என் மலர்
நீங்கள் தேடியது "vinayagar temple"
- பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.
ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.

இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
- ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்.
- திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
கோவில் மாநகரம் என்று போற்றப்படும் கும்பகோணம் மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீபகவத் விநாயகர். இவர் ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்கரையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் வேதாரண்யம் திருத்தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என்னை தகனம் செய்த பின் அந்த அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துப் புனிதத் திருத்தலங்களில் ஓடும் நதிக்கரைக்கு எடுத்துச்செல். எங்கு என்னுடைய அஸ்தி பூக்களாக மலர்கிறதோ அங்கு ஓடும் புனித நதியில் முறைப்படி கரைத்து விடு' என்று சொல்லி விட்டு உயிர்துறந்தார்.
அன்னை சொன்னதுபோல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து ஓர் ஓலைக் கூடைக்குள் பத்திரப்படுத்தி துணியால் மண் கலசத்தின் வாய்ப்பகுதியை மூடி, மூட்டையாகக் கட்டினார். பகவத் முனிவர், தன் சீடர்களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயணமானார்.
'புனிதத்திருத்தலமான காசியில் ஓடும் கங்கைக் கரையில் தான் தன் அன்னையின் அஸ்தி, பூக்களாக மலரும்' என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தவர். வழியில் கும்பகோணம் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவிரியில் நீராட விரும்பினார். தன் தாயின் அஸ்தி உள்ள கலசக் கூடையை, அங்கு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர். தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, காவிரியில் நீராட சென்றார்.
குருநாதர், காவிரியில் நீராடிக் கொண்டிருக்கும் போது, சீடனுக்குப் பசி எடுக்கவே, 'கூடையில் உள்ள மண் பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும்' என்று எண்ணியவன், அஸ்தியுள்ள மண்பாண்டமான கலசத்தைத் திறந்து பார்த்தான். மண் கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப் பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பு உள்ளது போல் மூட்டையைக்கட்டி பத்திரப்படுத்தி விட்டு, குருநாதருக்காகக் காத்திருந்தான்.
நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர், விநாயகருக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
சில நாட்களில் காசியை அடைந்த முனிவர், அங்கே ஓடும் புனித நதியான கங்கையில் நீராடி விட்டு, அஸ்தி கலசத்திற்குப் பூஜை செய்த பின், திறந்து பார்த்தார். அந்த மண் கலசத்திற்குள் எலும்பு மற்றும் சாம்பல் அப்படியே இருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது, பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சீடன் இந்த நிகழ்வுகளை அதிசயத்துடன் பார்த்தான்' கும்பகோணத்தில் இந்தக் கலசத்திற்குள் இருந்த மலர்கள். இங்கே எப்படி அஸ்தியாக மாறியிருந்தது!" என்று குழம்பினான். பகவத் முனிவர் தனக்குள், "அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறதே" என்று முணு முணுத்தார்.
முனிவரின் நிலையை அறிந்த சீடன். "குருவே, என்னை மன்னித்து விடுங்கள். இது அஸ்தி கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவிரியில் நீராடும் போது எனக்குப் பசி எடுக்கவே, மண் கலசத்திற்குள் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று கலசத்தை மெதுவாக திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்திற்குள் பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. இப்பொழுது, எலும்பும் சாம்பலுமாக அஸ்தி நிறைந் திருக்கிறதே. அது எப்படி என்று தெரியவில்லை?" என்றான் பயத்துடன். இதை ஏன் அங்கேயே கூறவில்லை?" என்று கோபித்துக் கொண்ட முனிவர். மீண்டும் கும்பகோணம் நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

கும்பகோணம் வந்தடைந்ததும், முன்பு நீராடிய காவிரிக் கரைக்கு வந்து, காவிரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன், அஸ்திக் கல்சத்தை வைத்துப் பூஜித்து விநாயகரை வேண்டினார். பிறகு, பயபக்தியுடன் கலசத்தைத் திறந்து பார்க்க அதிலிருந்த அஸ்தி, பூக்களாக மலர்த்திருந்தது கண்டு மகிழ்ந்தார்.
தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களை காவிரிக்கரையில் மேற்கொண்டு, பிதுர் பூஜைகள் செய்தபின், மலர்களாக மாறியிருந்த அஸ்திக் கலசத்தை காவிரியில் கரையச் செய்து மறுபடியும் வழிபாடு செய்தார் முனிவர்.
இதனால்தான் காசியைவிட மிக உயர்ந்தது கும்பகோணம் திருத்தலம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே 'பகவத் படித்துறை' (பகவத் தீர்த்தம்) என்றும் முனிவர் வழிபட்ட விநாயகர், பகவத் விநாயகர் என்றும் போற்றப்படுகிறது.
அரசமரத்தடியிலிருந்த விநாயகருக்கு, அங்கு வசிக்கும் பக்தர்கள் உதவியுடன் காவிரிக் கரைக்கு அருகில் ஒரு கோவில் கட்டினார்.
அதுதான் இன்று மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோவில் ஆகும்.
கும்பகோணம் மடத்துத் தெருவில் கிழக்கு திசை நோக்கி உள்ள இக்கோவில் ஆரம்ப காலத்தில் காவிரிப் படித்துறைக்கு அருகிலேயே இருந்தது. கால ஓட்டத்தில் காவிரி நதி குறுகி விட்டதால் தற்போது இக்கோவில் தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.
'இந்த ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்' என்று தல புராணம் கூறுகிறது. இவர், சூரியனை நெற்றியிலும், சந்திரனை தாபியிலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும் சனியை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு அருள்புரிகிறார்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் இந்த விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் போக்கி அருள்புரிவார் என் பது ஐதீகம்.
மிகவும் பழமையான கோவிலான இந்த ஆலயம் இன்று பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
காஞ்சி மகா பெரியவர். கும்பகோணம் சங்கர மடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம் என்று கூறுகிறார்கள். 1952-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரமவு லீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது, காஞ்சி மகா பெரியவர், அந்த யானையின் இரண்டு தந்தங்களையும் விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்றடி உயரமுள்ள இரு தந்தங்களை விநாயகரின் இருபுறமும் அலங்காரமாக வைக்க அருளினார். அதன்படி இருபுறமும் தந்தங்களுடன் அருள்புரியும் ஸ்ரீபகவத் விநாயகர் சுமார் இரண்டடி உயரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
- வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடியாபுரம் தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன்பு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கை பத்மாவதி தாயார்அலங்கரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், மாரிக்கண்ணன், செல்வம், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
குன்னூர்,
குன்னூர் நகரில் நூற்றாண்டு பழமை மிக்க விநாயகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக கோவிலில் பாலாய நிகழ்ச்சி நடந்தது. கணபதி ஹோமம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை கோவில்பட்டி மத்திய பகுதி ம.தி.மு.க. ஒன்றிய செயலா ளரும், கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் மணிமாலா சின்னத்துரை, பஞ்சாயத்து தலைவர் சுந்தரி காளியப்பன், துணைத் தலைவர் பாண்டி முனியம்மாள், குமரன், கார்த்தி, மாரியப்பன், ரமேஷ், கமல், பரமகுரு, பொன் ரவி, மற்றும் ேகாவில் கமிட்டி நிர்வாகத்தினர், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
- காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பிரிவில் உள்ள செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடா்ந்து கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
முன்னதாக 4-ந்தேதிஅதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தீா்த்தக்குடம் எடுத்தலும், இரவு 9 மணிக்கு விமான கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
- திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.
- இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள்.
கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சி அருகே உள்ளது திருவானைக்கா. சீர்காழி அருகே உள்ளது திருக்கோலக்கா. திருத்துறைப் பூண்டி அருகில் திருநெல்லிக்கா, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகில் திருகுரங்குக்கா, கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இந்த ஐந்து திருத்தலங்களும் 'பஞ்ச கா தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
'கா' என்பதற்கு 'சோலை' என்று பொருள். இதில் திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசா் இருவரும் தேவாரப் பாடல் பாடிய இந்த தலம், காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது.
இதனை தற்போது 'திருக்கோடிக்காவல்' என்று அழைக்கிறார்கள். செம்பியன் மாதேவி திருப்பணி செய்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. `திரிகோடி' என்பதே `திருகோடி' என்று மருவியதாக சொல்கிறார்கள். திருகோடி என்பதற்கு மூன்று கோடி என்று பொருள். அதாவது மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம் இது என்பதால், இதற்கு 'திருக்கோடிகா' என்ற பெயர் வந்தது.
முக்திக்காக மூன்று கோடி மந்திர தேவதைகளும் இங்கே தவம் இருந்ததாக, தல வரலாறு எடுத்துரைக்கிறது. அவர்கள் தவம் இருந்த வேளையில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டனர். விநாயகரும், அந்த மூன்று கோடி மந்திர தேவதைகளையும் வெள்ளத்தில் இருந்து கரையேற்றி அருள்பாலித்தார். அப்போது அங்கு வந்த அகத்தியர், மணலால் விநாயகர் சிலை வடித்து, மந்திர தேவதைகளுக்கு உபதேசம் செய்தார்.
மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சகஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருநாமங்கள்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். மந்திர தேவதைகளை, வெள்ளத்தில் இருந்து கரையேற்றிவர் என்பதால், இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது. இந்த விநாயகருக்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்துவிதமான சாபங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை கேகே தாழை சிவபாலன் 1-வது தெருவில் சாலையை ஆக்கிரமித்து 400 சதுர அடியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அகற்றக்கோரி ஒருவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற நீதிமன்றம் சென்னை மாநகராட்சி மாதவரம் 3.வது மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் இன்று காலை மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலையை அகற்ற சென்றனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையில் பால்பண்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மண்டல அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் விநாயகர் கோவிலை இடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் பால் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் வெள்ளை யானையை சிவபெருமான் அனுப்பினார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரர். இதை அறிந்த சுந்தரரின் தோழரான சேரமான் பெருமான், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரர் ஏறிச் சென்ற யானையைச் சுற்றி வந்து அவரும் திருக்கயிலாயம் புறப்பட்டார்.
சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் கயிலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் பெரியநாயகி சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். மேல் இருந்து கீழே பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.
கயிலாயம் சென்று பரமேஸ்வரனை தரிசிக்க, யாருக்குத் தான் ஆசை இருக்காது. அவ்வைப் பாட்டி ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, விநாயகர் பூஜையை விரைவாக முடிக்க எண்ணி பதற்றத்துடன் செயல்பட்டார்.
அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது. அந்தக் குரல் பெரிய யானைக் கணபதிக்குரியது. ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம் போல் நிதானமாகவே செய்! ‘திருக்கயிலாயம் செல்ல முடியாதோ’ என்ற கவலை வேண்டாம். சுந்தரரும், சேரமானும் கயிலை மலையை அடைவதற்கு முன்னதாகவே, உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன்’ என்றது அந்த அசரீரி.
தன்பால் விநாயகப்பெருமான் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ந்த அவ்வை, ‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைபாட...’ எனத் தொடங்கி பாடினார். அந்த பாடல் தான் ‘விநாயகர் அகவல்’ என்று அழைக்கப்படுகிறது.
அவ்வை தனது வழிபாட்டை முடித்ததும், விநாயகப்பெருமான் அவர் முன் தோன்றினார். அடுத்த நொடியே துதிக்கையால் அவ்வைப் பாட்டியை தூக்கி, கயிலாயத்தில் சேர்த்தார். விநாயகர், அவ்வையை திருக்கயிலையில் சேர்த்த பிறகு தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் கயிலையை அடைந்தார்கள்.
ஒரு குறிக்கோளை மனதில் இருத்தி, அச்செயல் வெற்றிகரமாக நிறைவேற ‘விநாயகர் அகவல்’ பாராயணம் செய்வது நல்லது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குலசேகர விநாயகரை, சங்கடஹர சதுர்த்தி நாளில் 11 முறை விநாயகர் அகவல் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். மேலும் தொடர்ச்சியாக 8 சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாத்தி, நெய் தீபம் ஏற்றி விநாயகர் அகவல் பாடினால் நன்மைகள் பல வந்து சேரும்.
உலகை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்தபோது, தென்குமரியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த அந்த சிவலிங்கம் ‘அகஸ்தீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. அகத்தியர் பூஜித்த திருத்தலம் ‘அகஸ்தீஸ்வரம்’ எனப்படுகிறது. இப்படி குறுமுனி அகத்தியர் பூஜித்த அகஸ்தீஸ்வரத்தில் ‘வாமன ரூபன்-மகேஸ்வர புத்திரன்' என அழைக்கப்படும் விநாயகர் விரும்பிக் கோவில் கொண்டார். அவரே குலசேகர விநாயகர் ஆவார்.
தமிழ் மாதப் பிறப்பு, வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில், இத்தலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று அந்திப்பொழுதில் குலசேகர விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவுலா வரும் பெருநிகழ்வு நடைபெறுகிறது. குலசேகர விநாயகர் ஆலயத்தில் கருவறை தீபத்தில் நெய் சேர்த்து வழிபட்டு வந்தால் திருமணத்தடைகள் அகல்கிறதாம். குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் புதன்கிழமைகளின் அந்திப்பொழுதில் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டுவந்தால் குலம் தழைக்க குழந்தைச்செல்வம் கிட்டும் என்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் குலசேகர விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, சிதறுகாய் உடைத்து கருவறையில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வந்தால் வறுமை, தரித்திரம் அகலும். செய்தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். இத்தல விநாயகருக்கு அவல், கொழுக்கட்டை, மோதகம் படைத்து வழிபடுவது சிறப்பு. கல்வி அறிவில் சிறக்க அனுதினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்து அருகம்புல், எருக்கு சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் தேன், பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.
ஓர் இரவில் கட்டப்பட்ட ஆலயம்
அகஸ்தீஸ்வரத்தில் குலசேகர விநாயகருக்கு ஆலயம் எழுப்பியபோது, அப்போதைய திருவிதாங்கூர் மன்னன் தடை விதித்தானாம். இதனால் ஆலயம் எழுப்பிய அடியவர்கள், ஒரேநாள் இரவில் குலசேகர விநாயகர் ஆலயத்தைக் கட்டிமுடித்தனர். இதனை அறிந்த மன்னன் இரவோடு இரவாக தம் படைவீரர்களை அனுப்பி ஆலயத்தை இடித்துவிட உத்தரவிட்டான். உடனே புறப்பட்டு வந்த படைவீரர்கள், இத்தலத்தை நெருங்கும் போது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பூஜைகள் ஆரம்பமாகியதால், படைவீரர்கள் கோவிலை இடிக்காமல் சென்று விட்டதாக ஒரு செய்தி உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்திலும், சுசீந்திரம் அடுத்துள்ள கொட்டாரத்தில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் திருக்கோவில் அமைந்து உள்ளது.
ஈசனிடம், ‘என்னைக் கொல்பவன் மனிதனாகவும் இருக்கக்கூடாது; மிருகமாகவும் இருக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல வரங்களைப் பெற்றான், கஜமுகன்.
அந்த வரத்தினால் ஏற்பட்ட அகந்தையால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அதை அறிந்த சிவபெருமான், திருக்கயிலாய மலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபத்தில் பார்வதியோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே ‘சமஷ்டிப் பிரணவம்’, ‘வியஷ்டிப் பிரணவம்’ என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன.
சிவபெருமானும் பார்வதியும் அந்த இரண்டு பிரணவங்களையும் நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடனும், மனித உடலுடனும் விநாயகர் அவதரித்தார். ‘சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர்’ என்று மகா புராணங்களில் ஒன்றான ‘லிங்க புராணம்’ கூறுகிறது.
ஒரு முறை சிவபெருமானும் அம்பிகையும் திருக்கயிலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அச்சமயம் திருச்சுவற்றில் உள்ள ஒரு யானை வடிவ சிற்பத்தின் மேல் இறைவன்- இறைவி இருவரின் திருப்பார்வையும் ஒரு சேரப் பதிகின்றது. சிவ-சக்தியின் திருப்பார்வை கடாட்சத்தையேக் கொண்டு அச்சிற்பத்தில் இருந்து விநாயகர் வெளிப்பட்டு அருளினார் என்கிறது விநாயக புராணம்.
இந்நிகழ்வினையே திருஞானசம்பந்தர், திருவலிவலத் திருப்பதிகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே'
இதன் பொருள், ‘சிவபெருமானும் பார்வதியும் ஆண்-பெண் யானைகளின் திருவடிவம் தாங்கிய பின்னர், அவ்விருவரின் திருப்பார்வை சங்கமத்தால், இடர்களை நீக்கும் கருணைக் கடலாக விநாயகர் அவதரித்து அருளினார்' என்பதாகும். பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை ‘ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். ‘யாராக இருந்தாலும் ஒரு செயலைத் தொடங்குமுன் முதலில் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது' என்று விநாயகப் பெருமானுக்கு சிவபெருமானும், பார்வதி தேவியும் அருளினார்கள்.
இந்த நிலையில் தான் கஜமுகாசூரனின் தொல்லையை பிரம்மா, விஷ்ணு புடைசூழ திருக்கயிலாயம் வந்த தேவர்கள், சிவபெருமானிடம் கூறி முறையிட்டனர். உடனே சிவபெருமான், விநாயகரை அழைத்து கஜமுகாசூரனை வென்று தேவர்களைக் காத்திடுமாறு அருளினார். விநாயகப்பெருமானும் கஜமுகா சூரனை வென்று தேவர்களைக் காத்தார்.
கஜமுகாசூரனை அழித்ததால் விநாயகப்பெருமானுக்கு தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பூலோகத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. கணபதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட இறைவன் என்பதலால், அவருக்கு ‘கணபதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இத்தலத்திற்கு ‘கணபதீச்சரம்’ என்று பெயர். விநாயகப்பெருமான் இங்குதான் கஜமுகாசூரனை வதம் செய்ததாகவும், அசுரனின் செங்குருதி (ரத்தம்) பெருகி, காட்டாறாக பெருகியதால் இத்தலத்திற்கு ‘திருச்செங்காட்டங்குடி’ என்னும் திருப்பெயரும் உண்டு.
ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், மூலவரான ஆத்திவன நாதர் என்னும் கணபதீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாய் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். சிறுத்தொண்டருக்காக இத்தல ஈசன் பைரவர் வடிவில் வந்து அருளியதால் ‘உத்தராபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். மூலவரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் உத்தராபதீஸ்வரர் தனி விமானத்துடன் உற்சவ மூர்த்தியாக உள்ளார். திருக்கரங்களில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் காணப்படுகிறார். தினமும் இவருக்கு பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் சார்த்தப்படுகின்றது.
தன் பக்தை ஒருத்திக்காக பிரசவம் பார்த்த இத்தல அம்பாளின் திருநாமம் ‘சூளிகாம்பாள்’ என்பதாகும். இத்தல அம்பாளை வழிபட தாய்மை அடைந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிறார்கள். பி்ரம்மஹத்தி தோஷங்கள், கொடிய பாவங்கள், குலசாபம் அகல இத்தல கணபதி, ஈசன், அம்பாள், பைரவர் ஆகியோரை வழிபடுவது சிறப்பு.
இத்தல கணபதீஸ்வரர் கருவறையில் பசு நெய் சேர்த்து வழிபட்டு, அன்னதானம் செய்தால், பாவங்கள் விலகும் என்கிறார்கள். இங்கு சங்கடகர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சதயம் நட்சத்திர நாட்களில் வாதாபி கணபதி, கணபதீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட தோஷங்கள், தடைகள் அகன்று செல்வ வளமும், உடல்நலமும் கை கூடும். இங்கு சம்பந்தரும், பிள்ளையாரும் ஒரே சன்னிதியில் உள்ளது சிறப்பம்சமாகும்.
இத்தல ஈசனை திருநாவுக்கரசர், ‘உருகு மனத்தடியவர்கட்கு ஊறுந்தேன்' என்கிறார்.
ஆம்! பக்தர்கள் மனதில் என்றும் ஊறும் தேனாய் விளங்கும் திருச்செங்காட்டங்குடி ஈசனையும், விநாயகரையும் கண்டு வழிபடுவோம்.
சிறுதொண்ட நாயனார் :
நரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சிறந்த சிவ பக்தர். இவர் மன்னனின் ஆணைப்படி வடக்கே உள்ள வாதாபியைக் கைப்பற்றி, அங்கிருந்த கணபதி சிலையின் மேல் காதல்கொண்டு அக்கணபதியை எடுத்து வந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்தார். பின் தினமும் அந்த ‘வாதாபி கணபதி’யையும், அத்தல ஈசன் கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் வழிபட்டு வந்தார். பின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் தன் ஊரான திருச்செங்காட்டங்குடியிலேயே சிவத்தொண்டை மேற்கொண்டார். இந்த பரஞ்சோதி, வேறு யாரும் அல்ல.. அடியவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்ட இறைவனுக்கு தன் குழந்தையையே சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனார் தான் இவர்.
சிறுதொண்டரின் சிவ பக்தியை சோதிப்பதற்காக இறைவன் பிள்ளைக் கறி கேட்க, தன் பிள்ளையையே சமைத்துக் கொடுத்தவர். சிறுதொண்டர் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, குழந்தை சீராளன், பணிப்பெண் சந்தன நங்கை ஆகிய நால்வருக்கும் முக்தி அளித்தவர், திருச்செங்காட்டங்குடி திருத்தல இறைவன்.
பொதுவாக சிவனடியார்களுக்கு ஈசன் உமையுடன் ரிஷபத்தின் மேல் அமர்ந்து காட்சி கொடுப்பார். ஆனால் சிறுதொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் சேர்ந்து காட்சி கொடுத்தார். சிறுதொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை நால்வருக்கும் திருச்செங்காட்டங்குடி ஆலயத்தில் சன்னிதி உள்ளது.
அமைவிடம்
காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருச்செங்காட்டங்குடி. இத்தலத்தின் மிக அருகில் திருசீயாத்த மங்கை, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்துள்ளன.