என் மலர்
நீங்கள் தேடியது "Thirukalyanam"
- தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
- பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவம் முதல் அட்சயம் வரையிலான தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது.
முன்னதாக சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வள்ளி இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாம்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள் ஆகியவற்றை சுமந்தவாறு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சீர்வரிசை அளித்தனர்.
பின்னர், முருகப்பெருமான்-வள்ளி ஆகியோருக்கு மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து, மாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
- பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சுப்பிரமணியசாமி ஹோமம் நாளை வரை நடக்கிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சுப்பிரமணியசாமி ஹோமம் தொடங்கியது. நேற்று நடந்த சுப்பிரமணியசாமி ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை சிறப்புப்பூஜை, ஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹோமம், சஹஸ்ரநார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை மாலை 5:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
- தினமும் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
- நவம்பர் 1-ந்தேதி ஊஞ்சல் உற்சவம், சாந்தாபிஷேகமும் நடக்கிறது.
கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
நேற்று 4-வது நாள் விழாவை காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது.
- முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
- மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.
கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.
- இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்படி நேற்று சின்னக்குமாரர் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார்.
இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சின்னக்குமாரர் சூரசம்ஹாரத்துக்காக மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் வருகிறார். திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பழனி மலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் நடைபெறுகிறது.
- நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று இரவு சூரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானையும் சூரபத்மர்களையும் வழிபட்டுனர்.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
- சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவில் பட்டினபிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.
7-ம் நாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
அதன்பிறகு தெற்கு ரதவீதி, மேல ரதவீதி சந்திப்பு பகுதியில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு சென்றனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு யாகசாலை கலசங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜை, புண் யாகம் கலசங்கள், ஆவாகனம், கணபதி வேள்வி நடந்தது. காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ஆதி மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் சுப்பிரமணிய சுவாமி வெண் பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும் தெய்வானை அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி வேள்வி பூஜை, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
சரியாக 10.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. அதை பெண்கள் அணிந்து கொண்டனர். பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் எழுதினர். இதில், மொத்தம் ரூ.57ஆயிரத்து 910 வசூல் ஆனது.
அதைத்தொடர்ந்து பொற்சுன்ன பாடல் பாடி சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் மஞ்சள் அணிவிக்கப்பட்டது. பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு அவர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி மலைப்பாதையில் செல்ல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப் பட்டன. விழா ஏற்பாடுக ளை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
- சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
- கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.
இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
- சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அகிலாண்டேசுவரி அம்பாள் சமேத மூலநாத சுவாமி கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு சூரசம்கார விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தென்கரை இரட்டை அக்ரகாரத்தில் இருந்து நவநீதகிருஷ்ண பெருமாள் சீர்வரிசை சுமந்து வர, நாகேசுவர சிவம் மாப்பிள்ளை வீட்டாராகவும், முகேஷ் சிவம் பெண் வீட்டாராகவும் மாலை மாற்றி மேளதாளம் முழங்க வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவத்தை கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் நடத்தி வைத்தார். செந்தில் தீபாராதனை காட்டினார். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி பெருக்குடன் வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.