என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95139"

    காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை பற்றி நான் ஏற்கனவே பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பத்திரிக்கை அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருந்தேன் ஆளும்கட்சியின் அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். ஈசிஆர் சாலை ஜி ஸ்கொயர் சாலை என்ற பெயர் சூட்டி இருக்கலாம் என்று கூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன்.

    தமிழகத்திலுள்ள நிலம் மற்றும் மனை விற்பனையாளர்கள் தற்போது எந்த பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாத இருண்ட சூழ்நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தினமும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பத்திரப்பதிவு நடவடிக்கைகள் மட்டும் கன ஜோராக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், ஜூனியர் விகடன் பத்திரிகை மீதும் ஊடகவியலாளர்கள் சகோதரர் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் கூட்டாக ஒரு வழக்கைப் பதிவு செய்கிறது. ஒருவேளை அவர்கள் பத்திரிக்கை தர்மத்தை மறந்து அத்துமீறி இருந்தால் கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ சிவில் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் வேண்டுமென்றே அவர்களை சிக்க வைப்பதற்காக கிரிமினல் வழக்கினை ஜி ஸ்கொயர் நிறுவனம் பதிவு செய்கிறது.

    தமிழகத்தின் சாமானிய மக்கள் கொலை களவு அத்துமீறல் போன்ற எந்த நடவடிக்கைக்கும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றாலும், காவல்துறையில் உடனடியாக சிஎஸ்ஆர் மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்ய இயலாது அல்லது மிகுந்த காலதாமதம் ஆகும். இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் புகார் அளித்தவுடன் துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை இரவு தொடங்குவதற்குள் எடுத்த நடவடிக்கை மின்னல் வேகம். 

    அதிலும் தமிழகத்தில் மிகத்தொன்மையான ஒரு பத்திரிக்கை நிறுவனம், மற்றும் அதேபோல மக்கள் தொடர்பு மிக்க, ஊடகவியலாளர்கள், என்று தெரிந்திருந்தும் புகாரின் உண்மை தன்மையை அறியாமல் அது குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து, எவரையும் கைது செய்யும் வகையில் வழக்கை அமைத்திருப்பது என்பது பத்திரிக்கைகளை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயலாகும். 

    அதிகார மமதையின் உச்சத்தில், ஊடகங்களை அழுத்தலாம் அச்சத்தில் என்று ஆளும் திமுக அரசு நினைக்கும் என்றால் பத்திரிக்கைகளின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றால் அதை மக்கள் அனுமதிக்க மட்டார்கள். 

    காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
    குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன.
    ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின் (ஐஎஸ்பி) 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

    இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் அரசியல் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

    குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. தெலுங்கானாவிலும் பாஜகவினர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

    இந்த குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலுங்கானாவை தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது.

    எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கையாளிரிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்- முழு விவரம்
    • மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
    • காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை வயதில் இளையவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவராகவும் இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து காலம் கடத்தி கொண்டிருக்கின்றீர்கள்.

    இரண்டு நாட்களில் இரண்டு லாக்-அப் மரணங்கள். காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    கடந்த ஒரு வருடத்தில் 7 லாக்-அப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு 11.23 கோடி கழிவறைகளை கட்டி உள்ளது.
    • 8 ஆண்டுகள் ஆன பின்பும் மத்திய அரசில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் புகார் சொல்ல முடியவில்லை.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பா.ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசு 11.23 கோடி கழிவறைகளை கட்டி உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014-ம் ஆண்டு வரை 5.5 கோடி கழிவறைகள் தான் கட்டப்பட்டு இருந்தன.

    10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த அரசு மெஜாரிட்டி இல்லாத அரசாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் தங்கள் பங்குக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொள்ளையடித்தனர்.

    தற்போது தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று கூறலாம். ஆனால் 8 ஆண்டுகள் ஆன பின்பும் மத்திய அரசில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் புகார் சொல்ல முடியவில்லை. தமிழ்நாடு விஞ்ஞான ஊழலில் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்ல மாநிலம் முழுவதும் விசாரணை கைதிகள் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்கப்படுகிறது.

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து விட்டால், மத்திய அரசிடம் பேசி இந்தியாவிலேயே ஆன்மிக மாவட்டமாக கும்பகோணத்தை அறிவித்து பல கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகிவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
    • திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதல்- அமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல். ஏனென்றால் 4 மந்திரிகளை அண்டை நாடுகளில் அமர்த்தி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது.

    தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கம் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்ய வருகின்றனர். கலெக்டரிடமும் இது குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயியும் வஞ்சிக்கப்படுகிறார். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்ற ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

    தி.மு.க. இந்து கோவில் விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருகின்றது. கோவில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு ஒப்பாகும். தி.மு.க.விற்கு சித்தாந்தம் ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வரும் கட்சி பா.ஜ.க. ஆகும். மாநில தலைவர் ஊழலை வரும் முன் காப்போம் என்று தடுத்து வருகின்றார். இது வரை தமிழகத்தில் 7 லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?
    • ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இன்று பாரதிய ஜனதாவினர் சிறப்பு பூஜை நடத்தினர். கோவையை காத்த ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி இந்த பூஜையை அவர்கள் நடத்தினர்.

    பூஜையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்கள் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதால் இன்று வழிபாடு நடத்தினோம். நூற்றுக்கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது.

    சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை. கோவைக்கும் வரவில்லை. இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்ந்து வந்திருக்க வேண்டாமா?

    போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசி இருக்க வேண்டாமா?

    இந்த சம்பவம் பற்றி அவர் இதுவரை பேசாதது, மவுனமாக இருப்பது கோவையை பழி வாங்கும் நோக்குடன் இன்னும் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் சரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என களத்தில் இறங்க வேண்டும்.

    திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?

    ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்-அமைச்சர் கவுரவம் பார்க்க கூடாது.

    சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களை பற்றி தீர விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இன்று பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது.
    • சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜனதா அணியில் சேரமாட்டார். எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம். அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி
    • ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா?

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகரம் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பது 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அனைவருக்கும் தெரிய வந்தது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் 58 பேர் பலியானார்கள்.

    2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகமை 5 பேரை கைது செய்தது. இதில் கைதான முகமது அசாருதீன், கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் ஆகிய 2 பேர் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜக்ரன் ஹசீமுடன் தொடர்புடையவர்கள். இவர் பேஸ்புக் மூலம் நிறைய பேரை மூளைச்சலவை செய்துள்ளார்.

    2019 ஏப்ரல் மாதம் 21-ந்தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதியில் நடத்திய தாக்குதலில் 269 பேர் இறந்தனர். முகமது அசாருதீன், அபுபக்கர் ஆகியோர் இன்று ஜெயிலில் உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தியபோது அதில் ஜமேசா முபினும் ஒருவர். இவர்தான் கடந்த 23-ந்தேதி கோவையில் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்.

    ஜமேசா முபின் 2 நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசை மாற்றியுள்ளார். அதில், எனது இறப்பு செய்தி தெரிந்தவுடன் எனது தவறை மன்னித்து விடுங்கள். எனது குற்றத்தை மறந்து விடுங்கள். எனது இறுதி சடங்கில் கலந்து கொள்ளுங்கள். எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வைத்துள்ளார்.

    இது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அக்டோபர் 21-ந்தேதி இதை அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

    இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விவரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் எந்த தகவலயும் கொடுக்கவில்லை.

    ஜமேசா முபின் வீட்டில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் எடுக்கப்பட்டது. அவர் தீபாவளி கொண்டாடவா? அதை வீட்டில் வைத்திருந்தார்.

    ஜமேசா முபின் போலி குண்டுடன் சென்றார். ஆனால் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று டி.ஜி.பி. சொல்கிறார். தமிழக மக்களை போலீசார் முட்டாள் என்று நினைக்கிறார்கள். டி.ஜி.பியும், காவல் துறையினரும் குழந்தை தனமாக பேட்டி கொடுக்கிறார்கள்.

    பால்ரஸ் குண்டு ஏன் வந்தது என்று பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்டும் சரியான பதில் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் ஏன் வண்டி வெடிக்க வேண்டும். உங்களிடம் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளது. கோட்டைமேடு பகுதியில் இருந்து கார் கிளம்பியது முதல் கார் வெடித்தது வரை சி.சி.டி.வி. காட்சி உள்ளது.

    தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா? இன்னும் ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா? இதற்கு எவ்வளவு நாள் வேண்டும். பழைய தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள்.

    தமிழக உளவு துறையில் தற்போது சிறந்த அதிகாரிகள் இல்லை. தமிழக உளவு துறையில் சிறந்த அதிகாரிகளை முதல்-அமைச்சர் நியமிக்கவேண்டும். தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈேராடு ஆகியவை தற்போது ஐ.எஸ். கலவர பூமியாக மாறி வருகிறது. இந்த தாக்குதலை தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கு உள்ளது.

    4 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவனை போலீசார் கைது செய்தார்களா? இல்லையா? என்பதை தமிழக அரசு சொல்ல வேண்டும்.

    அவர் ஒரு வேளையில் வாங்கி அதை எடுத்துக்கொண்டு இந்து பண்டிகையில் மக்கள் அதிக மாக சேரும்போது அந்த வண்டியை எடுக்க சென்று பாரிஸ் ஸ்டைல் தாக்குதல் போல நடத்த வண்டியை வாங்கினாரா இல்லையா? அந்த வண்டியை வாங்கிய பிறகு வெளியில் உள்ள ஏஜென்சி அவருக்கு எச்சரிக்கை செய்து ஈரோட்டில் ஒருவரை சேலத்தில் ஒருவரை தமிழக போலீஸ் கைது செய்ததா இல்லையா? அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லாவற்றையும் மறைத்து மறைத்து எந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் செய்து வருகிறது. வேகத்தடை மீது கார் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலை பகுதி கழன்று விட்டது. காரை ஓட்டியவர் வெளியே வந்து ஏன் கழன்றது என்று சரி செய்யும் போது அது வெடிக்கிறது.

    இதை ஏன் காவல்துறை மறுக்கிறது. கோவையில் உள்ள ஒரு போலீஸ்காரருக்கு போன் செய்து கேட்டால் அவர் யார் விட்டில் இருந்து வண்டி கிளம்பியது. சி.சி.டி.வி. காட்சியில் என்ன இருக்கிறது? வண்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலைப்பகுதி கழன்றதால் வெடித்தது என்கிறார்.

    ஆனால் இதை தமிழக காவல்துறை மறுக்கிறது. முதல்-அமைச்சரும் மறுக்கிறார். இந்தியாவில் பெங்களூர், ஐதராபாத், புனே, டெல்லி, மும்பை பகுதியில் முன்பு 10 ஆண்டு காலம் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது.

    தீபாவளி நேரத்தில் இதுபோல் நடந்தது. இதில் கொத்துக்கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். 2008 நவம்பர் 26-ல் மும்பையில் தாக்குதல் நடந்தது. இது பெரிய தாக்குதல். எனவே தமிழகத்தில் ஐ.எஸ். தீவிர வாதிகள் ஊடுருவ முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இது தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொண்டால் கோவைக்கு ஒரு என்.ஐ.ஏ. வேண்டும். இந்த விஷயத்தில் போலீசாரை மட்டும் குற்றம் சாட்டுவது வேதனையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
    • கோவை கார் வெடிவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது என்றார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கோவை கார் வெடிவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழ்நாடு பா.ஜ.க. வரவேற்கிறது.

    தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஸ்டெர்லைட போராட்டத்தில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
    • போராட்டத்தை தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும்.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் 5 ஆண்டுகாலம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    'கிணத்தை காணோம்' என்ற வடிவேலு காமெடிபோன்று இருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பது ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை.

    ஒருபுறம் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அது சரியான நடவடிக்கையா தவறான நடவடிக்கையா? என்பது விவாதத்திற்குரிய விஷயம். துப்பாக்கி சூடு ஒருவர் நடத்தியிருக்கலாம். இதில் ஒரு செயின் ஆப் கமாண்ட் இருக்கிறது. ஒரு ஐஜி, டிஐஜி, எஸ்பி என செயின் ஆப் கமாண்டில் அனைவர் மீதும் துறைரீதியான நடவடிக்கையை பரிந்துரை செய்திருப்பது பாஜக ஏற்றுக்கொள்ளாது. செயின் ஆப் கமாண்டில் இருக்கக்கூடிய அதிகாரிகள் என்றால், ஏன் டிஜிபி மீது நடவடிக்கை இல்லை? ஏன் ஏடிஜிபி மீது நடவடிக்கை இல்லை? அப்படியே இழுத்துக்கொண்டே சென்றால் யாராவது ஒரு காவலர் தனக்கு கிடைத்த கவலை தவறாக பயன்படுத்தி துப்பாக்கியால் 17 முறை சுட்டிக்கிறார். அது தவறுதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அதிகாரிகள் மீதும் நடவடிக்கை என்றால் இது எங்கே போய் நிற்கும்? இது டிஜிபி அலுவலகம் வரை வந்து நிற்கும்.

    இந்தியாவில் இதைப்போன்ற நடவடிக்கையை எங்கேயும் பார்த்ததில்லை. யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக எல்லா போலீஸ் அதிகாரிகளையும் பலிகடா ஆக்குவேன் என்று கமிஷன் சொல்லியிருப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

    இதில் மிஷனரி குரூப்க்கு சம்பந்தம் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஊடகங்கள் இன்றும் அதிகமாக பேசவேண்டும். ஏனென்றால் கூடங்குளம் போராட்டம் நடக்கும்போது மன்மோகன் சிங் இதை வார்த்தையை சொன்னார். கூடங்குளம் போராட்டம் தூண்டப்பட்டதாக கூறினார். ஸ்டெர்லைட்டுக்கும் அதேதான் நடந்திருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆணையம் சுட்டிக்காட்டவில்லை. பொத்தாம்பொதுவாக ஒரு வரியில் மிஷனரி தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த மிஷனரியை ஒருங்கிணைத்தது யார்? பணம் எங்கே இருந்து வந்தது? சம்பளமாக தினமும் எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டது? அதைக் காணோம். எனவே, இந்த விசாரணை அறிக்கையைப் பொருத்தவரை, ஆசையைக் காட்டியிருக்கிறதே தவிர, உண்மையை அதில் காட்டவில்லை. எனவே, இதை மாநில அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் அறிக்கையில் உள்ள பாயிண்டுகளை ஆராய்ந்து, தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் சரி, அதை கண்டுபிடிக்க வேண்டும்.

    தூத்துக்குடி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம். திருமாவளவன், சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா? ஆனால் காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும். ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது.

    துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பாரத்ததாக சொன்னார். அது எப்படி தவறு என சொல்ல முடியும்? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் பல தகவல்களை டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோர் முதலமைச்சருக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறியதை வைத்து எடப்பாடி பொய் சொன்னார் அல்லது வேண்டுமென்றே வார்த்தையை மாற்றி சொன்னார் என ஆணையம் கூறியிருக்கிறது. அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி பார்த்தால் ஒரு முதலமைச்சர் எடுக்கும் முடிவை கேள்வி கேட்பதற்கு ஆணையத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த தருணத்தில் முடிவு எடுத்திருக்கிறார்.

    நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியது சரியா? எங்களுக்கு தெரியாது. அந்த நேரத்தில் காவல்துறைக்கு வேறு வாய்ப்பு இல்லை, நடத்தியிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய விதம் தவறு. ஆனால், எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொல்வது சரி இல்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
    • முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு மொழியாக இருந்தது.

    சென்னை:

    மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான "ரோஜ்கார் மேளா" திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

    சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க தி.மு.க. என்ன செய்துள்ளது? தமிழில் வைப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்சனை? தமிழகத்தில் குறிப்பாக என்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு தமிழ் கட்டாயம் என அறிவிக்கட்டும், நாங்கள் வரவேற்கிறோம். மருத்துவக் கல்லூரிகளில் தமிழ், நாங்கள் வரவேற்கிறோம்.

    புதுச்சேரியில் மருத்துவக் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என மூன்று தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்கள். எதையுமே சொல்லாமல் நீங்களாகவே ஆங்கிலத்தை ஊக்குவிக்கிறீர்கள், இந்தியை ஊக்குவிக்கிறீர்கள், தமிழை வளர்க்கவில்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால் திமுகவின் நாடகம் பொய் என தமிழக மக்களுக்குத் தெரியும். அதனால்தான் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் யாரும் இதைப்பற்றி பேசவில்லை. மாணவரணி, இளைஞரணி நீங்கள் பேசுகிறீர்கள். அடுத்து சட்டசபையில் உங்கள் எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள். அதுதானே தவிர, இது மக்கள் பிரச்சனையே கிடையாது. இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அது நடந்தது எல்லாமே காங்கிரஸ் காலகட்டத்தில். அப்போது திமுக கூட்டணியில் இருந்தது.

    முதல் கல்விக்கொள்கை, இரண்டாவது கல்விக்கொள்கையில் இந்தி கட்டாயம் மூன்றாவது மொழியாக திணிப்பு மொழியாக இருந்தது. இதற்கெல்லாம் முதலமைச்சர் பதிலே சொல்ல மாட்டார். காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசமாட்டார்கள்.

    முதல் கல்விக்கொள்கையை நாங்கள் 1968ல் கொண்டு வந்தோம், நாங்கள்தான் மூன்றாவது மொழியாக இந்தியை திணிப்பு மொழியாக வைத்தோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். 1986ல் ராஜீவ்காந்தி இந்தியை கொண்டு வந்தார், அதுவும் திணிப்பு மொழி. 92ல் ரிவிஷன் கொண்டு வந்தார்கள், அதுவும் திணிப்பு. ஆனால் 2019ல் வந்த புதிய கல்விக்கொள்கையில்தான் இந்தி என்ற வார்த்தையை எடுத்துவிட்டு உங்களுக்கு பிடித்த மொழி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஏன் பேச மறுக்கிறார்கள்? ஏன் முதலமைச்சர் பேசவில்லை. ஏன் காங்கிரஸ்காரர்கள் பேசவில்லை? ஏனென்றால் உண்மை அவர்கள் பக்கம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வலுவாக இல்லாத பூத்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
    • வாரம் தோறும் பணி விவரங்களை மாவட்ட தலைவர், மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    பா.ஜனதா வலுவாக இல்லாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வருகிற தேர்தலில் கணிசமான எம்.பி.க்களை பெறுவதற்கான வழிமுறைகளை டெல்லி மேலிடம் வகுத்து வருகிறது.

    முதற்கட்டமாக மத்திய மந்திரிகளை மாவட்ட வாரியாக அனுப்பி மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவு மக்களை சென்றடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றிய அறிக்கை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியிடம் வழங்கப்படுகிறது.

    அடுத்ததாக தேர்தல் பணிகளை பூத் வாரியாக மேற்கொள்ளவும் பார்வையிடவும் முழு நேர ஊழியர்களை நியமிக்கிறார்கள்.

    தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வரை வழங்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர பெட்ரோல் அலவன்சும் வழங்கப்படும்.

    இவர்கள் தினமும் பூத்களுக்கு சென்று பார்வையிட வேண்டும். கிளை கமிட்டி நிர்வாகிகளிடம் பேச வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்காளர்களில் 40 சதவீதம் பேரை பா.ஜனதா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வலுவாக இல்லாத பூத்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். வாரம் தோறும் பணி விவரங்களை மாவட்ட தலைவர், மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊழியர்கள் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் அனைத்து தொகுதிகளிலும் பணிகள் தொடங்க உள்ளது.

    ×