என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer Season"

    • கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
    • சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

    மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி தற்போது அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலிருந்து உள்ளூர் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் வருகையை குறித்து கொடைக்கானலில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர புதிதாக ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20ம் தேதிக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்காக அரசு சிறப்பு சைட்சீயிங் பஸ் இயக்கப்பட உள்ளது. குறைவான கட்டணத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியும். பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் அவர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் வழிகாட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.
    • மே மாதம் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கதக், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

    கோடை காலத்தில் வடகர்நாடக மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் பணி நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், கொப்பல், பல்லாரி, விஜயநகர், விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

    வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. வெயில் நேரத்தில் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

    இதையடுத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி அலுவலக பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 9 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டும் பணியாற்றினால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும்.
    • உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் முடியும் வரையிலும் கோடை கால மாகவே கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீராகாரங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த காலகட்டங்களில் ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் மண்பானைகளுக்கு மவுசு அதிகரித்து விடும்.

    பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்றேகூறலாம்.


    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிப்போய் விட்டது. ஆனாலும் கோடை காலத்தில் மட்டும் மண்பானைகளின் பயன்பாடு அதிகரித்து விடுகிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, சேரன்மகாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தொழிலாளர்கள் காலம் காலமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வாறு தயாரிக்கும் இந்த மண்பாண்டங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது.

    இன்றளவும் காருக்குறிச்சி யில் தயாரிக்கப்பட்டு வரும் அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி பானைகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    காருக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானை, மண் குடங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.600 வரை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.


    மூடி வைக்கப்படும் குவளைகள் 5 லிட்டர் அளவு கொண்டவை ரூ.100 வரையிலும், 8 லிட்டர் பானைகள் ரூ.120-க்கும், 10 லிட்டர் அளவு கொண்ட பானைகள் ரூ.185 ஆகவும் விற்பனையாகிறது. இந்த கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் ஆண்டாண்டு காலமாக மண்பானை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இயற்கை முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இந்த மண்பானைகளை தயாரித்து வருகிறோம்.


    முதல் நாளில் கரம்பை மண்ணை நன்றாக காய வைத்து தூசி தட்டி வைத்துக்கொள்வோம். பின்னர் அதனை ஊற வைத்து தூசி தட்டிய பிறகு கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்க வேண்டும்.

    சுமார் 4 மணி நேரம் வரை அதில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2-ம் நாள் கரம்பை மண்ணை எந்திரத்தில் போட்டு அரைத்து அதனை தனியாக வைத்துக்கொள்ள வே்ணடும்.

    பின்னர் பானைகளை வடிவமைத்து காய வைப்பார்கள். பின்னர் பானைகளை நெருப்பு மூலம் சுட்டு எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

    வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பும்போது அட்டைப்பெட்டிகளில் வைக்கோலை சுற்றிவைத்து அடுக்கி லாரிகளில் ஏற்றி செல்வோம். பின்னர் அதனை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியை விட மண்பானை, மண்குடம் மூலமாக குடிக்கும் தண்ணீர் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதால் காருக்குறிச்சியில் தயாரிக்கப்படும் இயற்கை யான மண்பாண்டங்கள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.

    இந்த மண்பானைகள் 5 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப குழாய் பொருத்தி கேட்டால் அந்த பானைகளில் நல்லி பொருத்தி கொடுக்கிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமான அளவில் மண்பானைகளை உபயோகப்படுத்த தொடங்கி உள்ளதால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.
    • அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்தது. இந்த கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு மதிய வேளைகளில் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. கன்னடியன்கால்வாய் பகுதியில் 7.20 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே இந்த மழை பெய்தாலும் மாலை வேளையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வடக்கு மாவட்ட பா. ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பட்டியல்அணி மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், தச்சை மண்டல தலைவர் பிரேம்குமார், ஊடகப்பிரிவு முத்து, வர்த்தக அணி குரு மகாராஜன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    • கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் அங்கப்புரத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் புதுப்பிக்க, முதல் தெருவில் 6 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கீழத்தெருவில் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வாறுகால் அமைக்க திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    சேர்வைகாரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி ஜெய்லானி முன்னிலை வகித்தார். விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யாராம்குமார், ஒன்றிய முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் எல்.எம். முருகன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஏ. செல்வராஜ், பொன்னுத்துரை, கே. செல்வராஜ், கல்யாணிபுரம் கிளைச் செயலாளர் முருகன் மற்றும் கலைச் செல்வன், நடராஜன், மணி, நவீன் கிருஷ்ணன், மணிகண்டன், மாரிச்செல்வன், ஸ்டீபன், மேசியாசிங், ஆலங்குளம் அன்பழகன், நெல்லையப்பபுரம் மணி, கண்ணன், தேன்ராஜ், உதயா, முப்புடாதி, ரேவதி, நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு கரிமூட்டதொழில் பலன் தருகிறது.
    • இந்த தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் விறகுகட்டை மற்றும் கரிமூட்ட தொழில் நடக்கிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கமுதி மற்றும் அபிராமத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள் வரத்துக் கால்வாய்கள், தனிநபர் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி எடுத்து அந்த கட்டைகளை திருப்பூர் போன்ற சாயபட்டறைக்கு அனுப்புகின்றனர். மேலும் இந்த கட்டைகளை பயன்படுத்தி கரிமூட்ட தொழிலும் செய்து வருகின்றனர்.

    சீமை கருவேல மரங்களை வெட்டி எடுத்து பெரிய கட்டை விறகுகளை திருப்பூர், கோவை, பல்லடம் போன்ற சாயப்பட்டறை களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி விற்பனை செய்யப் படுகிறது. எஞ்சிய சிறிய குச்சிகளை வெட்டி அடுக்கி அவற்றை கரிமூட்டம் போட்டுவுடன் வெளி மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து அபி ராமத்தை சேர்ந்த விறகு வெட்டுபவர் கூறுகையில், தற்போது கோடைகாலம் என்பதால் மாற்று தொழிலாக விறகுவெட்டும் தொழிலும், கரிமூட்டம் தொழிலும் செய்து வருகிறோம். கோடை காலத்தில் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் விறகு வெட்டும் தொழிலை செய்து வருகிறோம்.

    இந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.

    • ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
    • கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதை 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.

    இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.

    தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.

    இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
    • தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம்.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை அனல் வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசன் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்து அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் மலர்ச்செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இரண்டரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும் பணி முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தையும் காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி அங்கும் குவிந்து வருகிறார்கள். கட்டணம் செலுத்தும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பு நிறைந்த தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வர். அந்த வாகனம் வனப்பகுதியை சுற்றி வரும். அப்போது யானை, மான், புலி என ஏராளமான வனவிலங்குகள் காட்டில் சுற்றித்திரிவதை நேரில் பார்க்கலாம்.

    அதேபோல தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதுமலை முகாம் மற்றும் தெப்பக்காடு முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    • கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.
    • பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்றுப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சியாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்பட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    கோடை சீசனையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் நடப்பாண்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் கோடை விழாவிற்கு, வெளியிடங்களில் இருந்து அதிகப்படியாக வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் காவல்துறையினரால் கீழ்க்கண்ட சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படும்.

    ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் பர்லியார் வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து லாரிகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோத்தகிரி வழியாகவும், பர்லியார் வழியாகவும் அனுமதிக்கப்பட மாட்டாது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், காவல்துறைக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×