search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96791"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
    • பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

    தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.

    உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

    பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம் ஆகும்.
    • வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம் ஆகும். யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

    அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    2021-2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்து உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது.

    நம்முடைய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023-ம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது.

    அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம்.

    தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது.

    71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்க ளில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடையப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவு களில் பயிற்சி பெறுவோ ருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலு எம்.பி., கூடுதல் தலைமைச் செயலா ளர் முகமது நஜிமுதின், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.

    அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.

    சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

    ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.

    சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • கருணாநிதி நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
    • முகப்பில் பேனா வடிவிலான தூண் வைக்கப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

    கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்களும்-வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப்படங்களுடன் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் பேனா வடிவிலான தூணும் வைக்கப்படுகிறது.

    இந்த கட்டுமான பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை இன்னும் 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வடசென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம்.

    ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

    தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டும்.
    • நல்லூர் பகுதி கழக செயலாளர் தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி கழகம் சார்பில் 8 இடங்களில் தெருமுனை கூட்டம் நல்லூர் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இக்கூத்ததில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதில் நல்லூர் பகுதி 56-வது வார்டு இராஜீவ்காந்தி நகரில் 8-ந்தேதிகரூர் முரளி, 09-ந்தேதி 48-வது வார்டு நல்லூர் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் பவானி கண்ணன், 10ந்தேதி 47-வது வார்டு முதலிபாலையம் பிரிவு கந்திலி கரிகாலன், 11ந்தேதி அன்று 46-வது வார்டு காசிபாளையம் மற்றும் மணியகாரம்பாளையம் ஈரோடு இளையகோபால், 12ந்தேதி அன்று 49-வது வார்டு வள்ளியம்மை நகர், சுப்பிரமணிய நகர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    அதுசமயம் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டுமெனவும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
    • பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் கடந்த 3-ந் தேதி சென்னையில் கொண்டாட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்து காரணமாக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த பொதுக் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    அதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் என்பதால் மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பெரிய பெரிய வரவேற்பு வளைவுகள், வாழை மர தோரணங்கள், வழி நெடுக கட்சிக் கொடி என பெரம்பூர் பின்னிமில் பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது.

    மேடை அமைப்பும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை குறிக்கும் வகையில் அவரது பிரமாண்ட கட்அவுட்களும் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ளது. மின்னொளி அலங்காரமும் பெரிய அளவில் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுக் கூட்டத்தை பொது மக்கள் அமர்ந்து பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சேர்களும் மைதானத்தில் போடப்பட்டுள்ளது.

    இந்த பொதுக் கூட்டத்தை காண்பதற்கு சென்னை காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வர இருப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் சட்ட விரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    நாட்டின் நலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 34 வகையான போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத் தலைநகரங்களில் புகைப்பட கண்காட்சி உட்பட 34 வகையான தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, தயாநிதி மாறன், அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 34 வகையான போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வினாடி-வினா, கவியரங்கம், கட்டுரை, தொடர் ஓட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்பித்தல், தொழிற்சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள், சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள், ஆங்கில கருத்தரங்குகள், கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாவட்ட அளவில் கருத்தரங்குகள், கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்குகள், மாவட்டத் தலைநகரங்களில் புகைப்பட கண்காட்சி உட்பட 34 வகையான தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
    • கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

    அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி தி.மு.க. நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்க ராயன்பேட்டை கிளையின் தி.மு.க. செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி தி.மு.க. நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2 வருடங்களாக இவர்கள் கைது செய்யப்படாததை மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்துக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் நாளை (ஜூன் 7-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது.
    • பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது, அதையும் உரிய நேரத்தில் கொடுக்காதது, கூடுதல் பளுவினை அவர்களுக்கு அளிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் தற்போது வந்துள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
    • கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.

    ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.

    தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

    எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.

    தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.

    கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

    அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.

    இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

    ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    ×