என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "street walk"

    • இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் இன்று 4-வது நாளான இன்று காலை நாக வாகனத்தில் அண்ணாமலையார் மாடவீதியில் உலா வந்தார்.

    இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.

    நேற்று 3-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரத்தில் வீதி உலா வந்த சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இன்று (16-ந் தேதி) அஷ்டமி பூப்பிரத ஷணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடந்தன. 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பள்ளி, கால சாந்தி பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின் பக்தர்களுக்கு படியளக்கும் நிகர்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு ராமநாதசாமி பிரியாவிடையுடனும், பர்வதவர்த்தினி அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அஷ்டமி வீதி உலாவை முன்னிட்டு கோவிலில் இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை சாத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.

    காலையில் நடை சாத்தப்பட்டிருந்ததால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் ரத வீதி, அக்னிதீர்த்த கடற்கரையில் காத்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது.
    • கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தானத்தில் சத்யகிரீஸ்வரர் அருள் பாலிகிறார். இதேபோல கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நிறைவு நாளான இன்று காலையில் மூலவர் நடராஜருக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படி ஆனது.

    தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூச்சப்பரத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கிய வீதிகள் கிரிவலப் பாதையை வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • திருவாதவூரில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மையாருடன் மாணிக்கவாசகர் தரிசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை மாணிக்கவாசகர் சட்டத்தேரில் வீதி உலா வந்தார்.

    • தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், வீதியுலாவும் நடைபெற்றது.
    • பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தியும் கோவிலை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

    நேற்று மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கோவில் குளத்திலிருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

    கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்துகொன்டனர்.

    தீமிதி விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    • பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நா யகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.

    நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சுவாமிகள் தனி தனி சன்னதில் அருள் பாலிக்கின்றனர்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடை பெற்றது.

    கார்த்திகை மண்டபத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாராதனை உடன் வீதியுலா துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

    முன்னதாக திரளான பக்தர்கள் கும்மியடித்து விழாவை கொண்டாடினர்.

    வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள், பக்தர்கள், குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

    • பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

    • திருவரங்குளத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதக்கோட்டை திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிம்ம வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார். இங்கு நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 4-ம் நாள் மண்டகப்படியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனி திருமஞ்சன சிறப்பு வீதியுலா நடைபெற்றது.
    • விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கயிலாய வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. பின்னர் வீதியுலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த சிறப்பு வீதியுலா சிவ தல யாத்திரை குழு திருக்கூட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.



    • 9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்பர்.
    • பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம்.

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆலயங்களை கட்டிய நம் முன்னோர்கள், அந்த ஆலயங்களில் தினமும் எத்தனை தடவை பூஜை செய்ய வேண்டும்? எப்போது பூஜை செய்ய வேண்டும்? வாரத்துக்கு ஒரு தடவை எத்தகைய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும்? மாதத்துக்கு ஒரு தடவை என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கணித்து நடைமுறைப்படுத்தினார்கள்.

    அது மட்டுமின்றி எந்தெந்த மாதங்களில் விழாக்கள் நடத்த வேண்டும் என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்த விழாக்கள் எல்லாம் பக்தர்களை ஆலயத்துடன் நெருங்க வைக்கும் இயல்பு கொண்டவை. அதோடு இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன் மீதுள்ள ஆத்மார்த்தமான பக்தியை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட செய்து விட்டவையாகும்.

    இந்த விழாக்களில் முதன்மையானது உற்சவங்களில் ஒன்றான பிரம்மோற்சவம் ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு ஒரு தடவை மிக விமரிசையாக பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தந்த ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.

    பொதுவாக உற்சவங்கள் என்பது இந்த உலகில் உள்ள உயர்வான படைப்புகளின் விருத்திக்காகவே நடத்தப்படுவதாக கூறப்படுவதுண்டு. எனவே உற்சவங்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த உற்சவங்கள் ஒவ்வொன்றும் ஆலய வழிபாட்டின் சூட்சுமத்தை பொதிந்து வைத்துள்ளது.

    ஆகையால் சக்தி வாய்ந்த ஆலயங்களில் முறைப்படி பிரம்மோற்சவம் நடத்தப்படா விட்டால் அது ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தீய விளைவுகளை கொடுத்து விடும் என்று ஞானோத்திர ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் நடத்தப்படாவிட்டால் அந்த பகுதி மக்களுக்கு கிரகபீடை, நோய்கள், ஆயுள் குறைவு போன்றவை ஏற்படும் என்றும் அந்த ஆகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    நம் முன்னோர்கள் ஆலயங்களில் நடக்கும் உற்சவங்களை ஆறு வகையாக பிரித்துள்ளனர் அவை வருமாறு:-

    1. பைத்ருகம் எனும் உற்சவம், 12 நாட்கள் நடைபெறும்.

    2. சவுக்கியம் எனும் உற்சவம், 9 நாட்கள் நடைபெறும்

    3. ஸ்ரீகரம் என்ற உற்சவம், 7 நாட்கள் நடைபெறும்.

    4. பார்த்திவம் எனப்படும் உற்சவம், 5 நாட்கள் நடைபெறும்.

    5. சாத்வீகம் எனும் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும்.

    6. சைவம் என்ற உற்சவம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடக்கும்.

    9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். மிகப்பெரிதாக இருப்பதை `பிரம்மா' என்பார்கள். எனவே நீண்ட நாட்கள் நடக்கும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.

    பிரம்மோற்சவத்துக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது திருப்பதி உள்ளிட்ட சில தலங்களில் உற்சவத்தை பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம் உண்டு. பிரம்மன் நடத்தும் உற்சவம் என்பதால் அதற்கு பிரம்மோற்சவம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வார்கள்.

    இவை தவிர 5 வகை சிருஷ்டி தொழிலை குறிக்கும் உற்சவத்துக்கும் பிரம்மோற்சவம் என்று பெயராகும். இதை `பஞ்ச கிருத்யம்' என்றும் சொல்வார்கள்.

    உற்சவ காலத்தில் மேற்கொள்ளபடும் ம்ருதசங்கரஹனம், அங்குரார்ப்பனம், கல்யாணம், த்வஜாரோஹனம், ரட்சாபந்தனம் ஆகிய ஐந்தும்தான் பஞ்ச கிருத்யங்கள் என்று கூறப்படுகின்றன.

    பிரம்மோற்சவ கொண்டாட்டம் ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். திருப்பதியில் ஒரு காலத்தில் புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றும் என 2 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டன.

    திருப்பதி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் ஆண்டு 11 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழமை, வருவாய் மற்றும் மரபுகளை பொருத்தே பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் அமையும்.

    பிரம்மோற்சவங்கள் ஆலயத்துக்கு ஆலயம் வித்தியாசப்பட்டாலும் வார உற்சவம், மாத உற்சவம், பட்ச உற்சவம் என்ற விதமாகவே நடத்தப்படும்.

    சிவனுக்கு ஒருநாள் உற்சவமே உகந்ததாகும். கிராமத்தின் நன்மைக்காக 3 நாள் உற்சவத்தை நடத்தினார்கள்.

    பூதங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள 5 நாட்கள் உற்சவம் நடத்தப்பட்டது. அம்பாளுக்கு உகந்தது 7 நாட்கள் உற்சவமாகும். உலக நன்மைக்காக 9 நாட்கள் உற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனால் தற்போது பெரும்பாலான சைவ தலங்களிலும், வைணவ ஆலயங்களிலும் 9 அல்லது 10 நாட்களாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் ஆலயத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி காலையும், மாலையும் வீதியுலா வருவார். இதன் மூலம் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் உற்சவரை வழிபட்டு பலன் பெறுவார்கள்.

    இறைவனே தம் வீட்டு வாசல் வரை வந்து விடுவதால் பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களிடம் மகிழ்ச்சி பொங்கி வழியும். உற்சவரை வரவேற்று இறையருள் பெறுவார்கள்.

    சைவ ஆலயங்களில் பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக புற்றுமண் எடுத்து முளையிடும் நிகழ்ச்சி நடைபெறும். இது சிருஷ்டி தொழிலை குறிக்கும்.

    அடுத்தது கொடி ஏற்றம். அதில் ஈசனுக்குரிய ரிஷபக்கொடி ஏற்றப்படும்.

    இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபைகளில் உற்சவர் எழுந்தருள்வார். இறைவன் சூரிய, சந்திரர்கள் மூலம் உலகத்துக்கு தனது கருணை ஒளியைப் பரப்புகிறான் என்பதை இந்த நடைமுறை உணர்த்தும்.

    மூன்றாம் நாள் அதிகார நந்தி, பூதவாகனம். இது இறைவனின் அழித்தல் தொழிலை குறிக்கும். 4-ம் நாள் நாக வாகனம், 5-ம் நாள் ரிஷப வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8-ம் நாள் கயிலாய வாகனம், 9-ம் நாள் பிட்சாடனர் திருவீதியுலா நடைபெறும். பிறகு கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    வைணவத் தலங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது காலை, மாலை இரு நேரமும் உற்சவ மூர்த்தி பல வகை வாகனங்களில், விசேஷ அலங்காரத்துடன் உலா வருவார். கொடியேற்றம் நடந்த பிறகு 2-ம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா வருவார்.

    3-ம் நாள் காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்துப் பல்லக்கு சேவை, 4-ம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா வருவார்.

    ஐந்தாம் நாள் காலை உற்சவர் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருவார். அன்றிரவு கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான தினமாக இந்த சேவை நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருட சேவையை தரிசனம் செய்வார்கள். இந்த வழிபாடு பிறவிப் பிணியை நீக்கவல்லது.

    6-ம் நாள் காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனம், 7-ம் நாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை உற்சவம் நடைபெறும். 8-ம் நாள் தேரோட்டம் நடத்துவார்கள்.

    பிரம்மோற்சவ நாட்களில் தினமும் மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த ஊஞ்சல் சேவையை காண்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பம் பெருகும்.

    பிரம்மோற்சவ நாட்களில் கலசங்கள் நிறுவப்படுதல், ஹோமம் செய்தல் ஆகியவையும் நடத்தப்படும். சில தலங்களில் பெரிய புஷ்கரணி இருக்கும். பிரம்மோற்சவ நாட்களில் அங்கு தெப்ப உற்சவம் நடத்துவார்கள்.

    அதுபோல பிரம்மோற்சவ தேரோட்டம் பிரமாண்டமாக நடைபெறும். தேரோட்டத்தின் போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதி வித்தியாசம் பார்க்காமல் தேர் இழுப்பார்கள். இப்படி மக்களை மனதால் ஒருங்கிணைக்க செய்யும் விழாவாகவும், இறை உணர்வில் மனதை மூழ்க செய்யும் விழாவாகவும் பிரம்மோற்சவம் அமையும்.

    அது மட்டுமின்றி பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் பிரம்மோற்சவத்துக்கு உண்டு. பிரம்மோற்சவத்துக்கு உள்ள மகத்துவம், சிறப்பும் ஆலயத்தில் நடக்கும் கும்பாபிஷேகத்துக்கும் உண்டு.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் ஆவணி பெருவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டி பூச்சொரிதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.

    30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×