என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvalluvar"
- அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.
புதுடெல்லி:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
- பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
- திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள மாநில தமிழ் சங்க வளாகத்தில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக இள முனைவர் திருக்குறள் கி.பிரபா இறை வேண்டல் பாடினார். இசை தென்றல் அருணா சிவாசி திருவள்ளுவர் வாழ்த்து கூறினார். மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வரவேற்றார். மேயர் சரவணன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கலந்து கொண்டு 6 அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உலகை தமிழால் உயர்த்திடுவோம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என தனது பேச்சை தொடங்கினார்.
நான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் பிறந்தவன். எனது தாயார் சந்தனத்தாய் நினைவாக எங்களது சங்கத்தின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.
தற்போது பாளையங்கோட்டையில் 158-வது திருவள்ளுவர் சிலையை வழங்கி திறந்து வைத்துள்ளேன். திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது. 133 அதிகாரங்களில் 1,330 குறள்களில் ஒன்றே முக்கால் அடியிலே திருவள்ளுவர் உலகத்தை அளந்தார். உலகமெல்லாம் உயர்ந்தார். உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நமது மக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் நல்லாசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் திவான், ராமசாமி, பாண்டியன், கிருபாகரன், வக்கீல் சுதர்சன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்.
- சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தினத்தந்தி என்ற நாளிதழை ஆரம்பித்து அதன் மூலம் பட்டித்தொட்டி எல்லாம் தமிழை பாமர மக்களும் அறிய செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவரது நினைவு நாளில் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.
விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரம் நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு.
இந்த மூன்றும் நாம் நம்பி இருக்கிற நிலையில் அ.தி.முக. ஆட்சியில் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள்.
இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்
காவிரியில் இந்த வருடம் 50 சதவீதம் தண்ணீர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50 சதவீதத்தை கூட கேட்க பெறாத துப்பில்லாமல் விவசாயிகளுக்கு தண்ணீர் பாசனத்திற்கு வழியில்லாத வகையில் ஒட்டுமொத்த துரோகத்தையும் தி.மு.க. அரசு செய்கிறது. சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.
திருவள்ளுவரைப் பொருத்தவரை உலகப் பொதுமறை தந்தவர் உலகம் முழுவதும் அதிகமான அளவுக்கு ஒரு மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்றால் அது திருக்குறள். திருவள்ளுவரைப் பொருத்த வரையில் ஜாதி கிடையாது மதம் கிடையாது இனம் கிடையாது அப்படி இருக்கின்ற ஒருவரை காவி உடை அணிந்து திரு வள்ளுவரை சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று.
தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன. தமிழினத்தையும் திருவள்ளுவரையும் அவமானப்படுத்துகிறவிதமாக தான் கவர்னரின் செயலை பார்க்க முடிகிறது. கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜாதி மதம் இனம் மொழி எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் நேசிக்க கூடிய ஒரு மிகப்பெரிய உன்னத தலைவர் ஜெயலலிதா. அண்ணாமலை போன்றவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவர்கள்.
குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கருத்து என்பது நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.
எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை ஒரே காவல்துறை தான். தி.மு.க. ஆட்சியில் ஏண்டா காக்கி சட்டை போடுறோம் என்கின்ற மனக்கஷ்டத்தில் காவலர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,
ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
- தை மாதம் 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
- தமிழ் அறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாக மனுதாரர் வாதம்
தமிழ் மாதம் தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை செல்லாது என அறிவித்து வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்தநாளான அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "1935 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாகவும் 600 ஆண்டுகள் முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தை 2ந் தேதி திருவள்ளுவர் தினம் தானே கொண்டாடப்படுகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக கொண்டாடவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆதலால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர் தரப்பு, வைகாசி, அனுச நட்சத்திர நாளில் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட எவ்வித தடையில்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
- பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.
- வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், " திருக்குறளை வங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாக திகழ்கிறார்.
திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடு தடைகளைத் தகர்த்து முன்னேறும்.
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்.
திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்.
வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான்.
குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.
பேரறிவுச் சிலையின் வெள்ளி விழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.
வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.
தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.
வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
- சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது, அவருக்கு காவி உடை அணிந்து சித்தரிப்பது ஏற்க முடியாது என தமிழ்நாடு காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாசார உறவானது வலுப்பெறும்.
- உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுடெல்லி:
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியால் கலாசார மையம் கட்டப்பட்டது. இந்த கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த கலாசார மையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு நேற்று திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருந்தது. யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டி இருப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டி உள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
நமது அண்டை நாடான இலங்கையில், மத்திய அரசின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு', உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த 'தெய்வப்புலவர்' அய்யன் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'யாழ்ப்பாணம் கலாசாரம் மையம்' திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாசார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது.
மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாசார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உலகம் முழுவதும் சென்று உரக்கச் சொல்லி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்காக ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது. அதுபோலவே திருக்குறளையும், அய்யன் திருவள்ளுவரின் புகழையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளு வருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உல கின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
கொடுத்த வாக்குறுதி யின்படி உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்.
தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்க நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அதற்கு பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதி தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.
மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டு மல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.
- இன்ஸ்டன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
- சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 1330 மாணவ, மாணவியர்களை வைத்து திருவள்ளுவர் உருவம் அமைக்க அன்பு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.
இதையடுத்து 1330 மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் உருவத்தை பள்ளி அருகே திறந்தவெளி மைதானத்தில் வடிவமைத்தது.
இதனை "இன்ஸ்டன்" உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அரசு பள்ளிக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கியது.

அதில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி செல்வம் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நளினி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் சேர்மன் அரசு, அறக்கட்டளை தலைவர் பாபு, ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக் கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle