் சேர்த்து இதுவரை 3 கால கட்டங்களில் மழை பெய்திருக்கிறது. ஃபெஞ்சல் புயலால் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்த சூழலில் வருகிற 10-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.
டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் மழை பொழிவு குறைந்து விடும். ஆனால் இப்போது மழை பொழிவு ஏன் தீவிரமடைகிறது? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது. நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகவே டிசம்பர் மாதத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பொழிவை கொடுத்து வருகின்றன.
சுமத்ரா தீவு அருகே தற்போது காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் பயணிக்கும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் கடற்கரைக்கு அருகே செல்லும் போது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் 4-ம் கட்ட வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 11-ந்தேதி இரவு தொடங்கும் மழை 15-ந்தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு இருக்கும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயல் மழையால் நீர் நிலைகளில் 45 சதவீதமாக இருந்த தண்ணீர் அளவு 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
எனவே வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இதன்பிறகு 5-ம் கட்ட வடகிழக்கு பருவமழை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதிக்குள் பெய்வதற்கான சூழலும் உள்ளது. 18-ந்தேதிக்கு பிறகு உருவாக உள்ள தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் உள்ளது.
எனவே அடுத்து வரும் நாட்களில் ஏற்கனவே நிரம்பியுள்ள நீர் நிலைகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வறு அவர் கூறினார்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டி நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (புதன்கிழமை) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். நாளை தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை), திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் நாளை (11-ந்தேதி) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (புதன்கிழமை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14-ந்தேதி (சனிக்கிழமை) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (11-ந்தேதி), நாளை மறுநாள் (12-ந்தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் பட்சத்தில் நாளை (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரங்கம்பாடி-அதிராம்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதே சமயத்தில் நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை கடந்த பிறகு அது அரபிக்கடல் சென்றடையும்.
அதே சமயம் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து, கரையையொட்டிய படி கடலிலே நகர்ந்து குமரிக் கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழையால் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
- வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது .
அரூர்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக பகுதியில் உள்ள வரட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று காலை அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தில் சாமநத்தம் ரங்கசாமி தோட்டத்தின் அருகே செல்லும் வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது . இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
- மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.
பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
- சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
- பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனுடன் கடும் பனிப்பொழிவும் நீடித்தது.
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளது .
தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, 8 ம் நம்பர் கரம்பை, பூதலூர், ஆலக்குடி, கல்வராயன்பேட்டை , சித்திரக்குடி, சீராளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்ய வேண்டிய சம்பா பயிர்கள் அதிகளவில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மழை நீடித்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மகசூலும் குறையும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை கூட நெல் கிடைக்காது. எனவே பாதிப்பு பயிர்களை கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
- பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.
குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.