என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkaiah Naidu"

    • சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகள் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை :

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நுழைவு வாயில்களில் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

    • தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
    • காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மறைந்த கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் நூற்றாண்டு பிறந்த விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.

    மேலும் கண்டசாலா எழுதிய பகவத் கீதை நூல் நாட்டிய வடிவலான தொகுப்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த யூ-டியூப் தளத்தையும், பழைய பாடல் தொகுப்பில் கண்டசாலா பாடல் இணைப்புக்கான புதிய தொகுப்பையும் வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-

    தெலுங்கு சினிமா உலகில் 2 தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, தொகுப்புகளை இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.

    உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

    தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். பாரம்பரியம் நமக்கு மிக முக்கியமானவை. அதற்காக பாரம்பரியத்தை மதமாக பார்த்துவிட கூடாது. பாரம்பரியம் நமது வாழ்க்கை முறையை சார்ந்தது. அது மதம் ஆகாது.

    'அம்மா' என்ற வார்த்தையை சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமான உணர்வு நம்மில் ஏற்படுகிறது. ஆனால் நாம் நாகரிகமாக நினைத்து 'மம்மி' என்று அழைக்கிறோம். தாய்மொழியில் நம் அன்னையை அழைக்கும்போது கிடைக்கும் அந்த உணர்வு, பிற மொழிகளில் நிச்சயம் கிடைக்காது. எப்போதும் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் தாய்மொழி. அடுத்தது சகோதர மொழி. பின்னர்தான் வேற்றுமொழி. தாய்மொழியின் சிறப்பு அளவிட முடியாதது. நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது.

    எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. தாய் பாடும் தாலாட்டு அளப்பரிய இசை. இப்போது தாலாட்டை எங்கே கேட்க முடிகிறது. அதையெல்லாம் மறந்து போய்க்கொண்டு இருக்கிறோம். குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும்.

    காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும். அப்போது நம்மிடையே உற்சாகம் ஏற்படுவதை உணர முடியும். இதையெல்லாம் செய்யாமல் யூ-டியூப்பில் மூழ்கி கிடக்கிறோம். எனவே இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடுவுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் பரிசளிக்கப்பட்டன.

    விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் மனைவி சாவித்ரி, சகோதரர் ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும்.
    • பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது.

    மத்திய மந்திரி எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.

    பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வெங்கையாநாயுடு பேசியதாவது:-

    நாட்டில் அரசியல், நீதித்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும், குறிப்பாக நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் முறை கூடாது.

    அதேவேளையில் அரசும் நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. இதற்காக நீதித்துறை ஆணையம் என ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

    குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.

    குற்றப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீண்டகாலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவர்கள் பதவியில் இருந்து கொண்டு அனைத்து பலன்களையும் அனுபவித்த பின்புதான் அந்த வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.

    எனவே, இதுபோன்ற வழக்குகளுக்காக சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் கூட தற்போது வரை நிலுவையில் இருப்பது அவமானத்துக்கு உரியது.

    ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும். எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும் தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்த கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் தங்களது கருத்துக்களை நியாயமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய வேண்டுமே தவிர, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது.

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் முறையிட்டனர். இதனை மேலும் தாமதம் செய்யாமல், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஆந்திர மாநில எம்.பி. பீடா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் திராவிடர் தேசம் கட்சி தலைவர் கிருஷ்ணாராவ், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் வெங்கையாநாயுடுவுக்கு பொன்னாடை, பூங்கொத்து, புத்தகம் போன்றவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.
    • சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.

    இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
    • ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

    மும்பை:

    எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.

    இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.

    கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?
    • இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது.

    முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய நடிகர் விஷால், "தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டுகிறேன். தமிழகத்தில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. "ஒரே வரி ஒரே நாடு" என்று நீங்கள் கூறிய போது உங்களை நம்பினேன், எனினும் ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?"

    "உண்மையில் இது திரைத்துறையை பெரிதும் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. திரைத்துறை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது."

    "யாரும் இழப்பை பற்றி வெளியில் பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை, அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

    • நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள்.
    • அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைகழகம் சார்பில் மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி தொடக்க விழா நேறறு நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதியை திறந்து வைத்தும், மாணிக்க விழா மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன்பின் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    மாணிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் யோசனை, அனுபவம் மற்றும் திட்டங்கள் தான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணம் ஆகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளார். 4 தலைமுறைகளை கண்டவர். அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். அவருடைய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணமாகும். அவர் 1984-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கினார். 2001-ல் இது பல்கலைக்கழகமாக மாறியது. முதலில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்பொழுது 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

    அடுத்து அவர் டெல்லியில் தன்னுடைய பல்கலைகழகத்தை தொடங்க வேண்டும். இவர் சமூக உயர்வுக்காக பாடுபட்டவர். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகாரம் செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அதனால் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள். அரசு வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கலை தீர்த்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இன்னும் மக்களுக்கு அதிகமான உதவிகள் விரைந்து தேவைப்படுகிறது.

    எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. அரசே அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

    தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும். மாணவர்கள் பெரியவர்களை மதித்து நடப்பதோடு தங்களுடைய குறிக்கோளை மறந்து விடக்கூடாது. இன்றைய மின்னணு சாதனங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அதனை கவனமுடன் கையாள வேண்டும். தேவைப்படும்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போனை கொடுக்க வேண்டும். தற்போது செல்போனிலேயே அதிக நேரம் மாணவர்கள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடித்தால் தங்களது அப்பா, மனைவி பெயரை சொல்வதற்கு கூட கூகுளை தான் தேடும் நிலை ஏற்படும்.

    அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். நடு ஜாமத்தில் தூங்க செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். மாணவர்கள் உயர்வாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

    பீட்சா, பர்கர் எல்லாம் இந்தியாவின் உணவு இல்லை. இவை அனைத்தும் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவாகும்.

    நாம் புரோட்டின் மிகுந்த சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.

    நீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.

    ஓட்டு என்பது சக்தி வாய்ந்தது. உங்களுடைய ஓட்டு உங்களுடைய தலை எழுத்தை மாற்றும்.

    எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எத்தனை மொழியை கற்றுக் கொண்டாலும் தங்களது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

    முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாய்மொழி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமாக வலியுறுத்தியதே அவர்தான்.
    • தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும்.

    இந்தி மொழி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும் என்ற முன்னாள் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கருத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தாய்மொழி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிகமாக வலியுறுத்தியதே அவர்தான்.

    * இந்தியை சார்ந்திருக்கின்ற, வடநாட்டை சார்ந்தவர்கள் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

    * நம்முடைய தமிழ்மொழியிலும் இருமொழிக்கொள்கையை பின்பற்றும்போது, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர் சொன்ன கருத்து ஆச்சரியத்திற்குரியதாகவே பார்க்கிறேன் என்று கூறினார்.

    • புதிய மாநில தலைவருக்கான தேர்வும் நடந்து வருகிறது.
    • தேர்தல் பார்வையாளரான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அடுத்த வாரம் வருகிறார்.

    சென்னை:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேத்தி திருமண வரவேற்பு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமுத்திரா அரங்கில் நடக்கிறது. இந்த திருமண விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    தமிழக பா.ஜ.க.வில் புதிய மாவட்ட தலைவர்கள் முதல் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 33 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். 20 மாவட்ட தலைவர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய மாநில தலைவருக்கான தேர்வும் நடந்து வருகிறது. தேர்தல் பார்வையாளரான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அடுத்த வாரம் வருகிறார். அப்போது மாநிலத் தலைவரும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.

    குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை தந்தார்.

    சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.

    இந்நிலையில், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    அமித்ஷாவின் வரவை முன்னிட்டு சென்னைவியில் சில பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக அமித்ஷா செல்ல இருப்பதால் அந்த சாலையில் செல்ல மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.

    திருப்பதி:

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரன் விஷ்ணுவின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம், கோத்தப்பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    நான் தற்போது அரசியலில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை என்றார்.

    தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.

    முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் தற்போது தான் அரசியலை இல்லை என பேசியது பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    ரூ.1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.

    மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

    இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம்வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கின்றேன்.

    கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். பன்முகத் தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்.

    என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நாட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம்.

    கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். சொலல் வல்லன் சோர்விலன் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குரலுக்கு பொருந்துபவர் கலைஞர்.

    தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர்.

    மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    தாய்மொழி, தாய்நாடு ஆகியவையே மிகவும் முக்கியமானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.

    வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன்.  இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.

    மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர்.

    தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்.. எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
    ×